Nov 20, 2009

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்

புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

விருப்ப மொழியில் குர்ஆன்