Dec 14, 2007

கதையல்ல நிஜம்



பெருநாள் தொழுகை முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் பள்ளிவாசலிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அவசரமாகப் புறப்பட்டுவிட்டனா. தள்ளாத வயதில் அந்த முதியவர் நிதானமாக கடைசியாகப் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்.பள்ளிக்கு வெளியே ஒரு இளைஞன் அந்த முதியவருக்குப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக் காத்து நிற்கிறான்.. வெளியில் வந்த முதியவருக்கு கை கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறுகிறான் பதிலுக்கப் பெரியவரும் அந்த இளைஞனுக்குப் பெருநாள் வாழ்த்துத தெரிவிக்கிறார்.. இளைஞன் புறப்படத் தயாராகும் போது அந்தப் பெரியவர் இளைஞனிடம் 'தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

ஒரு சின்ன பிளாஷ் பேக்

அந்த ஊரில் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் அந்த முதியவர் பல் வருடங்களுக்கு முன்னர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியவா என்பதால் ஊர் மக்கள் அனைவராலும் 'ஹாஜியார்' என்றே அழைக்கப்பட்டார். மிகவும் கண்ணியமானவர். தொழுகை இபாதத்துகளில் மிகவும் பேணுதலானவர்.. அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர். ஹாஜியார் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட அம்முதியவரின் இயற் பெயர் குலாம் மைதீன்.

சென்ற வாரம் அந்த இளைஞன் அம்முதியவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தான். 'தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். தாங்கள் தவறாக நினைக்க் மாட்டீர்களே! என்று அந்த இளைஞன் பீடிகையுடன் தம் பேச்சைத் துவங்கினான்.. அதற்கு அம்முதியவா 'தம்பி தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யார் சொன்னாலும் நல்லதை நான் ஏற்றுக் கொள்வேன் எனது தவறுகளைத் திருத்திக் கொள்வேன்' .என்றார்.

தங்கள் பெயர் தவறாக உள்ளது. குலாம் மைதீன் என்றால் மைதீன் எனப்பேச்சு வழக்கில் சொல்லப்படும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)அவர்களின் (சேவகன்) அடிமை என்று பொருளாகிறது. நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் அல்லவா? எனக்கேட்டான்.. அதற்கு அம்முதியவர் கோபப்படாமல் மிகவும் நிதானமாக 'தமபி! தாங்கள் சொல்வது நியாயம் தான். இப் பெயர் எனது பெற்றோர் எனக்கு சூட்டிய பெயர். இதில் எனது தவறு எதுவுமில்லையே! எனது தவறு என்றால் நான் திருத்திக் கொள்வேன். அறியாமையால் எனது பெற்றோர் இப்படிப் பெயர் வைத்து விட்டனர். அல்லாஹ் அவர்களின் குற்றத்தை மன்னிக்க வேண்டும். நான் எனது பெயரை இனி மாற்றிக் கொள்கிறேன். தாங்களே ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து எனக்குச் சொல்லுங்கள்" எனக் கூறவே அந்த உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று தான் அந்த இளைஞன் அம்முதியவரைச் சந்திக்கிறான். அது பற்றித்தான் அம்முதியவா அவ்விளைஞனிடம் வினவுகிறார். .தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

அந்த இளைஞன். 'தாங்கள் என்னை விட அதிகம் அறிநதவர் இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லவே அம்முதியவர் அப்படியானால் 'தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பெயரை நான் வைத்துக் கொள்ள தாங்கள் அனுமதி தருவீர்களா? எனக்கேட்க 'தங்கள் விருப்பப்படி வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எநத ஆட்சேபனையும் இல்லை என்று சொல்ல, உடனே அந்த முதியவர் 'சரி அப்படியானால் இன்று முதல் இந்த நேரம் முதல் எனது பெயர் குலாம் மைதீன் அல்ல இனி நான் அப்துஸ்ஸலாம்.என அழைக்கப்படுவேன். இது எனக்கும் தங்களுக்கும் தெரியும். இதற்கு அல்லாஹ்வே சாட்சி என்றார்கள். ஒரு அருமையான பெயர் சூட்டு விழா அழகாக நடந்தேறியது.

முதியவரிடம் விடைபெற்ற அந்த இளைஞன் பள்ளிவாசலிலிருந்து மிக அருகிலிருக்கும் தன் வீட்டுக்கு சென்றடைந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளிவாசலை நோக்கி சிலர் வேகமாக ஓடுவது தெரிந்து 'என்ன?" என்று விசாரித்தபோது 'பள்ளிவாசல் திண்ணையில் ஹாஜியார் அவாகள் இறந்து விட்டார்கள்'' என்னும் செய்தி அந்த இளைஞனை அதிர்ச்சியுறச் செய்தது

அந்த இளைஞன் ஹாஜியாரைச் சந்தித்து உரையாடியதற்கும் ஹாஜியாரின் மரணச் செய்தியை இளைஞன் செவியுற்றதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவு. ஹாஜியார் கடைசியாகப் பேசியது அந்த இளைஞனிடம் தான். கடைசியாகப் பேசிய வார்த்தைகள் 'இனி இந்த நேரம் முதல் நான் அப்துஸ்ஸலாம் என அழைக்கப்படுவேன். இதற்கு அல்லாஹ்வே சாட்சி" இந்த இனிய வார்ததைகளுடன் ஒரு இறைநேசரின் ஆன்மா பிரிந்து விட்டது.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

உறவுகளையும் ஊர் மக்களையும் பொறுத்தவரை குலாம் மைதீன் ஹாஜியார் ஆனால் அந்த இளைஞனையும் அல்லாஹ்வையும் பொறுத்தவரை அப்துஸ்ஸலாம் என்னும் ஒரு நல்லடியார் இறந்து விட்டார். அனைத்து வகையிலும் நமக்குத் தெரிந்தவரை ஒரு நல்ல இறைநேசராக வாழ்ந்த அம்முதியவரிடம் இருந்த ஒரு குறையைக்கூட அல்லாஹ் இறுதி நேரத்தில் நிவாத்தி செய்து விட்டான்.

இது கதையல்ல நிஜம்

இச்சம்பவம் நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த மறக்கமுடியாத நினைவு மட்டும் அந்த இளைஞனின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது அந்த நல்ல இறைநேசரை இன்றளவும் அந்த இளைஞன் நினைவு கூர்கிறான். அந்த அற்புத நினைவை இன்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறான்.

ஆம் அந்த இளைஞன் அப்துஸ்ஸலாம் என்னும் நான்.

மரணிப்பதற்குச் சற்றுமுன் வரை குலாம் மைதீனாக இருந்து இறுதி நேரத்தில் தம் பெரை மாற்றிக் கொண்ட அப்துஸ்ஸலாம் என்னும் அந்த முதியவர், 'சாந்திவளாகம்' மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வஹாப்ஜி என்கிற அப்துல் வஹாப் அவர்களின் தந்தையும், பெரம்பலூர் சர்க்கார் சில்க ஹவுஸ் உரிமையாளர் ஹாமீம் அவர்களின் பாட்டனாரும் ஆவார்.
.

2 comments:

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ் போதுமானவன்!

இப்படி ஒரு
பாக்கியத்தை
பெற்ற தாங்கள்,

தாங்கள் ஒரு
எழுத்தாளர் என்னும்
முறையிலும்

இஸ்லாம்
விரும்பும் அழகிய
பெயர்களை தொகுக்களாமே...

காக்கா...! www.adiraipost.blogspot.com.

மஸ்தூக்கா said...

வாருங்கள் காக்கா! தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் வெகு வரைவில் எதிர்பாருங்கள்.

விருப்ப மொழியில் குர்ஆன்