Jan 16, 2008

அரபு நாட்டு வாழ்வு

வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே

உலக வரைபடம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மற்ற எல்லா நாடுகளையும் போல் வளைகுடா நாடுகளும் அந்த வரைபடத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால் எத்துனை பேருக்கு இந்த வளை குடா நாடுகளைப்பற்றி அப்போது தெரியும்? மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம்களின் புனித நகரங்களாக இருப்பதால் இவ்விரு நகரங்களைப் பற்றி வேண்டு மானால் முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இவ்விரு நகரங்களையும் உள்ளடக்கிய சவூதி அரேபியா என்ற நாட்டைப் பற்றிக் கூட முழுமையாக அறிந்தவர் மிகச் சிலரே.


எண்ணெய் வளம் என்னும் மாபெரும் பொக்கிஷம் இந்த பாலைவன மணலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட போது அகில உலகமும் தன் பார்வையை அரபு நாடுகளின் மீது பதித்தது. அகில உலகமும் எண்ணெய் உபயோகத்திற்கு ஆட்பட்டபோது அதன் வளத்தை வறண்ட அரபுப் பாலைவனத்தின் அடியில் உருவாக்கி உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக முஸ்லிம்களை ஆக்கிவைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.


1970 களில் வெளி உலகத்துக்குத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்ட வளைகுடா நாடுகள், வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை விட அதிக முன்னேற்றத்தை ஒரு பத்தாhண்டு காலத்தில் வளைகுடா நாடுகள் அடைந்தன என்றால் அது மிகையாகாது.


வளைகுடா நாடுகள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை செயல் படுத்து வதற்குத் தேவையான பொருளாதார ஆற்றல் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கப் பெற்றாலும், மனித வள ஆற்றலுக்கு கைகொடுத்த பெருமை மிக்கவர்களில் இந்தியர்களாகிய நம் பங்கு முக்கியமானது என்று சொல்லலாம்.


துவக்கத்தில் பர்;மா ரங்கூன் போன்ற நாடுகளையும், அதன் பின்னர் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் வளப்படுத்திய பெருமைக்குரியவர்களாகிய நம்மைச் சென்ற நூற்றாண்டில் வளைகுடா நாடுகள் தம் வாசற்கதவுகளைத் திறந்து வைத்து ஆரத்தழுவி வரவேற்றதையும், இன்றளவும் தொடர்ந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதையும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.


இன்று நாம் வாழும் செழிப்பான வாழ்வும், நமது பொருளாதார வளமும், வளைகுடா வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த பயன்களே. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற எத்தனையோ சகோதரர்கள் கற்பனையிலும் கண்டிராத வளமான வாழ்க்கை வாழ்வது இறைவன் நமக்களித்த இந்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தினால் தான் என்றால் அது மிகையல்ல.


வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றால் விழி பிதுங்கி நின்ற நமக்கு வளை குடா நாடுகள் தம் வாசற்கதவைத் திறந்து வைத்து வரவேற்ற போது இன் முகத்தோடு ஏற்றுக் கொண்டோம். வளை குடா நாட்டில் அடியெடுத்து வைத்த பின்னர் தான் நம்மில் பெரும்பாலானோரின் பொருளாதார வளம் மேம்பாடு அடைந்தது.கற்பனையில் கூட நாம் நினைத்துப் பார்த்திராத எண்ணற்ற வசதிகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரமே.


பெற்றோரை, உற்றாரைப் பிரிந்தோம், மனைவியுடன் வாழவேண்டிய இல்லற வாழ்க்கையை மறந்தோம். கொஞ்சிக் குலாவ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் பாசம் நமக்குக் கிடைக்காமற் போனது. இவையெல்லாம் உண்மை தான். பல சுகங்களைப் பெறுவதற்காக சில இழப்புகளை சந்திக்கத்தான் வேண்டும். அனைத்து சுகங்களையும் ஒருங்கே பெற்ற யார் தான் இந்த அவனியில் இருக்கின்றார்?


பொதுவாகவே வறுமை தான் மனிதனை சில சமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமே. பொருளாதாரத்தில் ஒருவன் ஏற்றம் பெற்றால் மற்றவைகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. பொருளாதாரத் தேவை நூறு சதவிகிதம் நிறைவு பெற்றதாக திருப்தி அடைந்த மனிதன் உலகில் யாரும் இல்லை என்றாலும், தமது அத்தியாவசித் தேவைகள் பூர்த்தியடைந்தவர்கள் பலருக்கும் இந்த வளை குடா வாழ்க்கை ஒரு வரமே.


மண் குடிசைகள் மாளிகைகளாக உருவெடுத்தன. மண் வீட்டில் கழித்த நாட்கள் நமக்கு இப்போதும் மறந்து விடவில்லை. ஆனாலும் இறைவனின் பெரும் கிருபையால் வசதிமிக்க மாடி வீடுகளில் இப்போது வசிக்கிறோமே. இதற்குக் காரணம் வளைகுடா வாழ்க்கை அல்லவா? வளைகுடாவில் வந்து மண் சுமந்தோம் என்றாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் மண் சுமக்கத் தேவையில்லாத அளவுக்கு அவர்களை மாடி வீடுகளில் வாழச் செய்து அவர்களின் துயர் துடைத்தோமே.


உடுத்த ஒரு துணிக்கு மாற்றுத் துணி இல்லாமல் சிரமப்பட்ட காலமெல்லாம் இப்போது போய்விட்டது. புத்தாடை என்றால் நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தான் அதுவும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நமது பெற்றோர் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த ஆடைகளை வேண்டா வெறுப்பாக அணிந்தோம். சக நண்பர்கள் அணிந்த சட்டைகளை ஏக்கத்துடன் பார்த்தோம். இன்று விதவிதமான ஆடைகளை அணிகிறோம்.


கட்டிய மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க இதயம் முழுக்க ஆசை இருந்தும் இருக்கின்ற பணம் போதாத நிலையில் இதயத்தை கல்லாக்கி சாதாரணப்புடவை வாங்கிக் கொடுத்தோம். இன்று அவள் விரும்பியபடி விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்து அந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நம் அன்புக் கண்மணிகளுக்கு வகை வகையான உடைகளை வாங்கிக் கொடுக்கிறோம்.


குளிர் சாதனப் பெட்டியும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும், ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துபவை என்ற நிலை மாறி இன்று நம் அனைவரின் வீடுகளையும் இந்த ஆடம்பரப் பொருட்கள் அலங்கரிக்கின்றன. பாழாய்ப் போன சீரியல்களில் மயங்கிப் போனவர்களை விடுங்கள், பயன்மிக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வழிவகுத்த பயனுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள் நமக்கு எப்படி வந்தன? இதற்கெல்லாம் தேவையான பொருளாதார வளம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


மேற்கல்வி கற்க வசதி இல்லாமல் ஆரம்பக் கல்வி கற்றதோடு நமது வாழ்வு அஸ்தமித்து விட்டாலும் நம் அன்புக் குழந்தைகளை இன்று மேற்கல்வி வரை தொடர வைத்தோமே! கல்வி வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் நம் குழந்தைகளளை இலட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியில் கல்லூரிகளிலும் பட்டம் பெற வைத்தோமே இதற்கெல்லாம் பொருளாதாரம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


முஸ்லிம்கள் நலனுக்காகப் பாடுபடும் எத்தனையோ இயக்கங்கள் அவர்களின் செயல்பாடுகளைச் சீரிய முறையில் செயல்படுத்தத் தேவையான மிகப் பெரும் பொருளாதார உதவிகளை வளைகுடா நாடுகளில் வசிக்கும் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் வாரி வாரி வழங்கி வருகின்றோமே. தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்கள் இதனைக் கொண்டு பயன் பெறுகிறர்hகளே பயன் பெற்ற நெஞ்சங்கள் வளைகுடாவில் பணிபுரியும் நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார்களே இதற்காகவாவது நாம் சில தியாகங்களைச் செய்தால் தான் என்ன?


புனித ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இயக்கங்களும் கடமையான ஃபித்ராத் தொகையை வசூலித்து பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் மகிழ்ச்சியாகப் பெருநாள் கொண்டாடி மகிழ்வதற்காக அனுப்பி வைக்கிறார்களே. நமது சமுதாயம் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செலுத்துகிறோமே. இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அல்லவா?


இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இங்கு நடைபெறும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டனர். அவரவர் தம் தாயகத்துக்கு விடுமுறையில் செல்லும் போது தத்தம் குடும்பத்தினருக்கும் உண்மையாண இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தம் குடும்பத்தினரையும் திருத்தினர். அதற்கான அத்துனை வாய்ப்புகளையும் நமக்கு இந்த வளைகுடா வாழ்க்கை தானே ஏற்படுத்தித் தந்தது.


தமிழகத்தின் சில ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்து கூலி வேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தங்கள் வாழ்நாட்களைக் கழித்தவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வந்து தமது கடின உழைப்பால் அபரிமிதமான பொருளீட்டி இன்று இறைவனின் பேரருளால் வாழ்வாங்கு வாழ்கின்றனர் இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இவர்களுக் கிடைத்த வரமல்லவா?


தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இயங்கி வரும் எத்தனையோ இஸ்லாமியக் கல்வி கூடங்கள் ஒரு காலத்தில் மிகவும் சிரமத்துடன் நாட்களை நகர்த்தின. அந்தக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்று பின்னர் வளைகுடா நாடுகளுக்கு வந்த, முன்னாள் மாணவர்களில் கொடைத்தன்மை மிக்க எண்;ணற்றோர் செய்த உதவிகள் மூலம் இன்று அந்தக் கல்விக் கூடங்களில் பல மிக நல்ல நிலையில் இயங்குவதுடன் ஏராளமான மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவே இதுவும் இறைவன் நமக்களித்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


பல்வேறு குண நலன் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நமது மாறுபட்ட குணங்களை மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும், இந்த வளைகுடா வாழ்க்கை நமக்கு பயிற்சியைத் தந்தது. பக்குவத்தை அளித்தது. பெற்றோருக்கு அடங்காமல் தான்தோன்றித் தனமாக தம் வாழ்க்கையைக் கழித்த எத்தனையோ இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டனர். கட்டுப்பாடான இந்த வாழ்க்கை அவர்களின் எதிர் காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வழி வகுத்தது.


நமக்குத் தேவையான உணவை நாமே சமைத்துக் கொள்ளும் போதும், நமது துணிகளை நாமே துவைத்துக் கொள்ளும் போதும் நம் வீடுகளில் நம் தாயோ மனைவியோ உணவு சமைக்கவும் துணி துவைக்கவும் படும் சிரமங்களை நம்மால் உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அதன் மூலம் அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பும் பாசமும் அதிகரித்தது.


தத்தம் இல்லங்களில் தமது துணிகளை மட்டுமின்றி தமது மனைவியின் துணிகளையும் துவைத்துக் கொடுத்து மனைவியிடம் நற்சான்று வாங்கிய நல்ல கணவன்மார்களை விட்டு விடுவோம். அப்பாடா! இப்போது நமது துணியை மட்டும் துவைத்தால் போதும் என்று மகிழ்ச்சியில் திளைப்பவர்களும் இருக்கிறார்கள். ('அனுபவம் பேசுகிறது' என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்) அப்படிப் பட்டவர்களுக்கும் வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே.


தம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைகளை காரணம் காட்டி வளை குடா வாழ்க்கை ஒரு சாபம் என்று சொல்லக் கூடிய பலரும் இன்னமும் வளைகுடாவில் வாழ்ந்துக் கொண்டு தான் நாக்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் சொல்பவர்களை யாரும் நிர்ப்பந்தப் படுத்தி வளைகுடாவில் வாழச் சொல்ல வில்லையே. இதனைச் சாபம் என நினைப்பவர்கள் தாராளமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லட்டும். அவர்களை யார் தடுத்தது? அவர்கள் தாங்கள் இந்த வரத்தை அனுபவித்துக் கொண்டே சாபம் என்று கூப்பாடு போடுகின்றனர்.


இதனைச் சாபம் என்று நினைப்பவர்களே தயவு செய்து உங்கள் தாயகங்களுக்குச் சென்று விடுங்கள். வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தை அனுபவிக்க இன்னும் இலட்சக் கணக்கானோர் தாயகத்தில் காத்திருக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு வழி விடுங்கள்.


இன்னும் ஏராளனமான சமுதாயப் பணிகள் போதிய பொருளாதாரமின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நாமும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஈட்டும் பொருளாதாரத்தில் எண்;ணற்ற ஏழைகளை வாழவைப் போம் என்ற நல்ல நோக்கத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வருவார்கள். அவர்களின் பொருளாதாரா உதவியால் அந்தந்த நாடுகளில் வாழும் அனைத்து சமுதாயத்தினரும் அளப் பெரும் நன்மைகளை அடையட்டும்.


சில வருடங்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு தாங்கள் மனம் திருந்தி (?) விட்டதாகச் சொல்லி பயணத்தை முடித்துக் கொண்டுச் சென்றவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவழித்து முடித்த பின் மேற் கொண்டு கடன் வாங்கிவிட்டு, வாங்கிய கடனை அடைப்பதற்காக தம் முன்னாள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மறுபடியும் ஒரு விசாவுக்காக ஏற்பாடு செய்யச் சொல்வதைக் கண்கூடாகக் காண்கிறோம்.


இவ்விதம் சாபம் என்ற கட்சியிலிருந்து வரம் என்ற கட்சிக்கு இடம் மாறியவர்கள் எத்தனையோ. வரம் என்ற கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த வகை மூலம் இன்னும் கூடிக் கொண்டுதான் போகின்றது. இவர்களைக் கேளுங்கள் தாங்கள் அறியாமல் சாபம் என்று சொன்னதற்காக கைசேதப் படுவது மட்டுமின்றி வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்று குன்றின் மீது ஏறி நின்று குரலை உயர்த்திச் சொல்வார்கள்.


குஜராத்தில் நம் இனத்தவர் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்கள் சூரையாடப்பட்டு வன் கொடுமையை அனுபவித்துத் திக்கற்றவர்களாக திசை தெரியாமல் தத்தளித்தபோது கோடிக் கணக்கில் வாரி வழங்கி அவர்களின் துயர் துடைத்த பெருமை வளைகுடா வாழ் சகோதரர்ளைச் சாரும். சாதி மத வித்தியாசமின்றி வாரிக் கொடுத்த வளைகுடா வாழ் நெஞ்சங்களை வாழ்த்திய அந்த குஜராத் நெஞ்சங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று வாயாரச் சொல்வார்கள்.


கோவையில் ஒரு இனவெறிக் கும்பல் கோரத்தாண்டவம் ஆடி அப்பாவி மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தியும், சூரையாடியும் நிர்மூலமாக்கிய போது, பொருளாதாரா ரீதியாக அந்நகர மக்களுக்குப் பேருதவி புரிந்தவர்களில் அதிக பங்களிப்பை நல்கியவர்கள் வளைகுடா வாழ் சகோதரர்கள் அல்லவா? வழங்கியவர்களும்,இந்து முஸ்லிம் என்று பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். அதைப் பங்கிட்டுக் கொடுத்தவர்களும் அவ்விதம் பேதம் பார்க்காமல் கொடுத்தார்கள். அந்தக் கோவை வாழ் மக்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று மனமாரச் சொல்வார்கள்.


இந்த நூற்றாண்டில் இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று தான் இணைய தளம் என்னும் அற்புதமான அருட்கொடை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துக் கொள்ளவும், தெரிந்துக் கொண்ட கருத்துக்களைப் பலருக்கும் எடுத்துரைக்கவும் மிக அருமையான ஊடகமான இஸ்லாமிய இணைய தளங்களும், மற்றும் வலைப்பதிவுகளும்,


இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்தும், உண்மையான இஸ்லாத்தை உலகறிய உரத்த குரலில் முழங்கும் இணைய தளங்களும், மற்றும் வலைப் பதிவுகளும்,

அவரவர் தனிப்பட்ட முறையில் தத்தம் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் இஸ்லாமிய வலைப்பதிவுகளும் இண்டர் நெட்டில் மலிந்துக் கிடக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை என்பதை இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுடன் அதிகத் தொடர்புடைய பலரும் அறிவர்.

தூய இஸ்லாத்தை தரணியெங்கும் வாழும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தவும், பலரையும் பயன்பெறச் செய்யவும் காரணமாக அமைந்தது கூட நமக்குக் கிடைத்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதற்கு அடுக்கடுக்காக இன்னும் பல காரணங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் சாபம் என்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே காரணம் இல்லற வாழ்க்கையின் இளமை இங்கேயே பாழாகி விட்டது என்பது தான். மீதமுள்ள அனைத்துக் காரணங்களையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள்.


எதிர்காலத் திட்டங்கள் சரியான முறையில் தீட்டப்படாமல் காலமெல்லாம் வளைகுடாவிலேயே கழிக்காமல் அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்தி வருமானத்துக்கு ஒருவழியை ஏற்படுத்திக் கொண்டு தத்தமது நாய் நாடுகளுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கலாமே. கட்டுரையின் தலைப்பு வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பது தான். தலைப்பு நிரந்தர வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பதல்ல. அப்படிப் பார்த்தாலும் சாபம் எனக் கூறுபவர்கள் கூட தங்களின் எதிர்கால வருமானத்துக்கு ஒரு வழியைத் தேடிக் கொள்ளவும், சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பாகிய வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதை மனமார ஒப்புக் கொள்வார்கள்
.

நம்மில் பலர் வறுமை நீங்கி வளவாழ்வு வாழ்வதற்கும், நம் எதிர்காலச் சமுதாயம் சிறந்து விளங்கிட நம்மால் இயன்றவரை நம் பங்களிப்பை நல்கியதற்கும், நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டதற்கும், நமது பழக்க வழக்கங்களைப் பண்படுத்திக் கொண்டதற்கும், நம் சமுதாய இயக்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதற்கு பொருளாதார ரீதியில் நாம் பேருதவி புரிவதற்கும், இப்படி எத்தனை எத்தனையோ நற்காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணமாகிய நமது வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்களித்த வரம் தான்.


வறுமைக் கோட்டுக் கீழ் வாழுகின்ற எண்ணற்றோர் தாயகத்தில் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் வளமான எதிர்காலக் கற்பனைகளோடும் வாடுகின்ற ஏராளமானோர் வளைகுடா வாழ்க்கை என்னும் கொழுக் கொம்பு நமக்குக் கிடைக்காதா? பற்றிப் பிடித்துக் கொண்டு முன்னேறி வர மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கின்றனர். சாபம் என நினைப்பவர்களே சற்று ஒதுங்கி வழிவிடுங்கள். வரம் என நினைப்பவர்கள் வந்து அனுபவிக்கட்டும்.



விருப்ப மொழியில் குர்ஆன்