Aug 14, 2007

அழகிய முகமன்

அஸ்ஸலாமு அலைக்கும்
மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

Aug 8, 2007

மறக்க முடியா நிகழ்ச்சிகள்

வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே மனதில் நிற்கின்றனர். எத்தனையோ நூல்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில நூல்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அது போல் நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால் அவற்றில் சில நிகழ்ச்சிகள் வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சிகளாக மனதில் பதிந்து போகின்றன.

அவ்விதம் ஆழ் மனதில் பதிந்து போன மறக்க முடியா நிகழ்ச்சிகளை மறுபடியும் அசை போட்டுப் பார்த்தால் என்ன? என்று எண்ணியதன் விளைவு தான் இக்கட்டுரை. சந்தேகமில்லாமல் இது முழுக்க முழுக்க சுய புராணம் தான். ஆனாலும் சுவையான சுய புராணம்.

மறக்க முடியா நிகழ்ச்சி 1

எமது வெளியீடான 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' நூலைப் படித்துப் பார்த்த எமது நண்பர் கொள்ளுமேடு முஹம்மது தாஹா அவர்கள் இந்நூலை இவ்வருடம் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள விருக்கும் தமது தாயார் உறவினர்களிடம் வாழ்த்தி வழியனுப்பி வைக்க வருமாறு அழைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்க விரும்புவதாக தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நூலின் பிரதிகளை அவர் வீட்டில் கொண்டு போய் சேர்க்க நானே நேரில் சென்ற போது நண்பர் முஹம்மது தாஹா அவர்களின் மூத்த சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்கள் எம்மை வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

வழக்கமான சுக விசாரித்தலுக்குப்பின் எமது நூலைப் பற்றிய பேச்சு எழுந்தது. 'தாங்கள் தான் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காவா? அப்படியானால் தங்கள் சொந்த ஊர்?' என அவர் கேட்டு முடிக்கு முன் நான் 'திருப்பந்துருத்தி' என்று சொல்ல, தாங்கள் தான் 'திருப்பந்துருத்தி மஸ்தூக்காவா?' என்று கேட்டு ஆச்சர்யத்தில் அவர் கண்கள் அகல விரிந்தன.

சற்று பொறுங்கள் என் என்னிடம் கூறிவிட்டு அவர் தன் தாயாரை அழைத்து, 'அம்மா! நீங்கள் பலரிடமும் அடிக்கடி படித்துக் காட்டுவீர்களே! அந்தக் கடிதத்தை எடுத்து வாருங்கள்' என்று கேட்டுக் கொள்ள உடனே அவரின் தாயார் ஒரு கடித உறையைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அந்தக் கடித உறையை என்னிடம் கொடுத்த சகோதரர் ஜக்கரியா அவர்கள் 'கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்' என என்னிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் அக்கடிதத்தைப் பிரத்துப் படித்துப் பார்த்தேன். இப்போது ஆச்சர்யத்தில் அகல விரிந்தது அவர் கண்களல்ல என் கண்கள்.

கடிதத்தில் இடப்பட்டிருந்த தேதி 1987 ஆம் வருடம் எழுதிய கடிதம் அது என்று அடையாளம் காட்டியது. சகோதரர் ஜக்கரியா அவர்கள் சவூதியில் இருந்த போது புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்து தனது பயண அனுபவங்களை ஒரு நீண்ட கட்டுரையாக தன் தாயாருக்கு அப்போது எழுதிய கடிதம் அது.

புனித ஹஜ்ஜில் தாம் கண்ட காட்சிகளை வர்ணனையாக எழுதி இந்தக் கட்டுரைக்கான கருத்து உதவி 'திருப்பந்துருத்தி அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா' என்று நன்றியுடன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தின் இறுதி வரிகளைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. இந்த சிலிர்ப்பு அல்லாஹ்வின் மீது ஆணையாக கர்வத்தில் அல்ல.

நான் ஒரு அறிஞனுமல்ல, புகழ் பெற்ற எழுத்தாளனுமல்ல, இஸ்லாமிய எழுத்துலகில் நான் இன்னும் அரிச்சுவடி கூடப் படிக்காதவன். அப்படியிருக்க பெருமையும் கர்வமும் எங்கிருந்து வரும்?

இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹஜ் பயணக் கட்டுரை நூல், எங்கோ ஒரு மூலையில் எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு முஸ்லிம் சகோதரருக்கு, அதுவும் புனித ஹஜ்ஜை நிறை வேற்றும் வழிகாட்டியாகப் பயன் பட்டிருக்கிறதே! அல் ஹம்து லில்லாஹ். அந்த ஹஜ்ஜில் எனக்காகவும் அவர் துஆச் செய்திருப்பார் அல்லவா? அது போதும் எனக்கு.
மிக அருமையாக ஹஜ்ஜின் அனுபவங்களை தன் தாய்க்கு கடிதமாக எழுதிய அந்தச் சதோதரர், தான் பெருமைப் பட்டுக் கொள்ளாமல் மிகவும் நன்றியுடன் எனது பெயரை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அவர் உயர்ந்தவர்.

தனது அன்பு மகன் எழுதிய அருமைக் கடிதத்தை இருபது வருடங்களாகப் பாதுகாத்து எல்லோரிடமும் படித்துக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறாரே அந்தத் தாய் உயர்ந்தவர்.

தனது தாயை வழியனுப்பி வைக்க வருகை தரும் அனைத்து உறவினர்களுக்கும் புனித ஹஜ்ஜின் மகத்துவத்தைப் புரியவைக்கும் புத்தகத்தை வழங்கி வித்தியாசமான முறையில் வழியனுப்பிவைக்கும் அந்தப் புனிதத் தாயின் நன்மக்கள் உயர்ந்தவர்கள்.

அனு தினமும் தவறாது தொழுது அழுது மன்றாடிய முறையீட்டை ஏற்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றை அந்த நன்மக்களின் தாய்க்கு வழங்கிய அல்லாஹ் அனைவரையும் விட மிக மிக உயர்ந்தவன்.

Aug 1, 2007

எமது புதிய வலைப் பதிவு

எமது பள்ளி வாழ்க்கை மற்றும் அதில் கிடைத்த நண்பர்கள் ஆகிய முழு விபரங்களையும்
எமது மற்றொரு வலைப் பதிவில் பார்வையிடலாம்
www.akkuroriental.blogspot.com
அன்புடன்
மஸ்தூக்கா

விருப்ப மொழியில் குர்ஆன்