Nov 20, 2009

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்

புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

Feb 16, 2009

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?


சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
---------------------------------------------------------------------
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.
***
கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்
சத்தியமார்க்கம்.காம்
இதுதான்இஸ்லாம்.காம்
இஸ்லாம்கல்வி.காம்
http://palanibaba.blogspot.com
http://a1realisam.blogspot.com
http://masdooka.blogspot.com
http://majinnah.blogspot.com
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.
---------------------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Jan 25, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-5)

வலைப்பதிவு தொடங்கியாகிவிட்டது. தமிழில் இடுகைகளைப் பதிந்தாகி விட்டது. பல்வேறு வலைப்பதிவுகளைப் பாக்கிறோம். விதவிதமாக அவற்றை வடிவமைத்திருக்கின்றனர். நமது வலைப்பதிவில் அத்தகைய மாற்றங்களை எப்படி செய்வது? என்பதை இனி காண்போம்.

முதலில் வலைப்பதிவின் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.

வலைப்பதிவில் புதிய இடுகைகள் இடுவதானாலும், பழைய இடுகைகளைத் திருத்துவதானாலும் முதலில் உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும் என்று பார்த்தோம்.
அது போலவே உங்கள் பதிவின் அமைப்பை மாற்றவும், தளவமைப்பை மாற்றவும், உங்கள் பதிவை அழகுபடுத்தவும், பல்வேறு அம்சங்களை இணைக்கவும், தவறாக இணைக்கப்ட்டவற்றை திருத்தவும் நீக்கவும் இவை அனைத்துக்குமே கூகுள் கணக்கைப் பயன்படுத்தி முதலில் உள் நுழைய வேண்டும். உள்ளே நுழைய நுழைவாயில் எங்குள்ளது? உங்களுக்குத் தான் தெரியுமே. மறந்திருந்தால் கீழ்க்காணும் சுட்டியை கிளிக்குங்கள்.

வழக்கம் போல் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி பாஸ்வேர்டைக் கொடுத்து உள் நுழைக என்பதை கிளிக் செய்து விட்டீர்களா? டாஷ்போர்டு பக்கத்திற்கு வந்து விட்டீர்கள் தானே. இப்போது அமைப்புகள் என்பதை கிளிக் செய்யவும். இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கும் குழப்பம் அடைய வேண்டாம். இப்போதைக்கு அவசியமானவற்றை மட்டும் காண்போம்.

1.அடிப்படைகள்

வலைப்பதிவு என்பதை அப்படியே விட்டுவிடுங்கள்தலைப்பு கட்டத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான தலைப்பை இடுங்கள். முதல் பாடத்தில்

5.இதில் (வலைப்பதிவு தலைப்பு) என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான ஒரு தலைப்பை இடுங்கள். இப்போதைக்கு ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தி தலைப்புக்கு பெயரிடுங்கள். உதாரணமாக YENATHU VALAIP PATHIVU. இத் தலைப்பை தமிழில் எப்படி இடுவது என்பதை பிரிதொரு பாடத்தில் பார்க்க இருக்கிறோம். இக்கட்டத்தில் நீங்கள் இடும் உங்கள் பதிவின் தலைப்பை வேண்டுமானால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

என்று படித்தது நினைவிருக்கிறதா? ஆம் இப்போது உங்கள் வலைப்பதிவுக்கு தமிழிலேயே தலைப்பிட வேண்டுமா,? யுனிகோட் தமிழில் 'எனது வலைப்பதிவு' என்று தட்டச்சுங்கள். இதில் நீங்கள் இடும் தலைப்பை பிறகு மாற்ற வேண்டுமானால் இதே முறையைப் பின்பற்றி மறுபடியும் மாற்றிக் கொள்ளலாம்.

விளக்கம் கட்டத்தில் உங்கள் பதிவைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை தரலாம். உதாரணமாக, எனது எண்ணங்கள் இங்கே எழுத்துக்களாக......என்று கொடுக்கலாம்.(உங்களுக்கு விருப்பமான வாசகங்களை எழுதிக் கொள்ளுங்கள்.) இந்த குறிப்பும் உங்கள் வலைப்பதிவின் தலைப்புப் பக்கத்தில் காட்சி அளிக்கும்.

இனி அடுத்தடுத்துள்ள அனைத்து குறிப்புக்களுக்கும் ஆம் என்பதை தேர்வு செய்யுங்கள். ஆனால் பாலியல் உள்ளடக்கம் என்பதற்கு மட்டும் இல்லை என்பதை தேர்வு செய்யுங்கள்

ஒலி பெயர்ப்பை செயல்படுத்த வேண்டுமா? என்பதற்கு முடக்கு என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.அனைத்தும் முடிந்த பின் மறக்காமல் அமைப்புகளை சேமி என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

இந்த அமைப்புகள் பக்கத்தில் உள்ள
வெளியிடுதல், வடிவமைத்தல், கருத்துரைகள் ,காப்பகப்படுத்துதல், தளஓடை, மின்னஞ்சல் ,OPEN ID,அனுமதிகள் ஆகிய அனைத்தையும் இப்போதைக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஒரே சமயத்தில் அனைத்தையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்போதைக்கு அடிப்படைகள் பகுதியில் இந்த மாற்றங்கள் மட்டும் போதும்.
----------------------------------------------------------

தளவமைப்பு

உங்கள் வலைப்பதிவை அழகுபடுத்தவும் பல்வேறு சிறப்பம்சங்களை சோக்கவும் இந்த தளவமைப்பு தான் மிக முக்கியமானது. இதுவரை உங்கள் வலைப்பதிவில் இடுகைகள் இடவும், இட்ட இடுகைகளத் திருத்தவும், அடிப்படை அம்சங்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இப்போது உங்கள் வலைப்பதிவை அழகுற எப்படி வடிவமைப்பது? பயனுள்ளவற்றை எப்படி சேர்ப்பது என்பது பற்றி காண்போம்.

உங்கள் டாஷ்போர்டில் தளவமைப்பு என்பதை கிளிக் செய்யுங்கள்.
தளவமைப்பில் பக்க உறுப்புகள் என்னும் பகுதி தானாகத் திறக்கும். இதில் முதலில் தெரியும் நீல நிறப்பட்டையில் navbar என இருக்கும் அதன் ஓரத்தில் திருத்து என்பதை கிளிக்கினால் அந்தப்பட்டையின் வண்ணத்தை மாற்ற வழி பிறக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள 4 வண்ணப் பட்டைகளில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து அதாவது குறிப்பிட்ட சிறு வட்டத்தில் மவுஸால் கிளிக்கி விட்டு பிறகு சேமி என்பதை கிளிக்கினால் உங்களுக்கு விருப்பமான தலைப்பு வண்ணம் தயார்.

அடுத்த கட்டத்தில் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு காணப்படும். இடது மூலையில் காணப்படும் திருத்து என்பதை கிளிக்கினால் மேற்குறிப்பு உள்ளமை என்னும் பக்கம் திறக்கும். இதில் உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வலைப்பதின் தலைப்பில் அழகான படம் ஒன்றை வைக்க விரும்பினால் படம் என்னும் இடத்திற்கருகில் உள்ள Brows என்பதை கிளிக்குங்கள். உங்கள் கணிணியில் உங்களுக்கு விருப்பமான படம் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து கொண்டால் படம் இப்போது தானாக தரவேற்றப்படும்.

சிறிது நேரம் காத்திருக்கவும். படம் ஏற்றப்பட்டவுடன் ஏற்றப்பட்ட படம் அப்பகுதியில் தெரியும் அதன் பின்னர் சேமி என்பதை கிளிக்கவும். இப்போது உங்கள் வலைப்பதிவு முகப்பில் நீங்கள் விரும்பிய படம் காட்சி அளிக்கும்.

அடுத்து கேஜட்டைச் சேர் என்பதை கிளிக்குங்கள். பல்வேறு கேஜட்டுகளைச் சேர்க்கும் வழிமுறையை காணலாம். கேஜட்டைச் சேர் என்னும் தலைப்பில் 19 வகையான கேஜட்டுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்களும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உங்கள் வலைப்பதிவில் அவற்றை எப்படிச் சோப்பது? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

இணைப்பு பட்டியல்

இதன் மூலம் உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களின் தொகுப்பை உங்கள் பதிவில் இடம் பெறச் செய்யலாம். வாசகர்கள் உங்கள் வலைப்பதிவிலிருந்தே நேரடியாக அந்த பதிவுகளுக்கும் தளங்களுக்கும் செல்ல முடியும்.

இதைப் பயன்படுத்த இணைப்பு பட்டியல் என்பதை கிளிக்குங்கள்.
இணைப்பு பட்டியல் உள்ளமை என்னும் பக்கம் திறக்கும். இதில் தலைப்பு என்னும் இடத்தில் இந்த தொகுப்புக்கான தலைப்பு ஒன்று கொடுங்கள். உதாரணமாக தமிழ்ப்பதிவுகள் என்று கொடுப்போம்.

அடுத்து புதிய தள URL என்னும் கட்டத்தில் நீங்கள் விரும்பும் வவைலப்பதிவின் URL முகவரியைக் கொடுக்கவும்.

இந்த யுஆர்எல் முகவரியைக் கொடுக்கும்போது கவனம் தேவை. ஒரு புள்ளி வித்தியாசம் இருந்தாலும் லிங்க் கிடைக்காது. எனவே இந்தப் பக்கத்தை அப்படியே மினிமைஸ் செய்து வைத்துக் கொண்டு நீங்கள் இணைக்க விரும்பும் பதிவு அல்லது தளத்தை திறந்து அதன் மேற்பகுதியில் காணப்படும் யுஆர்எல் முகவரியை காப்பி செய்து பின்னர் மறுபடியும் இந்தப் பக்கத்தை திறந்து புதிய தள URL என்னும் கட்டத்தில் இருக்கும் http:// என்பதை நீக்கிவிட்டு அதன் பிறகு பேஸ்ட் செய்து விடவும்.

புதிய தளப் பெயர் என்னும் கட்டத்தில் அந்த வலைப்பதிவு அல்லது வலைத் தளத்தின் பெயரை தமிழில் தட்டச்சவும்.

பல்வேறு பதிவுகள் மற்றும் தளங்களை இணைக்க இணைப்பைச் சேர் என்பதை கிளிக்கி பின்னர் இதே முறையைக் கையாளவும். அனைத்தும் முடிந்த பின் சேமிக்க மறக்க வேண்டாம்.

HTML/JavaScript

இது ஒரு முக்கியமான பகுதி. நீங்கள் பார்வையிடும் வலைப்பதிவுகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கலாம். உதாரணமாக, வலைப்பதிவுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அறியும் கவுண்டர்கள், நேரம் காட்டும் கடிகாரம்., இப்படி பலவகையான சிறப்பம்சங்களைக் காணும்போது இது போல் நம் பதிவிலும் இணைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா, இதற்குப் பயன்படுவது தான் இந்த HTML/JavaScript என்னும் கேஜட்.

நீங்கள் எந்த வலைப்பதிவில் ஒரு சிறப்பம்சத்தைப் பார்க்கிறீர்களோ, அதில் மவுஸை வைத்து டபுள் கிளிக் செய்யுங்கள். அது உருவாக்கப்பட்ட தளத்தக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள். அல்லது Google search மூலமாகவும் தேவையானதை தேடிப்பிடியுங்கள்.

உதாரணமாக உங்கள் பதிவில் வருகையாளர்கள் எண்ணிக்கை அறிய உதவும் கவுண்டரை சேர்க்க விரும்பினால் Free web counter என்று Google search ல் இட்டு தேடுங்கள். கிடைக்கும் தளத்தில் உங்களுக்கு விருப்பமான கவுண்டரை தேர்வு செய்த பிறகு அதன் HTML கோட் கிடைக்கும். அதை காப்பி செய்து இந்த பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள். இதற்கு ஒரு தலைப்பு கொடுத்து விடுங்கள். 'வருகையாளர்கள்' என்று கொடுக்கலாம். இறுதியில் சேமிக்க மறக்க வேண்டாம்.

பிறகு உங்கள் வலைப்பதிவைத் திறந்து பாருங்கள். கவுண்டர் உங்கள் பதிவில் காட்சி அளிக்கும். இதே முறையைப் பின்பற்றி உங்களுக்கு விருப்பமானதை யெல்லாம் இணைத்துக் கொள்ளுங்கள்.

லேபிள்கள்

இதை இணைப்பதன் மூலம் உங்கள் பதிவில் இதுவரை எந்தெந்த லேபிள்களில் உங்கள் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவை அனைத்தையும் அந்தந்த லேபிள்களில் எத்தனை கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன என்னும் விபரங்களுடன் காட்டும்.

தலைப்பு என்னும் கட்டத்தில் labels என்று ஆங்கிலத்தில் காண்பிக்கும் அதை நீக்கிவிட்டு தமிழில் ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளுங்கள். சேமிக்க மறக்காதீர்கள்.

புதிய இடுகைகளை இடுவது பற்றிய பாடத்தில் உங்கள் ஆக்கங்களுக்கு எப்படி லேபிள் இடுவது என்பது குறித்து விளக்கியுள்ளோம் மறந்திருந்தால் மறுபடியும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த கேஜட்டைச் சேர் என்னும் பகுதியில் சில வற்றைப் பற்றி மட்டுமே விளக்கியுள்ளோம் புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருப்பதால் அனைத்தையும் படித்து அதிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம்.. தொடர்ந்து நீங்கள் வலைப்பதிவில் அதிகமதிகம் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள்.

பிளாக்கர் பதிவு பற்றிய சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் தமிழிலேயே விளக்கங்கள் பெறவும் பிளாக்கர் உதவியைப் பெறவும் அதற்கு உங்கள் டேஷ்போர்டின் தலைப்புப் பகுதியில் உதவி என்பதை கிளிக்கவும். அல்லது கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்.

ஓரளவு அடிப்படை விஷயங்களை பற்றி மட்டும் இப்பதிவில் தெரியப்படுத்தியுள்ளோம். இவை போதும் என நினைக்கிறோம். மேற்கொண்டு சந்தேகங்கள் எழுந்தால் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழ் இணைய உலகில் புதிய வலைப்பதிவராக அடியெடுத்து வைத்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் புதிய தமிழ் வலைப் பதிவுக்கு எமது வாழ்த்துக்கள்.

அன்புடன்
மஸ்தூக்கா

Jan 21, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-4

புதிய இடுகை என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் வலைப்பதிவு புதிய இடுகையை இடுவதற்கு தயாரான நிலைக்கு தானாக வந்து விடும். இப்போது 3 ஆம் பாடத்தில் நாம் சொன்ன வழிமுறையைப் பின்பற்றி உங்கள் ஆக்கத்தை பதியுங்கள். அதாவது
முதலாவது வழிமுறையாகிய யுனிகோட் எழுத்துருவாகிய எ கலப்பை எழுத்துரு மூலம் நேரடியாக தட்டச்சு செய்யுங்கள். இப்படிச் செய்வதில் ஒரு பிரச்சினையும் உண்டு. நீங்கள் டயல்அப் இணையத் தொடாபாளராக இருந்தால் நீங்கள் தொடர்ந்து இணையத் தொடர்பில் இருக்கும்போது வீணாக நேரம் ஓடிக் கொண்டிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டாவது வழிமுறையே சிறந்தது. ஏற்கனவே சாருகேசி, பாமினி போன்ற எழுத்துருக்களில் நீங்கள் தட்டச்சு செய்து வைத்துள்ள உங்கள் ஆக்கங்களை பாமினி2யுனிகோடு மாற்றி மூலம் மாற்றியமைத்து அதை அப்படியே காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்து விடலாம்.

அல்லது உங்கள் கணிணியில் FRONTPAGE நிறுவியிருந்தால் ஒரு பதிய பக்கத்தை திறந்து அதில் யுனிகோட் எழுத்துரு மூலம் தட்டச்சு செய்'து வைத்துக் கொண்டு அதை காப்பி செய்து பின்னர் இணையத் தொடர்பை ஏற்படுத்தி இந்த பக்கத்தில் பேஸ்ட் செய்து விடலாம். இதனால் இணையத் தொடர்பு நேரம் மிச்சப்படும்.

காலியாக உள்ள பெரிய கட்டத்தில் உங்கள் ஆக்கத்தை பதிந்து விட்டீர்கள். இந்தக் கட்டத்தின் தலைப்பில் உள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி உங்கள் எழுத்துரு அளவை மாற்றிக் கொள்ளவும், அதைத் தொடர்ந்து அடாத்தி எழுத்தாக்கவும், சாய்வெழுத்தாக்கவும், எழுத்தக்களின் வணண்த்தை மாற்றவும் முடியும்.

உங்கள் மவுஸை அந்தந்த ஆப்ஷன்களுக்கு நகர்த்தும்போதே தமிழிலேயே அதன் விளக்கத்தைக் காணலாம். இதையெல்லாம் விளக்கத் தேவையில்லை உங்களுக்கே தெரியும். அதில் உள்ள இணைப்பு , படத்தைச்சேர், வீடியோவைச்சேர் போன்ற ஆப்ஷன்களைப் பற்றி பிறகு பார்ப்போம்.
தலைப்பு என்னும் இடத்தில் உங்கள் ஆக்கத்திற்கான தலைப்பை இட மறக்காதீர்கள். யுனிகோட் தமிழில் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
பின்னர் பெரிய கட்டத்தின் அடிப்பகுதியில் உள்ள இந்த இடுகைக்கான லேபிள்கள் என்னும் கட்டத்தில் உங்கள் கட்டுரை எதைப்பற்றியது? என்பதை குறிப்பிடுங்கள். உதாரணமாக கல்வி பற்றிய கட்டுரை என்றால் கல்வி என தட்டச்சுங்கள். நீங்கள் பதியும் அடுத்த கட்டுரை ஆன்மீகம் பற்றியது எனில் அப்போது ஆன்மீகம் என்று லேபிள் பகுதியில் குறிப்பிடுங்கள். பிரிதொரு கட்டுரை கல்வி குறித்து நீங்கள் எழுதினால் அந்தக் கட்டுரையை பதியும்போது லேபிள் பகுதி கட்டத்தில் எல்லாம் காண்பி என்பதைக் கிளிக்கினால் இதுவரை நீங்கள் பதிந்துள்ள லேபிள்கள் பட்டியலை காட்டும் அதில் கல்வி என்பதை தேர்வு செய்தால் தானாக கட்ட்த்தை நிரப்பிக் கொள்ளும்.

இப்படி லேபிள்களை குறிப்பிடுவதால் உங்கள் வலைப்பதிவில் ஒவ்வொரு தலைப்பிலும் நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தையும் தலைப்பு வாரியாக அதுவே வரிசைப்படுத்தகி கொள்ளும். ஒவ்வொரு தலைப்பிலும் பதியப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையையும் காட்டும். வாசகர்கள் அந்தந்த தலைப்புகளை கிளிக் செய்தால் அந்த தலைப்பில் அதாவது அந்த லேபிளில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து ஆக்கங்களையும் ஓரிடத்தில் காணலாம்.

கட்டுரையை பதிந்து விட்டீர்கள், தலைப்பு கொடுத்துவிட்டீர்கள், லேபிள் தலைப்பு கொடுத்து விட்டீர்கள். இனி அடிப்பகுதியில் இடப்பக்கம் அமைந்துள்ள இடுகையை வெளியிடு என்பதை கிளிக்குங்கள். அவ்வளவு தான்

உங்கள் வலைப்பதிவு இடுகை வெற்றிகரமாக
வெளியிடப்பட்டது
ஆம் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியிடப்பட்டுவிட்டது. உங்கள் எழுத்துக்கள் இணையம் என்னும் வான்வெளியில் சிறகடித்து பறக்கத் தொடங்கி விட்டன. உலகின் எந்த மூலையில் எல்லாம் உங்கள் நண்பர்கள் இருக்கின்றனரோ அவர்களுக்கு உங்கள் வலைப்பதிவின் URL முகவரியைக் கொடுத்து இணையத்தைத் திறந்து பார்க்கச் சொல்லுங்கள்.

நீங்கள் வெளியிட்ட இடுகையை நீங்கள் பார்க்க வேண்டாமா? பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டாமா? இப்போது
(ஒரு புதிய சாளரத்தில்)
வலைப்பதிவைப் பார்
என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் சொந்த வலைப்பதிவு உங்கள் சொந்த கட்டுரை அல்லது கவிதையுடன் உங்களைப் பரவசத்தில் ஆழ்த்தும். காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். இன்று முதல் நீங்களும் ஒரு வலைப்பதிவர்.

வலைப்பதிவை வெளியிட்டு முடித்த பின் உங்கள் வலைப்பதிவை பார்வையிடும்போது ஆகா இதில் பிழை ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? கவலைப்படாதீர்கள் பிழையை உடனடியாகச் சரி செய்து விடலாம்.

இனி எப்போது இடுகைகளைத் திருத்துவதானாலும் புதிய இடுகைகளை இடுவதானாலும் உங்கள் வலைப்பதிவின் டாஷ்போர்டு பகுதிக்குச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே இதற்கு முந்தைய பாடத்தில் குறிப்பிட்டபடி வலைப்பதிவை தொடங்கவும் புதிய இடுகையை பதியவும்
https://www.blogger.com/start
என்னும் சுட்டியை கிளிக்கும்படியும் இதை உங்கள் FAVORITE பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டிருந்தோம் அல்லவா,? அதன்படி சேமித்து வைத்துக் கொண்டீர்கள் தானே! இப்போது மேற்காணும் சுட்டியை கிளிக்குங்கள்.

திறக்கும் பக்கத்தில் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைக என்று தெரிவிக்கிறதல்லவா? அப்புறமென்ன? உங்கள் gmail மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி உள் நுழையுங்கள். உங்கள் டாஷ்போர்டுக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.
புதிய இடுகையை இடுவதாக இருந்தால் புதிய இடுகை என்பதை கிளிக்குங்கள். ஏற்கனவே இட்ட இடுகையைத் திருத்த வேண்டும் என்றால் இடுகையைத் திருத்து என்பதை கிளிக்குங்கள். அவ்வளவு தான்.
இடுகைகைளத் திருத்தும் பக்கம் திறக்கும். அதில் நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட இடுகையின் தலைப்பும் அதற்கு முன் திருத்து, பார்க்க என்னும் இரண்டு ஆப்ஷன்களும் இருக்கும். திருத்து என்பதை கிளிக்குங்கள். திருத்த வேண்டிய இடுகை திறக்கும். செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்து முடித்து விட்டு அடிப்பகுதியில் சிவப்பு அடையாளத்துடன் இடுகைகளை வெளியிடு என்பதை கிளிக் செய்ய மறக்காதீர்கள். இப்போது திருத்தத்துடன் உங்கள் இடுகை மீண்டும் வெளியிடப்பட்டு விட்டது.

இது வரை புதிய இடுகைகளை இடுவது பற்றியும், ஏற்கனவே இட்ட இடுகைகளைத் திருத்துவது பற்றியும் பார்த்தோம் இனி அடுத்த பாடத்தில் அமைப்புகள் மற்றும் தளவமைப்பு ஆகியவை குறித்து பார்க்கலாம்.
அன்புடன்
மஸ்தூக்கா



Jan 18, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-3)

வலைப்பதிவில் இடுகைகளைப் பதிய யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்தால் தான் அனைவரும் படிக்க முடியும் என்பதையும், பல்வேறு யுனிகோட் எழுத்துருக்களில் பரவலாகப் பலராலும் உபயோகப்படுத்தப்படும் எகலப்பை எழுத்துருவை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கணிணியில் நிறுவுவது என்பதைப் பார்த்தோம். இது முதலாவது வழிமுறை.

இது போக தமிழில் இடுகைளைப் பதிய வேறு சில வழிமுறைகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.
இரண்டாவது வழிமுறை.
உங்கள் கணிணியில் சாருகேசி, பாமினி போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதும் அளவுக்கு உங்களுக்குத் தெரியும் என்றால் நீங்கள் தட்டச்சு செய்துள்ள உங்கள் ஆக்கங்களை அப்படியே copy செய்து கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கி கிடைக்கும் பக்கத்தில் பேஸ்ட் செய்து ENTER பட்டனைத் தட்டினால் உங்கள் ஆக்கம் இப்போது யுனிகோட் தமிழில் தயார்.

இரண்டாவது பெட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள COPY என்பதை கிளிக்கினால் உங்கள் கட்டுரை யுனிகோட் வடிவில் காப்பி செய்யப்பட்டுவிட்டது. இதை அப்படியே உங்கள் வலைப்பதிவில் கொண்டுபோய் PASTE செய்து விடலாம்.

மூன்றாவது வழிமுறை

இதெல்லாம் நமக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை விட வேறு எளிய வழி உள்ளதா? என்று தானே கேட்கிறீர்கள்.. ஆம் உள்ளது. இன் கீழே உள்ள சுட்டியை கிளிக்குங்கள்

திறக்கும் பக்கத்தில் தங்கிலிஷில் தட்டச்சு செய்யுங்கள். அதென்ன தங்கிலிஷ்? தமிழ் வார்த்தைகளை இங்கிலிஷ் எழுத்துக்களைக் கொண்டு தட்டச்சுங்கள். அது தான் தங்கிலிஷ். உதாரணமாக AnbuLLa nanbar avargalukku Assalaamu alaikum என்று தட்டச்சு செய்து SPACE பட்டனைத் தட்டுங்கள் 'அன்புள்ள நண்பர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கிடைக்கும். இப்போது திருப்தி தானே!
அடுத்த பாடத்திற்கு போவோமா?
இனி வலைப்பதிவில் எப்படி ஆக்கங்களைப் பதிவது? என்பதைப் பார்ப்போம்.
-------------------------------------------------------------------
முதல் பாடத்தில், வலைப்பதிவைத் தொடங்க முதலில் கீழ்காணும் சுட்டியை கிளிக் செய்யும்படி சொன்னோம் அல்லவா? அதை இப்போது மறுபடியும் கிளிக்குங்கள்.
(திறந்த பின் இந்த முகவரியை உங்கள் FAVORITES பகுதியில் சேமித்துக் கொண்டால் அடிக்கடி நீங்கள் இடுகைகளை இடும்போது திறக்க வசதியாக இருக்கும்)

https://www.blogger.com/start

திறக்கும் பக்கத்தில் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைக என்னும் இடத்தில் உங்கள் gmail மின்னஞச்ல் முகவரியையும் பாஸ்வேர்டையும் இட்டு உள் நுழைக என்பதை தட்டுங்கள் இப்போது உங்கள் வலைப்பதிவின் டேஷ்போர்டு பகுதிக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.

இந்த டாஷ்போர்டில் உங்கள் வலைப்பதிவு தொடங்கிய போது நீங்கள் பதிந்த வலைப்பதிவின் பெயரும் அத்துடன்
புதிய இடுகை, இடுகைகளைத் திருத்து, அமைப்பு, தளவமைப்பு, வலைப்பதிவைப்பார்

ஆகிய விபரங்களும் இருக்கும் இவற்றில் புதிய இடுகை என்பதை கிளிக்கவும் இப்போது உங்கள் வலைப்பதிவின் புதிய இடுகை இடும் பக்கம் திறக்கும். ஆம் புதிய இடுகை இடுவதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்

முதல் இடுகையை இடுவதற்கு உங்களுக்கு ஏற்படும் அவசரம் புரிகிறது. சற்று பொறுங்கள் அடுத்த பாடத்தில் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்..
சந்தேகங்கள் எழுந்தால் தயக்கமின்றி எமது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
masdooka@hotmail.com
அன்புடன் மஸ்தூக்கா





Jan 14, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-2)

உங்களுக்கென சொந்தமாக ஒரு வலைப்பதிவு உருவாக்கியாகிவிட்டது. இதன் வடிவமைப்பை எப்படி அழகுபடுத்துவது? பக்கங்களை எப்படி ஒழுங்குபடுத்துவது? என்பதையெல்லாம் அறிவதற்கு முன் முதலில் வலைப்பதிவில் தமிழில் எப்படி ஆக்கங்களை பதிவது? என்பதை அறிந்து கொண்டால் தானே இவ்வளவு ஆசை ஆசையாக நாம் வலைப்பதிவைத் தொடங்கியதற்கே அர்த்தம் இருக்கும். எனவே முதலில் தமிழ் மொழியை எப்படி நம் கணிணியில் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம்.
நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்துருக்கள் புழக்கத்தில் இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு (FONT) மற்றவரின் கணிணியில் இருந்தால் தான் அவர் உங்கள் ஆக்கங்களை படிக்க முடியும். இதற்கானத் தீர்வாக உருவாக்கப்பட்டது தான் யுனிகோட் என்னும் எழுத்துருவாக்கம். யுனிகோட் முறையில் நீஙகள் தட்டச்சு செய்தால் தான் எவ்வித தமிழ் எழுத்துருவும் இல்லாத கணணியிலும் உங்கள் பதிவுகளைப் பார்வையிட முடியும். பல்வேறு யுனிகோட் எழுத்துருக்கள் இருந்தாலும் தமழில் தட்டச்சு செய்வதற்கு பலரும் பயன்படுத்தும் இகலப்பை எழுத்துருவை உங்கள் கண்ணியில் டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.
2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும். 3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.


4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும் 5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில Tamil99UNI, Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.
பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்
1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.
2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.
3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)
*install files for east Asian languages
இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.
(தமிழ் யுனிகோட் எழுத்துருவை உங்கள் கணணியில் நிறுவும் இந்த எளிய வழிமுறை சகோதர பதிவர் முதுவை ஹிதாயத் அவர்களின் பதிவிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டது.)
கணிணியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பதை விளக்கமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி அடுத்த பாடத்தில் வலைப்பதிவில் இடுகைகளை எப்படி இடுவது என்பதைப் பார்ப்போம்.
















Jan 10, 2009

சொந்தமாக வலைப் பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-1)


இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும்.
இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலையை விடுங்கள்.
வலைப்பதிவு தொடங்குவது மிகவும் எளிது. கம்ப்யூட்டா பற்றிய அறிவும், ஆங்கிலப் புலமையும் இருக்க வேண்டும் என்பதில்லை. கம்ப்யூட்டரை ஆன் செய்து இண்டர் நெட் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு தெரியும் அல்லவா? அது போதும். சாதாரணமாக ஆங்கிலத்தில் சில எளிமையான வார்த்தைகள் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். என்றால் அது போதும் அதுகூடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இப்போது தமிழிலேயே கம்ப்யூட்டர் தொழில் நுணுக்கங்களை புகழ் பெற்ற இலவச வலைப்பதிவு சேவை தரும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
ஒரு நாள் கூட வேண்டாம் அரை மணி நேரம் போதும் உங்களுக்கென சொந்தமான அழகாக ஒரு ஒரு வலைப்பதிவு உருவாக்கி விடலாம்.. இது மிகையில்லை. இனி நீங்கள் வெறும் வாசகர் என்னும் தரத்திலிருந்து வலைப்பதிவர் என்னும் வட்டத்திற்கு உயர்ந்து விடலாம். வாருங்கள் உங்கள் கரம் பிடித்து நடை பழக்குகிறோம்.
சரி பாடத்திற்கு போவோமா? நீங்கள் தயார் தானே!
-------------------------------------------------------------
இலவச வலைப்பதிவு சேவை வழங்கும் புகழ் பெற்ற பல்வேறு இணைய தளங்கள் இருந்தாலும் அதிகமானோர் பயன்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் BLOGSPOT வலைப்பதிவு ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் இதையே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.
1. ஏற்கனவே உங்களுக்கு ஜி மெயில் மின்னஞ்சல் முகவரி இருக்கிறதா? இது வரை உங்களிடம் இல்லாவிட்டால் இப்போது புதிதாக ஒரு ஜி மெயில் மின்னஞ்சல் முகவரி தொடங்கிக் கொள்ளுங்கள். அதற்கு இங்கே கிளிக்குங்கள்.
https://www.google.com/accounts/NewAccount?service=mail&continue=http%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fe-11-11157540184d2b7079bd4a881a1cf5e3-85ee31102207cde94cd0e276879a8bb1c10059f1&type=2

2.இப்போது உங்கள் பெயரில் ஒரு கூகுள் கணக்கு தொடங்க வேண்டும். வங்கியில் புதிய கணக்கு ஒன்று தொடங்க வேண்டும் என்றால் முதலில் கொஞ்சம் பணம் போடவேண்டுமே. அது போல் கூகுள் கணக்கு தொடங்க பணம் எதுவும் செலுத்த வேண்டுமா? இல்லை பணம் எதுவும் தேவையில்லை. காசு இல்லாமலேயே இந்தக் கணக்கு தொடங்கலாம்.
https://www.blogger.com/start
இந்த சுட்டியை சொடுக்குங்கள். புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு இப்பக்கம் உங்களை வழி நடத்திச் செல்லும்.
ஓரளவேணும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் இப்படியே தொடரலாம். அல்லது வலது மூலையில் உள்ள பெட்டியில் இருக்கும் English என்னும் வார்த்தைக்கு அருகில் உள்ள அம்புக்குறியை கிளிக்கி தமிழ் மொழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3.மொழியை தமிழ் என மாற்றிக் கொண்டு விட்டீர்கள் அல்லவா? இப்படி கிடைத்த பக்கதின் இறுதிப் பகுதிக்குச் செல்லுங்கள்.
4.இப்போது (வலைப்பதிவை உருவாக்கு) என்னும் அம்புக் குறியை கிளிக் செய்யுங்கள்.
5.இதில் (வலைப்பதிவு தலைப்பு) என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான ஒரு தலைப்பை இடுங்கள். இப்போதைக்கு ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தி தலைப்புக்கு பெயரிடுங்கள். உதாரணமாக YENATHU VALAIP PATHIVU. இத் தலைப்பை தமிழில் எப்படி இடுவது என்பதை பிரிதொரு பாடத்தில் பார்க்க இருக்கிறோம். இக்கட்டத்தில் நீங்கள் இடும் உங்கள் பதிவின் தலைப்பை வேண்டுமானால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்த கட்டம் தான் மிக முக்கியமானது.
வலைப்பதிவு முகவரி என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பதிவுக்கான URL முகவரியைக் கொடுக்க வேண்டும். இதை மிகவும் கவனமாக எழுத்துப் பிழை இன்றி எழுத வேண்டும். ஏனெனில் இதில் நீங்கள் பதியும் உங்கள் வலைப்பதிவின் முகவரியை பிறகு மாற்ற முடியாது. எனவே கவனம் தேவை.
http:// என்னும் குறிகளுக்கும் blogspot.com என்னும் வார்த்தைக்கும் இடையில் உள்ள கட்டத்தில் உங்கள் பதிவின் URL முகவரியை இடுங்கள். இதில் கவனிக்க வேண்டியவை
ஒரே வார்த்தையாக இருக்க வேண்டும்
தமிழ் வார்த்தையாகவும் இருக்கலாம் ஆனால் எழுத்தக்கள் ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணமாக yenathuvalaippathivu
இயன்றவரை குறைவான எழுத்தக்களைக் கொண்டிருக்க வேணடும். அப்போது தான் மற்றவர்கள் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இயலும் உதாரணமாக ypathivu
ஆங்கில எழுத்துக்களில் சிறிய எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
எழுத்துக்களின் இடையில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, கோடு போன்ற குறியீடுகளைத் தவிர்க்கவும்..
எழுத்துக்களின் இடையில் எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் உதராணமாக ypathivu123
இப்போது உங்கள் வலைப்பதிவின் யு ஆர் எல் முகவரி ypathivu.blogspot.com என்று இருக்கும். எடுத்துக்காட்டாகத் தான் இந்த வார்த்தையை இட்டுள்ளோம். இதில் ypathivu என்னும் இடத்தில் நீங்கள் விரும்பும் வார்த்தையை இட்டுக் கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான வார்த்தையை இட்டால் மட்டும் போதாது இந்தக் கட்டத்திற்கு அடுத்து இருக்கும் 'உள்ளதா எனப்பார்' என்பதை கிளிகக்வும். இப்போது இதே முகவரியில் வேறு ஏதாவது பதிவு உள்ளதா? என இணையத்தில் தேடிப்பார்க்கும்.
ஏற்கனவே இதே பெயர் பதியப்பட்டிருநதால் அதாவது வேறு எவரேனும் பதிந்திருந்தால்
மன்னிக்கவும், இந்த வலைப்பதிவு முகவரி கிடைக்கவில்லை
தயவுசெய்து பின்வருவனவற்றில் ஒன்றைக் கருத்தில் கொள்க:
என்ற பதிலுடன் நீங்கள் பதிந்த வார்த்தையையே சில மாற்றங்களுடன் காட்டும். அவற்றிலிருந்து ஒன்றை தேர்வ செய்து நீங்கள் தொடரலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு வார்த்தைகளை இட்டு மறுபடியும் 'உள்ளதா எனப்பார்' என்பதை கிளிக்கவும்.

இந்த வலைப்பதிவு முகவரி உள்ளது.

என பதில் கிடைக்கும் வரை இச்செயலை தொடரவும். 'இந்த வலைப்பதிவு முகவரி உள்ளது' என பதில் கிடைத்துவிட்டால். உங்கள் பெயரில் வலைப்பதிவு யுஆர்எல் முகவரி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது எனப் பொருள்.
இனி அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

6.சொல் சரிபார்ப்பு என்னும் கட்டத்திற்கு மேல் உள்ள ஆங்கில எழுத்துக்களை அப்படியே அந்தக் கட்டத்தில் தட்டச்ச வேண்டும். அதன் பின்னர் தொடருக என்னும் அம்புக் குறியை கிளிக்குங்கள். நீங்கள் தட்டச்சு செய்த எழுத்துக்கள் பொருத்தமாக இல்லாவிட்டால் அல்லது படத்தில் நீங்கள் பார்க்கும் எழுத்தக்கள் தெளிவாக இல்லாவிட்டால் அதே பக்கம் மறுபடியும் வரும். ஆனால் இப்போது வேறு எழுத்துக்கள் காட்டப்படும். தொடருக என்னும் அம்புக் குறியை நீங்கள் கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வரை இதைத் தொடர வேண்டும்.

சொல் சரிபார்ப்பு சரியாக அமைந்து விட்டால் தொடருக என்னும் அம்புக் குறியை நீங்கள் கிளிக் செய்யும் போது அடுத்த பக்கம் திறக்கும்.
(சரியாக அமைய வில்லையெனில் மீண்டும் மீண்டும் அதே பக்கம் தான் வரும்.) அடுத்த பக்கம் திறந்து விட்டால் நீங்கள் இதுவரைச் சரியாக செய்திருக்கிறீர்கள் எனப் பொருள்.
உங்கள் வலைப் பதிவை உருவாக்குவதற்கான முதல் கட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். இப்போது உங்களுக்கே மகிழ்ச்சியாக இருக்குமே.
சரி இப்பொது இரண்டாம் கட்டத்தில் நுழைவோம் வாருங்கள்.
7.இப்போது உங்கள் வலைப் பதிவின் வடிவமைப்பு (டெம்பிளேட்)எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறிர்களோ அது போன்று ஒரு வடிவமைப்பை நீஙகள் தேர்ந்தெடுக்கவும்.. வலது பக்கம் உள்ள ஸ்குரோல் பாரை நகர்த்துவதன் மூலம் பல்வேறு மாதிரி வடிவமைப்புகளை பார்வையிட்டு அவற்றில் விருப்பானதை தேர்வு செய்யலாம்.
நீங்கள் தேர்வு செய்த வடிவமைப்பு எப்படி இருக்கும்? என்பதை வடிவமைப்பின் அடிப்பகுதியில் காணப்படும் 'டெம்பிளேட்டை முன்னோட்டமிடு' என்பதை கிளிக்குவதன் மூலம் தெளிவாகப் பார்க்கலாம். முன்னோட்டததை பார்த்த பின்னர் அந்த விண்டோவை மூடிவிடுங்கள். (புதிதாகத் திறந்த விண்டோவின் வலது பக்க மூலையில் உள்ள X குறியை கிளக்குங்கள்) இந்த வடிவமைப்பு உங்களுக்கு திருப்தி இல்லையெனில் வேறு வடிவமைப்பைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு ஏதேனும் ஒரு வடிவமைப்பைத் தேர்வு செய்து விட்டு பிறகு எப்போது வேண்டுமானாலும் இதை மாற்றிக் கொள்ளலாம் கவலைப்படாதீர்கள். வடிவமைப்பில் மாற்றங்கள் செய்வதுவது பற்றி பிரிதொரு பாடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைத் தேர்வு செய்து விட்டீர்கள் தானே இப்போது பக்கதின் இறுதியில் காணப்படும் தொடருக என்னும் அம்புக் குறியை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் வலைப் பதிவு உருவாக்கப்பட்டுவிட்டது
என்னும் தகவல் உங்களை வரவேற்கும்.

ஆம் உங்கள் வலைப்பு பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. இப்போது மகிழ்ச்சி தானே.
உங்களுக்கென வலைப் பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. இடுகைகளை இட வேண்டும். அவ்வளவு தான்.
இப்போது வலைப் பதிவிடலைத் தொடங்கு என்னும் நீண்ட அம்புக் குறியை கிளிக் செய்யவும். நேராக உங்கள் வலைப் பதிவின் புதிய இடுகை இடுதல் பக்கம் திறக்கும். உங்கள் இடுகைகளை இட வேண்டியது தான்.
இனி இணைய உலகில் நீங்களும் ஒரு வலைப் பதிவர். இப்போது திருப்தி தானே.
இனி வலைப் பதிவில் என்னென்ன இணைக்கலாம்? வலைப்பதிவை எவ்வாறெல்லாம் அலங்கரிக்கலாம்? மாற்றங்கள் செய்வது எப்படி? இடுகைகள் இடுவது எப்படி? திருத்தங்கள் செய்வது எப்படி? என்பன போன்ற அனைத்து விபரங்களையும் அடுத்தடுத்த பாடங்களில் பார்க்கலாம்.
இந்தப் பதிவை படிக்க ஆரம்பிக்கும் போது சற்று மலைப்பாக இருக்கலாம். நிதானமாக மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். மிகவும் எளிமையாக இருக்கும். வலைப்பதிவு தொடங்குவது என்பது இவ்வளவு தான். முயன்று பாருங்கள். வெற்றி பெருவீர்கள்.
------------------------------------------------------
மேற்கொண்டு விபரங்கள் அறிய நாடினால், சந்தேகங்கள் எழுந்தால் எமது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம் மேலதிக விபரங்களை அடுத்தடுத்த பாடங்களில் காண்போம்.
அன்புடன்
மஸ்தூக்கா
உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்

விருப்ப மொழியில் குர்ஆன்