Sep 22, 2006

ஒரு நல்லடக்கம்

">Link

நானிலம் அதிசயித்த ஒரு நல்லடக்கம்

உலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாட்டின் மன்னராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணித்து விட்டார். அரபு நாடுகளிலேயே மிகப் பெரியதும், மக்கா மதீனா ஆகிய இரு புண்ணியத் தலங்களை உள்ளடக்கியதும், இஸ்லாமிய நாடுகளில் உலக அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நாடுமாகிய சவூதி அரேபியாவின் மன்னர் மரணித்து விட்டார் என்றால் இந்த நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும், கடை அடைப்புகளும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும், அஞ்சலி செலுத்தி ஆளாளுக்கு அடித்த சுவரொட்டிகளும், பதாகைகளுமாக நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்க வில்லை.

முழு சவூதி அரேபியாவும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. வியாபார நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து திருமறை குர்ஆன் ஓதப் பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தலை நகர் ரியாதில் மட்டும் அடக்கம் நடைபெறுவதற்குச் சற்று முன் கப்ருஸ்தானை அடுத்துள்ள பகுதிகளில் மட்டும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. அதுவும் சில மணி நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது.
தேசிய அளவில் அல்ல, மாநில அளவில் ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டால் கூட அந்த மாநிலம் முழுவதும் தலை கீழாகப் புரட்டப்படுவதையும் பந்த்களையும் தர்ணாக்களையும் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, சவூதி மன்னரின் மரணமும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற நல்லடக்கமும், ஆச்சரியத்தைத் தந்திருக்கும்.

மன்னரின் மரணம் குறித்து அதிகாரப் பூர்வமாக சவூதி தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் காலையிலிருந்து அடக்கம் செய்யப் படும் மறுநாள் மாலை வரை மன்னரின் ஜனாஸாவோ, ஜனாஸா இருந்த இடமோ கூட தொலைக் காட்சியில் காண்பிக்கப்படவே இல்லை.
மன்னர் இறந்த மறு நாள் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழ வைக்கப்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஜனாஸா கொண்டு வந்து இறக்கப்பட்டபோது தான் மன்னரின் ஜனாஸா முதன் முதலாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. அதுவும் மன்னர் வழக்கமாக அணியும் மேலங்கியால் முழுவதும் மூடப்பட்ட நிலையில். இந்தக் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கண்ணுற்ற உலக மக்கள் அனைவரும் அதிசயித்திருப்பர்.

அலங்ஙார ஊர்தி இல்லை. மலர் வளையங்கள் இல்லை. மனங்கமழும் சந்தனப் பெட்டியில்லை. ஆம்புலன்ஸ் வண்டி திறக்கப்பட்டு அதிலிருந்து மன்னரின் புதல்வர்கள். இறங்கி தங்கள் தந்தையின் ஜனாஸாவைத் தம் தோள்களில் சுமந்த வண்ணம் பள்ளியின் உள்ளே எடுத்துச் சென்றனர்.
மன்னரின் ஜனாஸாவை வைத்து எடுத்துச் சென்ற சந்தூக் பெட்டிக் கூட வழக்கமாக அனைத்து ஜளாஸாக்களையும் வைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண பழைய சந்தூக் தான். பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.

அஸர் தொழுகை முடிந்த பிறகு அனைவரும் அப்படியே எழுந்து நிற்க, சவூதியின் தலைமை முப்தி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல்லாஹ் அவர்கள் உட்பட பல இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அணிவகுத்து நின்று தொழுகையை நிறைவேற்றினர்.
இஸ்லாமிய முறைப்படி இறந்தவருக்காகச் செய்யப்படும் இறுதி அஞ்சலி, கண் இமைக்கும் நேரத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்தது. தொழுகை முடிந்ததும் அருகில் உள்ள அல்ஊத் பொது மைய வாடிக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பீரங்கி வண்டி இல்லை.ராணுவ மரியாதை இல்லை. அதிர்; வேட்டுக்கள் வெடிக்கப்படவில்லை. ஆகாயத்தை நோக்கி குண்டுகள் முழங்கவில்லை. எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில், இஸ்லாமிய வழியில் எல்லோருக்கும் பொதுவான மைய வாடியில் எளிமையாக அடக்கம் செய்யப் பட்டதை இந்த உலகமே கண்டு வியந்தது.

தகவல்: அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

Sep 19, 2006

மாபெரும் பாவம் 2

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 2

அண்ணல் நபி (ஸல்) அவர்களை
அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்

நம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (திருக் குர்ஆன் 33:6)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார் உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம் அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதுவதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருப்பதாக நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் வந்து, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், முதலில் அல்லாஹ் நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித் தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத் தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.நம்மில் எவருமே, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ, கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல் அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப் பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.அன்த ஷம்சுன் அன்த பத்ருன் அன்த நூருன் ஃபவ்க நூரி நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி, ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான் (திருக் குர்ஆன் 24:35) என்னும் திரு மறை வசனத்தை நினைவிற் கொள்ள வேண்டாமா?வானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி (ஸல்) அவர்களை 'ஒளிக்குமேல் ஒளி' எனக் கூறுவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்திபாவங்களை மன்னிப்பவர் நீங்களே! என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள்? பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும் இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்' என்று சொல்வது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல், ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும், மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!மவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான கருத்துக்கள் ஷிர்க்கானவை. உதாரணத்திற்கு மட்டுமே ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி)இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்கள் விஷயத்தில் வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல் கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.

இறை நேசர்களை இறைவனுக்குச்
சமமாகக் கருதுவது ஷிர்க்

அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அடியொற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட தர்காக்களில், அடக்கப் பட்டுள்ளவர்கள் மட்டும் தான், 'இறை நேசர்கள்' என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த பண்பாளர்கள் எத்தனயோ? பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா? இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே! அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும், காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இறை நேசர்களைஅழைத்துப்
பிரார்த்திப்பது ஷிர்க்

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்(திருக் குர்ஆன் 7:194)அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது. (திருக் குர்ஆன் 7:197)அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக் குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
இந்த வசனங்கள் அனைத்தும், மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த வசனங்கள் இதோ!அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை? அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்? என்பது போல் விதண்டாவாதம் புரிவோரும்,இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார்கள்
என நம்புவது ஷிர்க்

அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (திருக் குர்ஆன் 6:17)அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! (திருக் குர்ஆன் 17:56)மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில் இருந்துக் கொண்டு 'குத்பிய்யத்' என்னும் கொடுமையை அரங்கேற்றுவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் குழந்தையைத்
தருவார்கள் என நம்புவது ஷிர்க்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். (திருக் குர்ஆன் 42:49)அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.(திருக் குர்ஆன் 42;:50)ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண் குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத் தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும் தம்பதிகள் நம்புகிறார்களே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வது ஷிர்க்

நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (திருக் குர்ஆன் 2:270)இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 3:35)நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும், மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
திருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும், இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு நேர்ச்சை செய்யும் பாவிகளே!அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம் கிடப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்
அறுத்துப் பலியிடுவது ஷிர்க்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை, உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன. (திருக் குர்ஆன் 5:3)அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ் தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது. 'நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கிறோம்' என்று வாதிடலாம்.இதோ! திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (திருக் குர்ஆன் 108:2)தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
நாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே! சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க் என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும் தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டால்?
அது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவருக்கு
ஸஜ்தாச் செய்வது ஷிர்க்

தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர்.அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக் குர்ஆன் 53:62)இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28)ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனது?அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
முஆத் (ரலி) அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றதுஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)


இறை நேசர்கள் இறந்த பின்பும்
உயிருடன் உள்ளனர் என நம்புவது ஷிர்க்

உலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார் (திருக் குர்ஆன் 43:61)அந்த ஈஸா (அலை) அவர்களும் கியாமத் நாள் சமீபம் பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரணம் அடைவார் என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து அறிகிறோம்.அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மரணித்து விட்டார்கள். அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அடக்கம் செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்.(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (திருக் குர்ஆன் 39:30,31)நபி (ஸல்) அவர்களே இறந்து விட்டார்கள் எனும் போது, இறை நேசர்கள் எனக் கருதப்பட்டோர் மரணிக்காமல் இன்றளவும் மண்ணறையில் உயிருடன் உள்ளனர் என்று நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (திருக் குர்ஆன் 3:2)மரணிக்காது உயிருடன் இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றி புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (திருக் குர்ஆன் 25:58)அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (திருக் குர்ஆன் 40:65)மரணமே இல்லாது என்றென்றும் உயிருடன் இருப்பவன், தான் மட்டுமே என்று அல்லாஹ் கூறும்போது 'மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது' என்று ராகம் போட்டுப் பாடுவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் உயிருடன் இருப்பதாக வாதிடுவோர் அதற்குச் சான்றாக கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூறுவர்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீhகள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் இந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 3:169)இறை வழியில் தங்கள் இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள் என்னும் உயிர்த்தியாகிகள்- அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர் எனவும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும்- நம்பிக்கை (ஈமான்) கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் இன்னும் விரிவாக அல்லாஹ் எடுத்தியம்புகிறான். ஆக, இறந்த பின்பும் உயிருடன் இருப்பதாக இறைவன் கூறுவது, இறை வழியில் போரிட்டுத் தம் இன்னுயிரை நீத்த 'ஷஹீத்' என்னும் உயிர்;த்தியாகிகளைப் பற்றித் தானே தவிர, தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டு, இறை நேசர்கள் என மக்கள் கருதிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்ல என்பதை, முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு ஊர்களிலும், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் ஆடல் பாடல் கச்சேரிகளால் உற்சவம் கொண்டாடி பக்தர்களை(?) உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன? இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்ன?அப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களே!ஏனெனில் அவர்கள் மரணித்து விட்டதால் தான் மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை, அவர்களின் வாரிசு தாரர்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இறை நேசர்களுக்கு இறந்த பின்பும்
ஆற்றல் இருப்பதாக நம்புவது ஷிர்க்

ஒரு மனிதர் உயிர் வாழும் போது, பல் வேறு ஆற்றல்களைப் பெற்றிருக்கலாம். அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் போன்ற பல் வேறு ஆற்றல்கனைப் பெற்ற அறிஞர்களாயினும், அவர்கள் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமே செயல் படுத்த முடியும்.உயிர் வாழ்ந்த போது இருந்த ஆற்றல்களே, இறந்த பின்பு இருக்க முடியாது என்கிற போது, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது, அறிவுக்கும், அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கும் எதிரானதல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந்து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும்? திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதா?அவ்லியாக்களுக் கெல்லாம் தலைவர் என்று கூறப்படுபவராகவும், இறை நேசர்களிலேயே மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் பலரால் கருதப் படுபவராகவும் உள்ளவரின் அடக்கத்தலம் அமையப் பெற்றுள்ள அந்த பக்தாத் நகரத்திலேயே அக்கிரமக்காரர்கள் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போது,
அண்டமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டி
கலக்கி விளையாட வல்லீர்
ஏழு உலகங்களையும் பம்பரம் போல் சுற்ற வைக்க ஆற்றல் பெற்றவரே! கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே! என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே! இது இறந்தவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த வில்லையா?

இறை நேசர்களை அழைத்தால் ஓடி வந்து
உதவுவார்கள் என நம்புவது ஷிர்க்

தங்களது முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களுக்கு சிலை வடித்து, அவற்றை வணங்கி வந்தவர்களும், அல்லாஹ்வையே இறைவனாகக் கருதினாலும், இந்த முன்னோர்கள் தங்களை அல்லாஹ்வின் பால் சமீபமாக்கி வைப்பார்கள் என்று நம்பி முன்னோர்களையும் வழிபாடு செய்தவர்களுமாகிய, மக்கத்துக் காஃபிர்கள் கூட சாதாரண நேரங்களில் தான், தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி முன்னோர்களின் சிலைகளுக்கு முன் மண்டியிட்டனர். ஆனால், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தனர். இதை நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வின் திரு மறையே அறிவிக்கிறது.
கடலில் பயணம் செய்யும் போது காற்றும் அலையும் அவர்களைச் சூழ்ந்து தாம் சுற்றி வளைக்கப் பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்தால், வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் நன்றியுடையோராக ஆவோம்.' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (திருக் குர்ஆன்10:22)ஆபத்திலிருந்து காப்பாற்றப் பட்ட பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள் என்று அடுத்த வசனம் கூறுகிறது.அவர்களை விடவும் மோசமாக, சாதாரண நேரங்களில் அல்லாஹ்வைத் தொழுது பிரார்த்திப்பவர்கள், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனரே! இது மக்கத்துக் காஃபிர்களின் செயலை விட மோசமான செயல் அல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

ஆபத்தான நேரங்களில் யா முஹ்யித்தீன்! என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம்?எத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவா? அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என நம்புவதும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று காத்திருப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ்வே செவியுறுபவன். அறிந்தவன். (திருக் குர்ஆன் 5:76)தானே செவியுறுபவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மனிதர்களாகிய நாமும் ஒருவர் அழைப்பதையும் பேசுவதையும் செவியுறுகின்றோமே என்று சிலர் கேட்கலாம்.செவியுறும் தன்மையில் மனிதர்களாகிய நமக்கும் அல்லாஹ்வுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பேர் நம்மை அழைத்தால், ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்து விட்டுத் தான் மற்றவரின் அழைப்புக்கு நம்மால் பதிலளிக்க முடியும். பலர் ஒரே சமயத்தில் அழைத்தாலோ, பேசினாலோ நம்மால் புரிந்துக் கொள்ளவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அப்படிப்பட்டதல்ல. ஒரே நேரத்தில் கோடானு கோடி பேர் அழைத்தாலும், அத்தனை பேரின் அழைப்பையும் ஏக காலத்தில் செவியுறவும், பதிலளிக்கவும் அல்லாஹ்வால் முடியும்;. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை.ஒரே நேரத்தில் பலரும் 'யா முஹ்யித்தீன்!' என்று அழைக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செவியுறுவார்கள் என்றால், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான செவியுறுதல் என்னும் தனித்தன்மை, அப்துல் காதிர் ஜீரானி (ரஹ்) அவர்களுக்கும் இருப்பதாக அல்லவா அர்த்தமாகிறது?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் மட்டுமே! இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பது?அவர்களின் உள்ளங்களிலும், செவியிலும், அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வையில் திரை உள்ளது. அவர்களுக்கு கடும் வேதனையுண்டு.(திருக் குர்ஆன் 2:7)

மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்குப் புரியும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர்களுடைய தாய் மொழியாகிய அரபியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியாது. அது போல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தாய் மொழியாகிய அரபியைத் தவிர, வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியும் என்பதாக அவர்களது வரலாற்றில் நம்மால் காண முடியவில்லை. அவர்கள் அறியாத மொழியில் அழைத்தாலும் அவர்களுக்குப் புரியும் என்பது அவர்கள் உயிர் வாழ்ந்த போதே சாத்தியமில்லை. அப்படியிருக்க அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும் என்று சொல்வது அறிவீனம்.
பிரசவ வேதனையில் துடிக்கும் போது, 'யா முஹ்யித்தீன்' என ஓலமிடும் தாய்க் குலமே! அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே! (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராக!அறியாமையால் சிலர் தவறான கொள்கையில் இருக்கக் கூடும். அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து விளங்குவதற்காக, தர்க்க ரீதியான சில காரணங்களை இது வரைத் தெளிவு படுத்தினோம்.ஆனால் அல்லாஹ்வின் வேத வசனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோருக்கு கீழ்க் காணும் சில வசனங்கள் மட்டுமே போதும். தெளிவான வழி காட்டுதல் கிடைத்து விடும்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீ;ங்கள் இணை கற்பித்ததை மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக் குர்ஆன் 35:14)
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன் 13:14)இவ்வளவு தெளிவாக அல்லாஹ் அறிவித்து விட்ட பின்னரும், கப்ருகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்கள், நமது அழைப்பை செவியுறுவார்கள், அழைப்புக்கு பதிலளிப்பார்கள், ஓடி வந்து உதவுவார்கள், நோய்களை நீக்குவார்கள், துன்பங்களைப் போக்குவார்கள், என்று நம்புவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கும் மறைவான
ஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்

மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே உள்ளன.அவனைத் தவிற யாரும் அறிய மாட்டார். (திருக் குர்ஆன் 6:59)வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 27:65)மறைவானவற்றை தன்னைத் தவிர யாரும் அறிய முடியாது, என்று கூறும் அல்லாஹ், தனது திருத் தூதர் அவர்கள் கூட அறியமாட்டார்கள் என்பதை, அவர்களையே கூறச் சொல்லி தனது தனிச் சிறப்பை உறுதிப் படுத்துகிறான். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக! (திருக் குர்ஆன் 6:50)
'மறைவான ஞானம்' என்பது சிலருக்குப் புரியாத வார்த்தையாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பதும், எங்கோ தொலை தூரத்தில் நடப்பதை இங்கிருந்துக் கொண்டே கண்களால் காணாமல், யாரும் அறிவிக்காமல், கூறவதும் தான் 'மறைவான ஞானம்'. இது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.கண்களால் காணாததையும், எதிர் காலத்தில் நடக்க இருப்பவை குறித்தும், ஏராளமான செய்திகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது உண்மை தான். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை, அப்போது வாழ்ந்த மக்களும், அதற்குப் பின் வரக் கூடிய சமுதாயமும் உறுதியாக நம்புவதற்காக, சில சமயங்களில் சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.இனி வரும் தலைமுறையினரும், அவர்களை உண்மையான இறைத் தூதர் தான் என்று நம்பும்படி, அவர்களின் எத்தனையோ முன்னறிவிப்புகள் இன்றளவும் மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இறைவனே அறிவித்துக் கொடுத்தவை.இறைவனே அறிவித்துக் கொடுத்த ஒரு சில, மிகவும் சொற்பமான விஷயங்களைத் தவிர, மற்றபடி மறைவான ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதற்கு, அவர்கள் வாழ்வில் எதிரிகளால் அவர்கள் அடைந்த இன்னல்களும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும், சில போர்க் களங்களில் சந்தித்த தோல்விகளும் சான்று பகர்கின்றன. மறைவான ஞானம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
எதிர் காலம் குறித்து குறிகாரன் சொல்வதை நம்புவதும், ராசி பலன் பார்த்து காரியங்கள் செய்வதும், மாந்திரீகத்தில் மனதைப் பரிகொடுப்பதும், பால் கிதாபு பார்த்து பரிகாரம் காண்பதும், மறைவான ஞானம் இந்த குடுகுடுப்பைக் காரனுக்கும், பால் கிதாபு பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிய பித்தலாட்டக் காரனுக்கும் இருப்பதாக நம்புவதாகாதா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

தாயத்து அணிவது ஷிர்க்

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதும், அல்லாஹ்வுக்குச் சமமாக மற்றவர்களைக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், தான் ஷிர்க் என்று நினைக்கிறோம்.சாதாரணமாவை என்று நாம் கருதும், சில சாதாரணமான சின்னஞ்சிறு செயல்கள் கூட ஷிர்க் என்னும் மன்னிக்க முடியாத மாபெரும் பாவத்தை ஏற்படுத்தி விடும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டார்.(ஆதாரம்:அஹ்மத்)'தாயத்து அணிந்துக் கொள்வது தவறில்லை' என்ற கொள்கையுடைய எந்த ஒரு முஸ்லிமும், இரண்டு இறைவன்கள் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் இந்த தாயத்துக்கும் உண்டு என்று நம்புவதோ இல்லை. அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் எவர் மனதிலும் இருப்பதில்லை.ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாயத்தை அணிந்துக் கொண்டவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.நோய் நொடிகள் ஏற்பட்டால், அல்லாஹ் சுகமளிப்பான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் சுகமளிக்கும் என்று நம்புவதும், துன்ப துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் காப்பாற்றும் என்று நம்புவதும்
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அப்படியானால் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்கிறோமே, மருத்துவர் நோயை நீக்குவார் என்று நம்புகிறோமே இது ஷிர்க் ஆகாதா? என்று சிலர் கேட்கக் கூடும்.நோய்க்கு மருத்துவம் செய்யாமல், கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்று வேறு மதங்களில் ஒரு சாராரின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை.நோயைத் தீர்ப்பவன் இறைவனே என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.அதே சமயம் வைத்தியமும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் அல்லாஹ் மருந்தில்லாமல் வைக்க வில்லை.(அறிவப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)
நமது கொள்கை கோட்பாடுகளில், வணக்க வழிபாடுகளில், சிந்தனை செயல்பாடுகளில், எள்ளளவும் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இல்லாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது வரை நாம் கொண்டிருந்த கொள்கைகளில், நமது செயல் முறைகளில், ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றை விட்டொழிக்க முன் வர வேண்டும்.காலங்காலமாக செய்துக் கொண்டிருந்தோம், நமது முன்னோர்கள் இப்படித் தான் செய்தார்கள், உலகில் பெரும் பாலானவர்கள் இப்படித் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர், என்பன போன்ற எந்த வாதமும் நாளை மறுமையில் பயனளிக்காது.காலங்காலமாக என்று நாம் கூறுவது, சில நூற்றாண்டுகளைத் தான். ஆனால் இணை வைத்தல் என்னும் கொள்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் ஊறித் திளைத்த ஸஹாபாக்கள், ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொண்ட போது, எல்லா விதமான ஷிர்க்கையும் வேரோடும், வேரடி மண்ணோடும், களைந் தெறிய வில்லையா?அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களாகிய ஹதீஸ்களும், நம் தாய் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு, வழி காட்டும் ஒளி விளக்குகளாக நம் முன்னே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.அறியாமை என்னும் இருளில் இருந்தோம், என்று அல்லாஹ்விடம் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆராய்ந்து பார்க்கும் அறிவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். நமக்கு வழங்கப்பட்ட அறிவு குறித்தும் நாளை மறுமையில் நாம் விசாரிக்கப் படுவோம்.இனியேனும் சிந்தித்து, நமது எண்ணங்களையும், செயல்களையும் சீர் திருத்திக் கொள்ள வில்லையென்றால், இறைவனின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.ஏனெனில் ஷிர்க் என்னும் பாவம் அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத மாபெரும் பாவமாகும்.இனியும் சரியான வழியை அறிந்துக் கொள்ளாமலும், அறிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளாமலும், இருந்தால் அதன் விளைவுகளை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ்வின் திரு மறை இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.
அவர்கள் வேதனையைப் பார்த்த போது 'அல்லாஹ்வை மட்டுமே நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறந்து விட்டோம்' என்றனர்.நமது வேதனையைப் பார்த்த போது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நஷ்டமடைந்தார்கள். (திருக் குர்ஆன் 40:84,85)
-----------------------------

">Link


மாபெரும் பாவம் 1

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 1

முன்னுரை

எல்லையில்லா அருளாளன், இணையில்லா அன்புடையோன்,அல்லாஹ்வின் திருப் பெயரால்..........
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்பட்;ட ஏகத்துவ மறுமலர்ச்சி, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது காலம் வரை மூடி மறைக்கப் பட்ட, கருத்துக் கருவூலங்கள், தௌ;ளிய தமிழில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. கேட்டவர் பலரும்,அதிசயித்தனர். ஆகா! இப்படியா மார்க்கம் சொல்கிறது! இதையெல்லாம் எங்களுக்கு மார்க்க அறிஞர்கள் சொல்லித் தரவில்லையே! என்று ஆதங்கப் பட்டனர். மார்க்க ஆதாரங்கள் என்றால், அது அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் தான் என்று பாமர மக்கள் கூட அறிந்துக் கொண்டனர். ஏகத்துவம் என்னும் இஸ்லாத்தின் ஆணி வேர், கற்பாறைகளைப் போல் இறுகிப் போன இதயங்களிலும் ஊடுருவியது. இதற்கு மேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்துக் கொண்டவர்களின், ஆர்த்தெழுந்த ஆவேசம் அடங்கிப் போனது. அதற்காக பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், அறிஞர்கள் ஆற்றிய பணி மகத்தானது. அறியாமை இருளிலிலிருந்து வெளியேறி, அற்புத ஏகத்துவத்தை ஆரத்தழுவிய நெஞ்சங்கள், அந்த அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்துக் கொண்டிருக்கின்றன. அத்தகையப் பேரறிஞர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை, குர்ஆன், ஹதீஸின் ஒளியில் சரிகண்டு, இந்த எளியேனும் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.இந் நூலைப் படிக்கும் அன்பர்கள், இதில் காணும் குறை நிறைகளை எனக்குத் தெரிவித்தால், நன்றி உடையவனாவேன். நன்றியுடன்,
Aஅப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்
இணை வைத்தலைத் தவிர

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான், என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)இன்னும் இவை போன்ற எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரே யொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

நல்லறங்கள் அழிந்து போகும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக் குர்ஆன் 6:88)நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)சொர்க்கம் செல்லவே முடியாது'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)இறைமறை குர்ஆனும், இறைத் தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தௌ;ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய- சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற- நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய- அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்?
இவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய 'ஷிர்க்' என்றால் என்ன? என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்- அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்- போதை தருவது மது என்பதிலும்- மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும், கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விpடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.
பெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவம் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும்,அவரிடம் ஷிர்;க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.

கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம்'

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது' என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாராhர் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்;க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்னும் அரபி வார்த்தை, திரு மறை குர்ஆனிலும், திரு நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஹதீஸ்களிலும், பல்வேறு இடங்களில் பயன் படுத்தப் பட்டிருப்பதும், அது மிகப் பெரும் பாவம் என்பதும், அதற்கு மன்னிப்பே இல்லை என்பதும், கொடிய நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்பதும், எல்லோருக்கும் தெரியும். இந்த ஷிர்க் என்னும் அரபி வார்த்தைக்கு தமிழில் இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பொருள் என்பதும், கூட அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் இவை நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை அல்ல என்பதால், இது குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் தானே அந்த ஷிர்க் என்னும் மாபெரும் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். ஷிர்க் அதாவது இணை வைத்தல் என்றால், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், ஏன் நபியாகவே இருந்தாலும், - அல்லாஹ்வுக்கு இணையாக அதாவது சமமாகக் கருதுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள்- சிறப்புத் தன்மைகள் மற்றவர்களுக்கும் உண்டு என எண்ணுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி ஆற்றல், மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும்-அல்லாஹ்வினால் மட்டுமே ஆகக் கூடிய காரியங்கள், மற்றவர்களாலும் ஆகும் என நம்புவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்-அல்லாஹ்வை அழைத்துப் பிராhர்த்திப்பது போல் மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சைகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்- அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும்-ஆகிய இவை யாவும் ஷிர்க் என்று அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.இவற்றுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு முன், இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்றால் என்ன? என்பது குறித்து சில உதாரணங்கள் மூலம் புரிந்துக் கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
ஒரு நிறுவனத்தின் முதலாளி தம்மிடம் பணி புரியும் ஊழியர்களுக்கு உணவும், உடையும், உறையுளும் இன்னும் சகல வசதிகளும் செய்து கொடுத்து சம்பளமும் தருகிறார். அவரிடம் பணிபுரியும் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளி ஒருவரை முதலாளி என்று சொன்னால், அதை அந்த முதலாளி அறிந்தால், ஏற்றுக் கொள்வாரா? எவ்வளவு கோபப்படுவார்? அந்தத் தொழிலாளி எவ்வளவு தான் நல்லவராக, வல்லவராக இருப்பினும் அந்த முதலாளி சகித்துக் கொள்ள மாட்டார் அல்லவா?அப்படியிருக்க, அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவர், மற்றவரை தனக்குச் சமமாகக் கருதினால் எப்படி ஏற்றுக் கொள்வான்? இன்னும் தெளிவாகப் புரியும்படி மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.ஒரு பெண் தனது கணவர் அல்லாத மற்றொருவரை 'தனது கணவர் மாதிpரி' என்று கூறினாலோ அல்லது நினத்தாலோ, அதை அந்தக் கணவர் அறிந்தால், அந்தக் கணவருக்கு எவ்வளவு கோபம் வரும்? அது போன்று தான், தான் அல்லாத மற்றவரைத் தனக்கு இணையாக ஒருவர் கருதினால், அதைவிடவும் அதிகமாக அல்லாஹ் கோபப்படுவான் அல்லவா? இணை வைத்தல் என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது இப்போது புரிகிறதா?
அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கடவுளெனக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவரை வணங்குவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் இருப்பதாக நம்புவதும், மட்டுமே ஷிர்க் என்று நம்மில் பலரும் நினைக்கின்றனர்.இவை யாவும் ஷிர்க் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே ஷிர்க் என்றிருந்தால், மக்காவில் வாழ்ந்த காஃபிர்களை, முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். மக்கத்துக் காஃபிர்களை 'இணை கற்பித்தோர்' என்று அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன? என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு.மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல என்பதும், அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல. இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது.வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்றும் கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக. (திருக் குர்ஆன் 10:31)வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன், செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ் தான் என்று அந்த மக்கத்துக் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்டால், 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 31:35)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.';சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்சமாட்டீர்களா?' என்று கேட்பீராக!'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று கேட்பீராக! (திருக் குர்ஆன் 23:84-89)இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.இவை யாவும் அல்லாஹ்வின் திரு மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ!அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே- தாயின் வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது 40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத் தொடங்கினார்கள்.ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?இருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர். அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினஅல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை! இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும்.இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே! ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல் தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது சரி தான்.ஆனால் அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும் போது- தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது கண்களை இறுக மூடிக் கொண்டு, கரடு முரடான பாதையில் தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற (தெளிவான) பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.நமது கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சிந்தனை செயல்பாடுகள்,சரியானவை தானா? என்பதை இறைமறை குர்ஆனின் அடிப்படையிலும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறு பரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெறலாம்.இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திரு மறை. (மற்றொன்று) எனது வழி முறை.(அறிப்பவர்:இப்னு அப்பாஸ்,நூல்:புகாரி) அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப் பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவும் சொல்கிறான்.அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (திருக் குர்ஆன் 47:24)இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பின பெறுவார்உண்டா? (திருக் குர்ஆன் 54:17)நமது கொள்கை கோட்பாடுகளை, வணக்க லழிபாடுகளை, அருள் மறை குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு ஷிர்;க் என்னும் இணை வைத்தல் எள்ளளவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் நாம் புரிந்த இறை வணக்கங்;கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும்.நம்மையும் அறியாமல் நமது இறை வணக்கத்தில், மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களில், ஷிர்க் என்னும் கொடிய பாவம் கடுகளவும் கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எல்லாமே பாழாகிப் போகும். மீள முடியாத நரக நெருப்பில் ஊழியூழி காலம் உழன்றுக் கொண்டிருக்க வேண்டியது தான். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)
நல்லவையும் தீயவையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டு விட்டன. இரண்டையும் பிரித்தறிய தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறது. மார்க்க விஷயத்தில் ஒரு செயல் நல்லதா- கெட்டதா என்பதை நம் விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது.இறை வணக்கத்திலிருந்து இல்லற வாழ்க்கை வரை ஆகுமானவற்றையும் ஆகாதவற்றையும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவாக விளக்கி விட்டார்கள். அதற்கு மேலும் மார்க்க விஷயத்தில் நமது சுய அபிப்பிராயத்திற்கு முடிவு செய்வது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கி விட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வார்கள், எனவே தீயவற்றைக் குறித்து நாம் அலசி ஆராயத் தேவையில்லை.ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப் படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே வழக்கத்தில் உள்ளவற்றில் தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. நல்ல பொருட்கள் என்று நம்பப் பட்டவைகளில் தான் போலிகள் உருவாகி விற்பனைக்கு வரும்.நல்லவர்களை வழி கெடுப்பதில் தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கரைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும்.இறைவனும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் 'நன்மை' என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை தான் நன்மை. அவை மட்டுமே நன்மைகளாகும்.அவற்றைத் தவிர, வேறு எவரேனும் தம் சுய விருப்பத்திற்கு 'நல்லவை' என்று பட்டியலிட்டவை எவையும் நல்லவையாகாது. பட்டியலிட்டவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரியே.நமது கொள்கைகளில், எண்ணங்களில், செயல்களில், சிந்தனைகளில், நமக்கே தெரியாமல் இணை வைத்தல் என்னும் ஷிர்க் எந்த வகையிலெல்லாம் ஊடுருவி இருக்கலாம் என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

">Link

Sep 16, 2006

இங்கிதம் வேண்டும்


மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.
அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.
ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்?' என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும்.
பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.
தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும் அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.
பலர் சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும் முறையற்ற செயல்.
பலருடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால், மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.
நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன் கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிறருக்கு நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை நாம் செலுத்த வேண்டும்.
நமக்காக ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால் நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும் நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும் நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல் வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய வைக்கும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.
பலர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான, நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும்.
நமது மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும் இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
படிக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால் வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின் படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தொலை தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில் ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா? என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும் போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும்.
தொலைபேசியில் முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர் அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர் நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா?' என்று கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும்.
மரணம் போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
பலருடன் சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும்.
பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!
------------------------------------


">Link

Sep 15, 2006

திருக்குர்ஆன்-சில தேன்துளிகள்

திருக் குர்ஆன்-சில தேன் துளிகள்

A.முஹம்மது இப்ராஹீம் பிகாம்

மதிப்புரை
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும், ஸலாமும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் உற்றார் உறவினர், உற்ற தோழர்கள் மற்றும் நன்னெறி நடந்த நல்லோர் அனைவர் மீதும் உலகம் உள்ளளவும் உண்டாகட்டும். பொதுவாக அறிஞர்கள் எழுதும் நூலுக்கு அவர்களை விடப் பேரறிஞர்கள் தான் மதிப்புரை எழுதுவது மரபு. அதுவே முறையும் கூட. விதி முறை எதுவானாலும் அதற்குச் சில விதி விலக்கு இருப்பதுபோல், இங்கே ஒரு பேரறிஞர் எழுதிய நூலுக்கு, ஒரு சாதாரணமானவன் மதிப்புரை எழுதப் பணிக்கப் பட்டுள்ளேன். இந்நூலாசிரியர் அவர்கள், தாம் தொகுத்து வைத்திருந்த, கருத்துக் கருவூலங்களை நூலாக வெளியிடும் மேலான பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்த போது அவர்களின் இதய சிம்மாசனத்தில் எமக்கொரு இடம் அளித்து இருக்க வைத்ததை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். எங்கள் ஊரின் 'நடமாடும் பல்கலைக் கழகம்' என்று பலராலும் வர்ணிக்கப்படும் பெருந்தகை எழுதிய 'திருக் குர்ஆன் சில தேன் துளிகள்' என்னும் இந் நந்நூல் அளவிற் சிறிதானாலும் திருக்குர்ஆன் பற்றிய கருத்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்வது மிகையாகாது. தேன் துளிகளைச் சுவைத்துப் பாருங்கள். தெவிட்டாத பேரின்பம் பெருவீர்கள். இந் நூலாசிரியர், இது போன்று இன்னும் பல நூல்கள் எழுதவும், இவர்களின் சீரிய முயற்சிகளை எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிக்கவும் பிரார்த்திக்கிறேன். அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்......... (திருமறை குர்ஆனின் முதல் வசனமும் இதுவே) ---------------------------------------- இன்றைக்கு சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதம் ஹீப்ரு மொழியில் அருளப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸபூர் வேதம் யூனானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இன்ஜீல் வேதம் சுரியானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமறை குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

குர்ஆன் என்னும் அரபிச் சொல்லுக்கு, ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது, எனப் பொருள்களுண்டு. வானவர் தலைவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் 'ஓதப்பட்டது'. உலகின் அதிகமான மக்களால் 'ஓதக் கூடியது'. மனித குல மேன்மைக்காக 'ஓத வேண்டியது'.
-----------------------------

திருக் குர்ஆன் மக்காவில் 13 ஆண்டுகளும், மதீனாவில் 10 ஆண்டுகளும், ஆக 23 ஆண்டுகளில், கொஞ்;சம் கொஞ்சமாக, காலத்திற்கும், சூழ் நிலைக்கும் ஏற்றவாறு 486 தடவைகளில் அருளப்பட்டது.
-------------------------------
திருக் குர்ஆன் வசனங்கள் ஒவ்வொரு முறை இறங்கும் போதும், அவற்றை எழுதிப் பாதுகாக்க ஏற்பாடு செய்;யப் பட்ட எழுத்தாளர்களில், அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி), ஆகிய 10 பேர் குறிப்பிடத் தக்கவர்கள் திருக் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டபோது, உடனுக்குடன் பேரீச்ச மரப் பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப் பட்;ட தோல்களிலும், கால் நடைகளின் அகலமான எலும்புகளிலும், எழுதி வைக்கப் பட்டன.
----------------------------
எழுதி வைக்கப் பட்டிருந்த திருக் குர்ஆன் வசனங்கள், அனைத்தையும் ஒன்று திரட்டி, முழுமையான மூலப் பிரதியை உருவாக்கிய பெருமை, உஸ்மான் (ரலி) அவர்களைச் சாரும். உஸ்மான் (ரலி) உருவாக்;கிய முழுமையான மூலப் பிரதிகளில் ஒன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகர அருங்காட்சி யகத்திலும், மற்றொன்று ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகர அருங்காட்சி யகத்திலும் இன்றளவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
உஸ்மான் (ரலி) அவர்கள் உருவாக்கிய இந்த மூலப் பிரதிகளின் அடிப்படையில் தான், இன்றளவும் உலகம் முழுவதும் திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடப் படுகின்றன.
--------------------------
உலகில் மிக அதிகமான அளவில், பல இலட்;சக் கணக்கானோர், மூல மொழியாகிய அரபி மொழி யிலேயே முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருக் கின்றனர். வேதங்களில் திருக் குர்ஆனுக்கு மட்டுமே இத் தனிச் சிறப்பு உண்டு.
-----------------------------
அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், இன்;று வரை ஒரு எழுத்தோ, புள்ளியோ, மாற்றப் படாமல், பாதுகாக்கப்பட்டு வரும் வேதம் திருக் குர்ஆன் மட்டுமே. ஏனெனில் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்;தை (உம் மீது) இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (திருக் குர்ஆன் 15;:9) ----------------------------
திரு மறை குர்ஆனில், இவ் வேதத்தின் பெயர் 'குர்ஆன்' என்று 15 இடங்களிலும், 'அல் குர்ஆன்' என்;று 50 இடங்களிலும், குறிப்பிடப் பட்டுள்ளது. இது போக இன்னும் பல் வேறு சிறப்புப் பெயர்களில் இவ் வேதம் அழைக்கப் படுகிறது. அவற்றின் விபரமும், பொருளும், இடம் பெற்றுள்ள வசனங்களும்-
1. அல் கிதாப் ¬-திரு வேதம்(2:)
2. அல் பயான் -தெளிவான விளக்கம்(3:138)
3. அல் புர்ஹான் -உறுதியான அத்தாட்சி(4:174)
4. அத் திக்ரு -ஞானம் நிறைந்தது, நினைவூட்டுவது(3:58)5. அல் ஃபுர்கான் -நன்மை தீமைகளை பிரித்தறிவிப்பது (2:185)6. அந் நூர் -பேரொளி (4:174)
7. அல் ஹக்கு -மெய்யானது(2:91)
8. அல் கரீம் -கண்ணியமானது(56:77)
9. அல் முபீன் -தெளிவானது(5:17)
10. அல் ஹகீம் -ஞானம் மிக்கது(36:2)
11. அல்அஜீஸ்-சங்கையானது, வல்லமையுடையது(41:41)
12. அல் ஹுதா -நேர்வழிகாட்டி(3:138)
13. அர் ரஹ்மத் -அருள்(6:157)
14. அஷ் ஷிஃபா -அருமருந்து(10:57)
15. அல் மவ்இளத் -நற்போதனை(3:138)
16. அல் ஹிக்மத் -ஞானம் நிறைந்தது(2:151)
17. அல் முஹைமின் -பாதுகாப்பது(5:48)
18. அல் கய்யிம் -உறுதியானது,நிலை பெற்றது(2:151)
19. அந் நிஃமத் -அருட் கொடை(93:11)
20. அர் ரூஹ் -ஆன்மா(42:52)
21. அத் தன்ஸீல் -இறக்கியருளப் பெற்றது(20:4)
22. அல் ஹுக்மு -சட்ட திட்டங்கள்(13:37)
23. அல் முபாரக் -நல்லாசிகள்(6:92)
24. அல்முஸத்திக்-முன்வேதங்களை மெய்ப்பிப்பது(6:92)
25. அல் பஷீர் -நன் மாராயங் கூறுவது(41:4)
26. அந் நதீர் -அச்சமூட்டி எச்சரிப்பது(41:4)
27. அல் முதஹ்ஹர் -பரிசுத்தமானது(80:14)
28. அல் முகர்ரமா -சங்கையானது(80:13)
29. அல் மஜீத் -கண்ணியம் மிக்கது(50:1)
30. அல் அரபிய்யு -அரபி மொழியிலுள்ளது(12:2)
31. அல் மர்ஃபூஆ -உயர்வானது(80:14)
32. அல் அஜப் -ஆச்சரியமானது(72:1)
33. அல் பஸாயிர் -அறிவொளி(7:203)
34. அத் திக்ரா -நல்லுபதேசம்(7:2)
35. ஹப்லுல்லாஹ் -அல்லாஹ்வின் கயிறு(3:103)
-------------------------------------
திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் 'லைலத்துல் கத்ர்' என்னும் புனித இரவில் தான் முதன் முதல் இறங்கத் தொடங்கியது. நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.(97:1)
-----------------------------------
திருக் குர்ஆனில் முதன் முதல் அருளப்பட்;ட வசனங்கள் 96 ஆம் அத்தியாயத்தின் முதல் 5 வசனங்களாகும்.முதல் வசனம் இப்படித் தொடங்குகிறது.'(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக' (96:1)
----------------------------
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது, அரபாத் பெரு வெளியில், துல் ஹஜ் 9 ஆம் நாள் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இறங்கியது. இத்துடன் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டது. அந்த இறுதி வசனம் இதோ!
....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்;கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். (5:3)
--------------------------------
திருக் குர்ஆனில் 103,108,110 ஆகிய மூன்று அத்தியாயங்கள் மூன்று வசனங்களை மட்டுமே கொண்டவை. அல் பகரா என்னும் இரண்டாவது அத்தியாயம் தான் மிகப் பெரியது. இவ் வத்தியாயத்தில் 286 வசனங்கள் உள்ளன.
--------------------------------
இரண்டாவது அத்தியாயத்தின் 282 ஆவது வசனம் தான் குர்ஆனிலேயே மிக நீண்ட வசனம் ஆகும். இந்த ஒரு வசனம் மட்டுமே ஒரு பக்கம் வரும். கடன் கொடுக்கல் வாங்கலின் போது எழுதி வைத்;துக் கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் அறிவுறுத்தப் படுகிறது.
------------------------------
அல் ஃபத்ஹு(வெற்றி) என்னும் 48 ஆவது அத்தியாயத்தின் இறுதி வசனம், 'முஹம்மத் ரசூலுல்லாஹ்' எனத் தொடங்குகிறது. இந்த வசனத்தில் அரபி மொழியின் 28 எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. திருக் குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666. முழுக் குர்ஆனும் 114 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் மக்காவில் அருளப்ப பட்டவை 86 அத்தியாயங்கள், மதீனாவில் அருளப்பட்டவை 28 அத்தியாயங்கள்.
-----------------------------------
திருக் குர்ஆனை மாதம் ஒரு முறை ஓதி முடிக்;க வசதியாக 30 சம பாகங்களாகவும், வாரம் ஒரு முறை ஓதி முடிக்க வசதியாக 7 மன்ஸில்களாகவும் மார்க்க அறிஞர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
----------------------------------
மதீனாவின் திருக் குர்ஆன் பதிப்பகத்தில் அச்சிடப்படும் அனைத்து வகை திருக் குர்ஆன் பதிப்புகளிலும், ஒவ்வொரு பக்கத்தின் இறுதி வரியில் வசனம் சிதைவு படாமல் மிகச் சரியாக நிறைவு பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
-------------------------------
திருக் குர்ஆனின் மூலப் பிரதிகளிலோ, அரபி மொழியிலோ, ஜபர், ஜேர், பேஷ் போன்ற உயிர் மெய்;க் குறியீடுகள் இருக்க வில்லை. அப்துல் மலிக் பின் மர்வான் உடைய ஆட்சியில், ஹஜ்ஜாஜ் பின் யூசூப் என்ற அதிகாரியின் மேற் பார்வையில் அரபி மொழியில் உயிர் மெய்க் குறியீடுகள் உருவாக்கப் பட்டன. உலக மக்கள் அனைவரும் திருக் குர்ஆனை பிழையின்றி எளிதாக வாசிக்க இந்த எழுத்துச் சீர்;த் திருத்தம் உதவியாக அமைந்தது.
-------------------------------
அரபி மொழியின் மிகச் சிறந்த இலக்கிய நடையில் அமைந்துள்ள இத் திருக் குர்ஆனை, இறை வனிடமிருந்து பெற்று இவ்வுலகுக்கு அறிவித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்;கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை. அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின் பற்றுங்கள். நேர் வழி பெறுவீர்கள். (7:158)
-----------------------------
திருக் குர்ஆனில் அல்லாஹ் என்னும் சொல் 2584 தடவை இடம் பெற்றுள்ளது. நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பெயர் 52 இடங்களிலும், நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயர் 5 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஜகாத் குறித்து 19 அத்தியாயங்களில், 30 இடங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது. அவற்றில் 28 இடங்களில் தொழுகையுடன் இணைத்தே சொல்லப் படுகிறது.
-------------------------
திருக் குர்ஆனில் கீழ்க் காணும் எதிர் மறையான சொற்கள் சம அளவில் இடம் பெற்றுள்ளன.
துன்யா(இம்மை) 115 ஆகிரத்(மறுமை) 115
மவ்த்(இறப்பு) 145 ஹயாத்(வாழ்வு) 145
நஃப்வு(பயன்) 50 ஃபஸாத்(இடர்) 50
ஹர்கு(வெப்பம்) 4 பர்த்(குளிர்) 4
ஸாலிஹாத்(நல்லவை)167 ஸய்யிஆத்(தீயவை) 167
குஃப்ர்(இறை மறுப்பு) 25 ஈமான்(இறை நம்பிக்கை25
ஷைத்தான் 88 மலாயிகா 88

----------------------------------
இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்றாலும், முஸ்லிம்களுக்கிடையே தங்கள் வணக்க வழிபாடு களின் செயல் முறைகளில் சில பிரிவுகள் இருப்பதை மறுப்பதற் கில்லை. அப்படிப்பட்ட பிரிவினர் எவருமே குர்ஆனுடைய விஷயத்தில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்;லை என்பது மிக முக்கியம்.
--------------------------
உலகில் 22 நாடுகளின் தேசிய மொழி அரபி எனினும்;, ஒவ்வொரு நாட்டினரின் பேச்சு வழக்கும், உச்சரிப்பும் வித்தியாசப்படும். ஆனாலும், உலகெங்கும் வாழும் அரபியர், மற்றும் அரபியர் அல்லாதோர் அனைவரும் அரபியில் குர்ஆனை ஓதும் முறையும் உச்சரிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
------------------------------------------
மனித சமுதாயத்தை நேர் வழிப் படுத்த ஏராளமான இறைத் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்தனர் என்றாலும் அவர்களில் 25 இறைத் தூதர்களிக் பெயர்கள் மட்டுமே திருக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. 1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்2. நூஹ் அலைஹிஸ்ஸலாம் 3. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்4. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்5. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்;6. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் 7. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் 8. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் 9. அல்யஸஃ அiஹிஸ்ஸலாம் 10 யூசூஃப் அலைஹிஸ்ஸலாம் 11. யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்12. தாவூத் அலைஹிஸ்ஸலாம் 13. சுலைமான் அலைஹிஸ்ஸலாம்14. மூஸா அலைஹிஸ்ஸலாம்15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்16 யஹ்யா அலைஹிஸ்ஸலாம்17. ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்18 யஃகூப் அலைஹிஸ்ஸலாம் 19. லூத் அலைஹிஸ்ஸலாம்20. ஹுத் அலைஹிஸ்ஸலாம்21. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்22. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்23. துல் கிப்ல்அலைஹிஸ்ஸலாம்24. ஈஸாஅலைஹிஸ்ஸலாம்25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய இறைத்) தூதர் உண்டு(10:47) என்று அறிவிக்கும் அல்லாஹ்வின் திருமறை, அனைத்து மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டதாகவும் அறிவிக்கிறது.
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். திருக்குர்ஆன்(14:4) அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகில உலகத்துக்கும் அருட் கொடையாக அனுப்பப் பட்டவர்கள்(21:107) என்று கூறும் அல்லாஹ்வின் திருமறை, இது உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட வேதம் எனவும் அறிவிக்கிறது. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ் வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்(திருக் குர்ஆன் 25:1)
---------------------
கணிசமான மக்களால் பேசப்படும், உலகின் பெரும்பாலான மொழிகளில் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மதீனா நகரில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகம், இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழியாக்கத்தைப் பிரசுரித்து ஆண்டு தோறும் புனித ஹஜ்ஜுக்கு வருகின்ற அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
--------------------------
இத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகத்தில், திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடுவது தவிற, ஒலி ஒளி நாடாக்கள்,மற்றும் குறுந்தகடுகள் (சிடி) ஆகிவற்றில் பதிவு செய்யும் பணியும் நடைபெறுகிறது. இவ்வளாகத்தில் பணி புரியும் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் பாலான ஊழியர்கள் ஹாஃபிஸ்கள் அதாவது முழுக் குர்ஆனையும் மனனம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பல் வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் திருக் குர்ஆன் பிரதிகளை பதிப்பிக்கும் இத் திருக்குர்ஆன் பதிப்பக வளாகம், கண் பார்வையற்றவர்கள் தங்;கள் விரல்களால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையிலும் திருக் குர்ஆன் பிரதிகளை வெளியிட்டுள்ளது. DAEWOO என்னும் கொரிய நிறுவனம் தயாரித்து இஸ்லாமிய நாடுகளில் விற்பனையாகும் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கியதும் முதலில் திரு மறை குர்ஆனின் முதல் அத்தியாயம் 'சூரத்துல் ஃபாத்திஹா' சின்னத் திரையில் சில நொடிகள் பளிச் செனத் தோன்றும். இத் தயாரிப்பு முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-------------------------------
திருக் குர்ஆனின் புகழ் பெற்ற ஆங்கில மொழி பெயர்ப்பு THE MEANING OF THE QURAN என்ற பெயரில் வெளிவந்தது. மொழி பெயர்த்தவர் 'மார்மடியூக் பிக்தால்' என்னும் இங்கிலாந்நு அறிஞர். இவர் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர் என்பதும், இவரது தந்தை 'சார்லஸ் ஜி. பிக்தால்' என்பவர் ஒரு புகழ் பெற்ற கிறிஸ்தவப் பாதிரியார் என்பதும் ஆச்சரியப் படவைக்கும் உண்மைகளாகும்.
----------------------
திருக் குர்ஆனுக்கு தமிழ் மொழியில் பல மொழி பெயர்ப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன என்றாலும், முதல் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு 'தர்ஜுமத்;துல் குர்ஆன்' என்ற பெயரில் வெளி வந்தது. மொழி பெயர்த்தவர் ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி என்னும் பெருமேதை. இவர்கள் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் தந்தையாவார்.
---------------------------
ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் 'தர்ஜுமத்துல் குர்ஆன்' என்னும் தமிழ் மொழி பெயர்ப்பில், திருமறை வசனங்களின் நேரடித் தமிழ் மொழி பெயர்ப்பும், அடைப்புக் குறிக்குள் அதற்கான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ள விளக்கத்தைச் சேர்த்துப் படித்தாலும், விட்டு விட்டு நேரடி மொழி பெயர்ப்பை மட்டும் படித்தாலும் வாக்கியங்களும், வார்த்தைகளும் சிதைவு படாமல் முழுமையாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் கவனமாக எழுத்துக்கள் உட்படச் சரியாகக் கையாளப் பட்டுள்ளன. இப்படி ஒரு சிறந்த மொழி நடையில் தமிழ் மொழியின் வரலாற்றில் வேறு எந்த மொழி பெயர்ப்பும் வெளி வந்ததில்லை எனக் கூறலாம்.
---------------------------
தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்த, திருக் குர்ஆனின் அனைத்து மொழி பெயர்ப்புகளும் மூல மொழியாகிய அரபியுடன் இணைத்தே வெளியிடப் பட்டுள்ளன. ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் மொழி பெயர்ப்பு ஒரு முறை தமிழ் மொழியில் மட்;டும் வெளியிடப் பட்டது. 'அரபி மொழியுடன் சேர்த்தே வெளியிடுவது தான் குர்ஆனை சங்கைப் படுத்தும்' என பல்வேறு அறிஞர்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, தமிழில் மட்டும் வெளி வந்த அந்தப் பதிப்பு, ஒரே பதிப்புடன் நிறுத்தப் பட்டது.
-----------------------------
தின மணி நாளிதழில், தினந்தோறும் திரு மறை குர்ஆனின் வேத வரிகளை முன் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு இறை வேத வரிகள் எல்;லா மக்களையும் சென்றடையும் ஒரு வித்தியாசமான மார்க்கச் சேவையைச் செய்தது, சென்னை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்.
---------------------------
திருக் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை, மிக மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு பரவலாக தமிழ் கூறு நல்லுலகில் பரவச் செய்த பெருமை ஜான் ட்ரஸ்ட் நிறுவனத்தைச் சேரும். தொடர்ந்து வருடந் தோறும் பல்லாயிரம் பிரதிகள் பதிப்பித்த அந்நிறுவனத்;தின் சாதனையே இதற்குச் சான்றாகும்.
--------------------------
தமிழில் வெளிவந்த திருக் குர்ஆனின் மொழி பெயர்ப்புக்கள் அனைத்துமே அரபி மொழி நடையின் படி வலமிருந்து இடமாகத் தான் பக்கங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். தற்காலத்தில் உள்ள திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் சில, தமிழ் மொழி நடையின் படி இடமிருந்து வலமாக பக்கங்கள் வரிசைப் பட்டுள்ளன.
--------------------------
தானும் ஒரு நபியெனத் தன்னைப் பிரகடனப் படுத்;திக் கொண்ட முஸைலமாவுக்கு எதிராக அபூபக்கர் (ரலி) அவர்ளின் ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு 'யமாமா' என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் திருக் குர்ஆனை மனனம் செய்திருந்த 70 நபித் தோழர்கள் கொல்லப் பட்டார்கள்.
----------------------------
திருக் குர்ஆனில் சட்ட திட்டங்கள் காலத்திற்கும், சூழ் நிலைக்கும் தக்கவாறு படிப்படியாக அருளப்பட்டன. உதாரணமாக மது விலக்குக் கொள்கை மூன்று கட்டங்களாக அமுல் படுத்தப் பட்டிருக்கிறது.முதற் கட்டம்: (நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது.....(2:219) இரண்டாம் கட்டம்:நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துக் கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்....(4:43)
இறுதிக் கட்டம்: ஈமான் கொண்டோரே! மது பானமும், சூதாட்டமும், கற் சிலைகளை வழி படுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அறுவறுக்கத் தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.(5:90)
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மது பானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி, அல்லாஹ்வின் நனைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)
---------------------------
இறை நிராகரிப்பாளர்களுக்கு (காஃபிர்களுக்கு) உதாரணமாக, நூஹ் நபியுடைய மனைவி, லூத் நபியுடயை மனைவி ஆகிய இரு பெண்களைக் குறிப்பிடும் அல் குர்ஆன்(66:10)
இறை நம்பிக்கையாளர்களுக்கு (மூமின்களுக்கு) முன்னுதாரணமாக ஃபிர்அவ்னுடைய மனைவியையும், இம்ரானின் புதல்வியாகிய மர்யமையும் (66:11,12) குறிப்பிடுகிறது.
-----------------------------
திருக் குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே நபித் தோழர் ஜைத் (ரலி) அவர்கள் மட்டுமே. வேறு எந்த நபித் தோழரின் பெயரும் குர்ஆனில் குறிப்பிடப் படவில்லை.
-------------------------------
தமிழில் 'தேருவருதே' என்பதையும், ஆங்கிலத்;தில் MALAYALAM என்று எழுதியும் இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே மாதிரி வரும். இத போல் திருக் குர்ஆனிலும் இரு சொற்றொடர்கள் இடம் பெற்றுள்ளன. குல்லுன் ஃபீ பலக்(36:40) ரப்பக்க ஃகப்பிர்(74:3) என்னும் இரு சொற்றொடர்களையும் அரபியில் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும்.
------------------------------
ஒரு போதும் நடை பெற முடியாத செயலுக்கு 'ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் இது நடக்காது' என்று தமிழில் ஒரு சொற் பிரயோகம் உண்டு. இது திருக் குர்ஆன் கூறும் உதாரணம். எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)
---------------------------
9 ஆவது மாதம்(செப்டம்பர்) 11 ஆம் நாள் அமெரிக்க மக்களின் மறக்க முடியாத நாள். ஆம் 2001 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் அமெரிக்காவின், 110 அடுக்கு மாடி உலக வர்த்தக மையக் கட்டடம் அடியோடு தரை மட்டமாகி தவிடு பொடியானது. 'செய்தது யார்?' என்பது இது வரை ஆதாரத்துடன் நிரூபிக்கப்ட வில்லை. பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இச் சம்பவம் அமெரிக்க மக்களின் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக இருந்துக் கொண்டே இருக்கும். 9 ஆவது மாதம், 11 ஆம் நாள், 110 அடுக்கு மாடிக் கட்டடம் இம் மூன்றையும் நினைவில் நிறுத்தி- திருக் குர்ஆனின் 9 ஆவது அத்தியாயம், 11 ஆம் பாகம், 110 ஆவது வசனத்தைப் புரட்டுங்கள். ஆச்சரியத்தில் உங்கள் கண்கள் அகல விரியும். அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது) அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும் வரை(அதாவது மரணிக்கும் வரை) அல்லாஹ் நன்கறிந்தவன். ஞானம் மிக்கவன் (9:110)
------------------------------
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்;தை ஆட்சி செய்த கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு எதிராக, இறைத் தூதர் நபி மூஸா அலைஹிஸ்ஸலம் அவர்கள் கிளர்த் தெழுந்தார்கள். இறுதியில் ஃபிர்அவனும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப் பட்டனர். இது குறித்து இறை மறை குர்ஆனில் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்(10:92) என்று அல்லாஹ் கூறுகிறான். சென்ற நூற்றாண்டில் அந்த உடல் கண்டெடுக்கப் பட்டு இது 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப் பட்டு இப்போது எகிப்து அருங்காட்சி யகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது ஒரு சான்று.
--------------------------------
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களைப் பின் பற்றியோரும் இறை ஆணைப்படி ஏறிக் கொண்ட கப்பல் மாபெரும் வெள்ளப் பிரளயத்துக்குப்பின் இறுதியில் ஜுதி மலையில் தரை ஒதுங்கியதாகக் குர்ஆன் கூறுகிறது(11:44) துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில் பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டன. மரக்கலம் மலை உச்சிக்கு போனது எப்படி? என்று தொல்லியல் நிபுனர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க, திரு மறை குர்ஆன் தெளிவான விடையை முன் வைக்கிறது. நிச்சயமாக நாம் (வருங் காலத்திற்கு இ(ம்மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத் தோம். (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:15) சம்பவம் நடை பெற்று பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்ட பின்னர், இப்போது மிகச் சமீபத்தில் தான் இவை கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இத்துனை காலம் இது எப்படி மனிதக் கண்களுக்கு புலப்படாமல் போனது? புராதனப் பொருட்கள் எவ்வளவு பழமையானவை? என்பதை மனிதன் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியும் அறிவைப் பெறுகின்றவரை இறைவன் இதனைப் பாதுகாத்து வைத்துள்ளான் என்பதை உணர முடிகிறது. 'விட்டு வைத்தோம்;' என்னும் இறைவேத வரிகள் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
----------------------------------

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்
வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்;திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)
------------------------------
ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போது, இதயம் சுருங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அன்றே சொன்னது அல் குர்ஆன். யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கிறான். (6:125) -----------------------------
நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காண வில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் (21:44) என்று திருக் குர்ஆன் குறிப்பிடுவதை, இன்றைய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தி வருகின்றனர். இன்றைக்கு பூம்புகார் எனப்படும் முன்னாள் காவிரிப் பூம்பட்டிணத்தின் பெரும் பகுதி, கடல் ஊடுருவி நிலப் பகுதி குறைந்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். இவ்விதம் பல் வேறு நாடுகளில், கடற்கரையோரங்களில் பூமி குறைந்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவின் தென் பகுதியுடன் முற் காலத்தில் இணைந்திருந்து, காலப் போக்கில் கடல் நீர் உட்புகுந்து இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கக் கூடும், என்று, இரு நாட்டு மக்களின் மொழியும், கலாச்சாரமும், உருவ ஒற்றுமையும் ஒரு போல் இருப்பதை ஆராய்ந்த புவியியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
---------------------------
இரண்டு கடல்கள் ஒன்று சேரும் இடங்களில் இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை, என்று கடல் ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அப்போதே திருக் குர்ஆன் அறிவித்து விட்டது. அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீற மாட்டா.(55:19,20)
----------------------------
தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி தனது கூட்டில் கொண்டு போய் சேமித்து வைக்கின்றன என்ற தான் பொதுவாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் தேனீக்கள் மலர்களிலிருந்து உறிஞ்சும் குளுக்கோஸ் தேனீக்களின் வயிற்றினுள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிவரும், கழிவு தான் தேன் என்று விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால் அப்போதே திருக் குர்ஆன் இதைத் தெளிவு படுத்திவிட்டது. ....அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகிறது. அதில் மக்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. (16:69) இரத்தம் தான் பாலாக மாறுவதாக நம்பப்பட்டு வந்த கருத்தை இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் மறுக்கிறது. உண்ணப்பட்ட உணவு குடலுக்குச் சென்று கூழாக அரைக்கப் பட்டு இரத்தம் உற்பத்தியாவதற்கு முன்பே பால் உற்பத்தியாவதை விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. விஞ்ஞானத்தின்;;;; முன்னோடியான மெஞ்ஞான வேதம் சுற்றி வளைக்காமல் நேரடியாகத் தெளிவாகவே சொல்கிறது. நிச்சயமாக உங்களுக்கு, கால் நடைகளிலும்(தக்க) படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம்.(16:66)
---------------------------------------



">Link

மரணத்தொடக்கம் 2

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும் 2
">Link
மண்ணறை வாழ்க்கை

மரணத்திற்குப் பின் உள்ள மண்ணறை வாழ்க்கை என்பது நமக்கு எந்த வகையிலும் அறிமுகம் இல்லாத ஒன்று. அனுபவித்தவர் எவரும் மீண்டு வந்து சொன்னதில்லை. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தமக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை அப்படியே நமக்குச் சொன்னார்கள்.அவரது மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 52:3,4)அந்த மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நாம் சுயமாக எதையும் கற்பனை செய்யமுடியாது. அது கற்பனைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கையைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியவை அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம்.அந்த மண்ணறை வாழ்க்கை குறித்து நாம் அறியும் செய்திகள் ஆச்சரியமானதாக இருக்கலாம். இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவை என்று ஆதாரப்பூர்வமாக அறியும் போது உண்மை விசுவாசிக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.கண்ணால் காண்பதை நம்புவது பெரிய விஷயமல்ல. காணாததை நம்புவது தான் பெரிய விஷயம். அப்படி ஐம்புலனுக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கை தான் மண்ணறை வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையும்.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டா? அப்படி ஒரு வாழ்க்கையின் அவசியம் தான் என்ன? கற்பனைக் கெட்டாத ஒரு கருப்புச் சிந்தனை தேவைதானா? இறைவனை ஏற்காத நாத்திகர்கள் மட்டுமின்றி, உண்மையான இறைவனை உணராத ஆத்திகர்களும் கூட இப்படிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.இவர்களை நோக்கி இறைவனின் திருமறை இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கின்றது.உங்களை வீணாகப் படைத்துள்ளோhம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? (திருக்குர்ஆன் 23:115)
உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை கோடானு கோடி மக்கள் தோன்றினார்கள். இனி உலகம் அழியும் நாள் வரை தோன்றுபவர்கள் எத்தனை கோடிகளோ! இவர்களில் ஏக இறைவனை ஏற்றவரும் உண்டு. ஏற்க மறுத்தவரும் உண்டு. பல்வேறு தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப் போரும் உண்டு. நண்மைகள் செய்து நானிலம் போற்ற நற்பெயர் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்தவரும் உண்டு. அநீதி இழைத்து, அநியாயங்கள் புரிந்து, கொள்ளை அடித்து, கொலைகள் செய்து கோரத் தாண்டவம் ஆடியவரும் உண்டு.இவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணிக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமே இப்படியே விட்டுவிடுவதா?வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா? (திருக்குர்ஆன் 75:36)இல்லை. இவர்களை இப்படியே வெறுமனே விட்டுவதில் அர்த்தமில்லை. இதில் நியாயமும் இல்லை. நீதிபதிகளுக்கெல்லாம் பெரிய நீதிபதியாகிய இறைவன், ஒவ்வொருவருக்கும் உரிய நீதியை நிச்சயம் வழங்குவான்.எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

மரணம் ஒரு முடிவல்ல!

தொடக்கம் தான்ஒரு மனிதன் மரணிப்பதோடு எல்லாம் முடிந்து விடும் என்றால் இவ்வுலகிவ் நல்லவர்கள் நல்வாழ்க்கை வாழ்ந்தற்கு என்ன பொருள்? தீயவர்கள் தம் மனம் போன போக்கில் வாழ்ந்ததற்குத் தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் போனது என்ன நியாயம்?குற்றங்கள் புரிந்தும் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகள், கண்டுபிடிக்கப்பட்டும் தண்டிக்கப் படாத குற்றவாளிகள், தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டும் செல்வத்தாலும் செல்வாக்கினாலும் தப்பித்து வெளியில் வந்த குற்றவாளிகள், ஆகிய இவர்களைத் தண்டிக்க அந்த வல்ல இறைவனால் மட்டுமே முடியும்.இவ்வுலகில் இவர்கள் தப்பித்து விடலாம். ஆனால் மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கையில் இவர்கள் தப்பிக்க முடியாது.ஒரு கொலை செய்தவனுக்கும், குண்டு வீசி பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டவனுக்கும் ஒரே விதமான தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்? மரண தண்டனை கூட ஒரு முறை தானே நிறவேற்ற முடியும். எனவே இவ்வுலகில் வழங்கப் படும் தண்டனைகள் ஒருபோதும் நியாயத் தீர்ப்பாகாது.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு. அதில் நியாயத்தீர்;ப்பு உண்டு என்பதை உணர்த்த அறிவுள்ள மனிதனுக்கு இதற்கு மேலும் ஆதாரம் தேவையில்லை.

மறுபடியும் எழுப்பப்படுவோம்

மரணித்து மண்ணறையில் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது எப்படி சாத்தியமாகும்? ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இது. இப்படி ஒரு வினாவை இறைவனின் திருமறை எழுப்பி அதற்கு தானே விடையும் அளிக்கிறது.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். (அவனை) நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்வன் யார்? என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்hன். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்.' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 36: 78,79)நாம் யார்? நமது தாயின் வயிற்றில் கருவாக உருவாவதற்கு முன் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? கண்ணுக்கே புலப்படாத உயிரணு எப்படிக் கருவாக உருவானது? உருவான கருவில் உயிரைப் புகுத்தியவன் யார்? மரபணுவுக்கு மகிமையைத் தந்தது யார்? நாம் பெற்றெடுத்த குழந்தை வளர்ந்து ஆளாகி அதுவும் குழந்தையைப் பெற்றடுக்கின்றதே! இந்த அற்புதங்கள் எவ்விதம் நிகழ்கின்றன?ஆம்! எல்லாம் வல்ல இறைவன் இந்த அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். எதுவுமாக இல்லாமலிருந்த நம்மை மனிதனாக உருவாக்கிய இறைவனுக்கு, நாம் மரணித்து மண்ணறையில் புதைக்கப் பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது இயலாத காரியமல்லவே!மனிதனின் இவ்வுலக வாழ்க்கை பிறப்பிலிருந்து துவங்குகிறது. இறப்பில் முடிகிறது. ஆனால் மறுவுலக வாழ்க்கை மனிதனின் இறப்பிலிருந்து தான் தொடங்குகிறது. முடிவே இல்லாத நீண்ட நெடும் நிரந்தர வாழ்க்கையின் முதற்கட்டம் மண்ணறையிலிருந்து தான் தொடங்குகிறது. மனிதன் இறந்தது முதல் மறுபடியும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பபடும் வரையுள்ள வாழ்க்கை தான் மண்ணறை வாழ்க்கை. இது ஒரு திரை மறைவு வாழ்க்கை. இதுவே பர்ஸக் உடைய வாழ்க்கை எனப்படும்.இறுதித் தீர்;ப்பு நாளில் அனைவரும் எழுப்பப்பட்டு அவரவர் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பொறுத்து நல்லவர்களாயின் சொர்க்கமும், தீயவர்களாயின் நரகமும் அளிக்கப்படும். அது நிரந்தர வாழ்க்கை. முடிவே இல்லாத வாழ்க்கை.மரணத்திற்குப் பின் உள்ள பர்ஸக் உடைய வாழ்க்கை என்பது மண்ணுக்கடியில் புதைக்கப் பட்டவர்களுக்கு மட்டும் தான் என்று கருதி விடக் கூடாது. கடலில் மூழ்கி இறந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்வர்கள், காட்டு மிருகங்களுக்கு இரையாகிப் போனவர்கள், நெருப்பில் எரிந்து கரியாகிப் போனவர்கள், அனைவருக்குமே இந்த கப்ருடைய வாழ்க்கை என்னும் பர்ஸக் உடைய வாழ்க்கை உண்டு.இவர்களுக்கு கப்ருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? கேள்விக் கணக்கு எப்படி இருக்கும்? விசாரணை எப்படி நடக்கும்? என்னும் கேள்விகளெல்லாம் நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டவை.மண்ணறை வாழ்க்கை மறுக்கமுடியாத உண்மை. அந்தத் திரை மறைவு வாழ்க்கையில் நல்லவர்கள் புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். தீயவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரை தொடரும்.மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் எந்த கப்ருக்கு அருகில் சென்றாலும் தமது தாடி நனையும் அளவுக்கு அழுவார்களாம். அவர்கள் கூறுகிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். 'கப்ருதான் மறுமையின் தங்குமிடங்களில் முதலாலதாகும். அங்கு ஒருவர் நிம்மதி அடைந்தால் மறுமையிலும் நிம்மதி அடையலாம். அங்கு ஒருவர் தோல்வி அடைந்தால் மறுமையிலும் தோல்விதான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று நற்சான்று வழங்ஙகப்பட்ட அந்த உஸ்மான் (ரலி) அவர்களே மண்ணறை வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்று நினைத்து அழுவார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள்

எத்தனை எத்தனை கப்ருகளுக்குப் போயிருக்கிறோம்? பெற்றோரை- உற்றார் உறவினரை- உடன்பிறந்தோரை நாமே முன்னின்று நல்லடக்கம் செய்திருக்கிறோம். நாமும் ஒரு நாள் இவ்விதமே புதைக்கப் படுவோம் என்பதை எப்போதாவது சிந்தித்தோமா? நமது கேள்வி கணக்கு விசாரனை எப்படி இருக்கும்? நமது மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? என்று நினைத்து கவலைப் பட்டது உண்டா? நமது கண்கள் அழுதிருக்கின்றனவா? நமது உள்ளம் உணர்ந்திருக்கின்றதா? அவரவர் பகுதிகளில் உள்ள கப்ருஸ்தான்களுக்கு அடிக்கடிச் செல்வதை இனியேனும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவ்விடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்கள் இறந்து போய் இந்த இடத்தில் புதைக்கப் பட்டதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் அன்பு செலுத்தியவர்கள், உங்கள் மீது அன்பு செலுத்தியவர்கள், உங்களை உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், நீங்கள் உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், உங்கள் வாழ்கைத் துணையாக வந்துசேர்ந்தவர்கள், சகோதரப் பாசம் பொழிந்து சகல இன்ப துன்பங்களிலும் பங்து கொண்டவர்கள், ஆசானாய் இருந்து வழிநடத்திச் சென்றவர்கள், ஆருயிர்;த் தோழராய் உங்கள் இதயத்தில் இடம் பிடித்தவர்கள், அனைவரும் இங்கே புதைக்கப் பட்டுள்ளனர். கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். மறுமையின் நினைவு உங்கள் மனத்திரையில் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும்.அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யச் செல்லும் போது, அங்கு அடக்கப் பட்டுள்ள அனைவருக்கும் ஸலாம் கூற வேண்டும். அடக்கப்பட்டுள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும்.நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கத்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி 'அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர், யஃபிருல்லாஹு லனா வலகும், அன்தும் ஸலஃபுனா வ நஹ்னு பில் அஸர்' எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி 973(இதன் பொருள்) அடக்கத்தலங்களில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். எங்களையும் உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக. நீங்கள் எங்களை முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்; கூடியவர்களாக உள்ளோம்.இவ்விதம் கப்ருகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 976தர்காக்கள் என்னும் அடக்கத்தலங்களுக்கு செல்லும் பெண்களே! நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.

அடக்கப்பட்ட பின் கப்ர் நெருக்கும்

எந்த மனிதரையும் கப்ரில் அடக்கிய பின், முதலில் அந்த மனிதரை கப்ர் நெருக்கும். அவர் கெட்டவராயினும் நல்லவராயினும் சரியே! கப்ருடைய இந்த முதல் நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியபது. நல்லவராயின் முதல் நெருக்குதலிலிருந்து கப்ர் தனது நெருக்கத்தைத் தளர்த்தும். தீயவராக இருப்பின் கப்ர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும்.கப்ருடைய இந்த நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியாது என்பதற்கு பின் வரும் நபி மொழியே சான்று. நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியும் என்றால் ஸஅது மீட்சி பெற்றிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத்வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களை கவலையடையச் செய்யக் கூடிய ஒருவர் மரணித்து விட்டார். அதனால் அல்லாஹ்வுடைய அர்ஷ் கூட நடுங்குகிறது என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவர்தான் ஸஅது (ரலி) அவர்கள்.இவ்வளவு மேன்மைப் பெற்ற அந்த ஸஅது (ரலி) அவர்களையே கப்ர் நெருக்காமல் விட்டதில்லை என்றால் மற்றவர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டும் காப்பானாக!' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! மண்ணறை வேதனை உள்ளது என்று கூறினார்கள்.மேலும் ஆயிஷா அவர்கள் கூறுகிறார்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்ததே இல்லை.அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி) ஆதாரம்: புகாரி 1372

மண்ணறை வேதனையும் மணமகனின் உறக்கமும்

மைய்யித் அடக்கம் செய்யப்பட்டவுடன் நீல நிறக் கண்களுடைய இரண்டு கருப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர், மற்றொருவர் நகீர். அவ்விருவரும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து) 'இந்த மனிதர் பற்றி நீர் என்ன கூறிக் கொண்டிருந்தீர்?' என்று கேட்பார்கள்.'இவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாகக் கூறுவார். அதற்கு அவ்விருவரும் 'இவ்வாறே நீர் கூறிவந்தீர் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பின்னர் அவரது அடக்கத் தலம் எழுபதுக்கு எழுபது முழமாக விரிவு படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்றப் படும். பிறகு அவரிடம் 'நீர் உறங்குவீராக' என்று கூறப்படும். அப்பேது அவர் 'நான் என் குடும்பத்தினரிடம் சென்று இதைக் கூறவேண்டும்' என்பார். அப்போது அவ்விருவரும் 'நெருக்கமான குடும்பத்தினர் தவிர மற்றவர் எழுப்பமுடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழுக்கும் வரை உறங்குவீராக!' என்று கூறுவர். அவன் முனாஃபிக்காக இருந்தால் (மேற்கண்ட அதே கேள்விக்கு விடையளிக்கும்போது) 'மக்கள் சொல்வதைச் செவியுற்று அதையே நானும் கூறினேன். (வேறெதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அதற்கு அவ்விருவரும் 'நீ அவ்வாறுதான் கூறி வந்தாய் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பூமியை நோக்கி 'இவரை நெருக்கு' என்று கூறப்படும். அது அவனை நெருக்கும். அதனால் அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 991ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப் பட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களது செறுப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்காரவைத்து 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்? என்று நபி (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்hதர்கள். அவன் மூமினாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான்.அவனிடம் (நீ கெட்டவனாக இருந்திருந்தால் உனக்கு கிடைக்கவிருந்த) 'நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும். என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளரான கதாதா(ரலி) குறிப்பிடுகிறார். அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால், 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப் படும்போது 'எனக் கொன்றும் தெரியாது மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான்.உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை, (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை, என்று கூறப்படும். மேலும் இரும்புச் சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி 1374உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்பும் வரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்றும் கூறப்படும்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி 1379

நபி (ஸல்) அவர்கள் கன்ட கனவு

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா? என்று கேட்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் 'இல்லை' என்றோம். அவர்கள் 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் இருவர் என்னிடம்வந்து என் கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுக் கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்;திருப்பவரின் கீழ் தாடையின் ஒரு புறம் குத்த, அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும், அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள், சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்புஎரிந்துக் கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிpகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாக இருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும், பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள்.அதில் ஆண்களும் பெண்களும் நிர்வானமாகக் கிடந்தார்கள்.நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுக் கொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப் பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க அவர் மீண்டும் பழயை இடத்துக்கே சென்றார். அப்போது 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள்.நான் இதுவரை அப்படி ஒரு அழகான வீட்டைப் பார்த்ததே இல்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும், இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் 'இரவு முழுதும் என்னை சுற்றிக் காண்பித்தீர்களே அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டேன்.அதற்கு அவ்விருவரும், ஆம்! முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட் நிலையில் நீர் பார்த்தீரே அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள். அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக் (அலை) அவர்கள்.நீர் நுழைந்த முதல் முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்;த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு இப்போது உமது தலையை உயர்த்தும் என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம் என்றதும், நான் 'எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்' என்றேன்.அதற்கு இருவரும் 'உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது அதை இன்னும் நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர் என்றனர்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஆதாரம்: புகாரி 1386 மேற்கண்ட நபி மொழியும், இன்னும் ஆதாரப் பூர்வமான பல்வேறு நபி மொழிகளும் மண்ணறை வேதனை குறித்து நமக்கு தௌ;ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

மண்ணறையில் நடைபெறும் விசாரனை, நல்லவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நிம்மதி, தீயவர்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை ஆகியவற்றில் எவ்வித சந்தேகமும் இல்லை.திடீர் மரணத்தை விட்டும் காப்பாற்றும்படி இறைவனிடம் இறைஞ்சுங்கள். சக்ராத் என்னும் மரண வேதனையை இலகுவாக்கித் தரும்படி அடிக்கடி பிரார்த்தியுங்கள். மரண வேளையில் கலிமாவை மொழியவும், ஷிர்க் என்னும் இணைவைத்தல், குஃப்ர் என்னும் இறை நிராகரிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்படியும் எந்நேரமும் இறைவனிடம் வேண்டுங்கள். மண்ணறை வேதனையை நினைத்து அஞ்சுங்கள். மறுமை என்னும் நிரந்தர வாழ்க்கையின் முதல் நுழைவாயில் மண்ணறை என்பதை மறந்து விடாதீர்கள். ஈமானுடனும் இனிய கலிமாவை மொழிந்த வண்ணமும், அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களுக்கு பாவமன்னிப்புத் தேடியவர்களாக, நமது இறுதி நேரம் அமையவும், மறுமையில் இன்ஷா அல்லாஹ் கிடைக்கவிருக்கும் சுவனபதியின் சுந்தரக் காட்சிகளை அனுதினமும் கண்டு ஆனந்தம் அடைந்தவர்களாக, மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் இறுதி நாள் வரை புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மை ஆக்கியருள இறைவனிடம் இறைஞ்சுவோமாக! அதற்கேற்ற வகையில் இம்மை வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக!

விருப்ப மொழியில் குர்ஆன்