Sep 19, 2006

மாபெரும் பாவம் 1

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 1

முன்னுரை

எல்லையில்லா அருளாளன், இணையில்லா அன்புடையோன்,அல்லாஹ்வின் திருப் பெயரால்..........
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்பட்;ட ஏகத்துவ மறுமலர்ச்சி, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது காலம் வரை மூடி மறைக்கப் பட்ட, கருத்துக் கருவூலங்கள், தௌ;ளிய தமிழில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. கேட்டவர் பலரும்,அதிசயித்தனர். ஆகா! இப்படியா மார்க்கம் சொல்கிறது! இதையெல்லாம் எங்களுக்கு மார்க்க அறிஞர்கள் சொல்லித் தரவில்லையே! என்று ஆதங்கப் பட்டனர். மார்க்க ஆதாரங்கள் என்றால், அது அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் தான் என்று பாமர மக்கள் கூட அறிந்துக் கொண்டனர். ஏகத்துவம் என்னும் இஸ்லாத்தின் ஆணி வேர், கற்பாறைகளைப் போல் இறுகிப் போன இதயங்களிலும் ஊடுருவியது. இதற்கு மேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்துக் கொண்டவர்களின், ஆர்த்தெழுந்த ஆவேசம் அடங்கிப் போனது. அதற்காக பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், அறிஞர்கள் ஆற்றிய பணி மகத்தானது. அறியாமை இருளிலிலிருந்து வெளியேறி, அற்புத ஏகத்துவத்தை ஆரத்தழுவிய நெஞ்சங்கள், அந்த அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்துக் கொண்டிருக்கின்றன. அத்தகையப் பேரறிஞர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை, குர்ஆன், ஹதீஸின் ஒளியில் சரிகண்டு, இந்த எளியேனும் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.இந் நூலைப் படிக்கும் அன்பர்கள், இதில் காணும் குறை நிறைகளை எனக்குத் தெரிவித்தால், நன்றி உடையவனாவேன். நன்றியுடன்,
Aஅப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்
இணை வைத்தலைத் தவிர

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான், என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)இன்னும் இவை போன்ற எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரே யொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

நல்லறங்கள் அழிந்து போகும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக் குர்ஆன் 6:88)நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)சொர்க்கம் செல்லவே முடியாது'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)இறைமறை குர்ஆனும், இறைத் தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தௌ;ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய- சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற- நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய- அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்?
இவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய 'ஷிர்க்' என்றால் என்ன? என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்- அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்- போதை தருவது மது என்பதிலும்- மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும், கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விpடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.
பெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவம் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும்,அவரிடம் ஷிர்;க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.

கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம்'

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது' என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாராhர் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்;க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்னும் அரபி வார்த்தை, திரு மறை குர்ஆனிலும், திரு நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஹதீஸ்களிலும், பல்வேறு இடங்களில் பயன் படுத்தப் பட்டிருப்பதும், அது மிகப் பெரும் பாவம் என்பதும், அதற்கு மன்னிப்பே இல்லை என்பதும், கொடிய நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்பதும், எல்லோருக்கும் தெரியும். இந்த ஷிர்க் என்னும் அரபி வார்த்தைக்கு தமிழில் இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பொருள் என்பதும், கூட அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் இவை நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை அல்ல என்பதால், இது குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் தானே அந்த ஷிர்க் என்னும் மாபெரும் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். ஷிர்க் அதாவது இணை வைத்தல் என்றால், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், ஏன் நபியாகவே இருந்தாலும், - அல்லாஹ்வுக்கு இணையாக அதாவது சமமாகக் கருதுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள்- சிறப்புத் தன்மைகள் மற்றவர்களுக்கும் உண்டு என எண்ணுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி ஆற்றல், மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும்-அல்லாஹ்வினால் மட்டுமே ஆகக் கூடிய காரியங்கள், மற்றவர்களாலும் ஆகும் என நம்புவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்-அல்லாஹ்வை அழைத்துப் பிராhர்த்திப்பது போல் மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சைகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்- அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும்-ஆகிய இவை யாவும் ஷிர்க் என்று அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.இவற்றுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு முன், இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்றால் என்ன? என்பது குறித்து சில உதாரணங்கள் மூலம் புரிந்துக் கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
ஒரு நிறுவனத்தின் முதலாளி தம்மிடம் பணி புரியும் ஊழியர்களுக்கு உணவும், உடையும், உறையுளும் இன்னும் சகல வசதிகளும் செய்து கொடுத்து சம்பளமும் தருகிறார். அவரிடம் பணிபுரியும் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளி ஒருவரை முதலாளி என்று சொன்னால், அதை அந்த முதலாளி அறிந்தால், ஏற்றுக் கொள்வாரா? எவ்வளவு கோபப்படுவார்? அந்தத் தொழிலாளி எவ்வளவு தான் நல்லவராக, வல்லவராக இருப்பினும் அந்த முதலாளி சகித்துக் கொள்ள மாட்டார் அல்லவா?அப்படியிருக்க, அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவர், மற்றவரை தனக்குச் சமமாகக் கருதினால் எப்படி ஏற்றுக் கொள்வான்? இன்னும் தெளிவாகப் புரியும்படி மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.ஒரு பெண் தனது கணவர் அல்லாத மற்றொருவரை 'தனது கணவர் மாதிpரி' என்று கூறினாலோ அல்லது நினத்தாலோ, அதை அந்தக் கணவர் அறிந்தால், அந்தக் கணவருக்கு எவ்வளவு கோபம் வரும்? அது போன்று தான், தான் அல்லாத மற்றவரைத் தனக்கு இணையாக ஒருவர் கருதினால், அதைவிடவும் அதிகமாக அல்லாஹ் கோபப்படுவான் அல்லவா? இணை வைத்தல் என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது இப்போது புரிகிறதா?
அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கடவுளெனக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவரை வணங்குவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் இருப்பதாக நம்புவதும், மட்டுமே ஷிர்க் என்று நம்மில் பலரும் நினைக்கின்றனர்.இவை யாவும் ஷிர்க் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே ஷிர்க் என்றிருந்தால், மக்காவில் வாழ்ந்த காஃபிர்களை, முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். மக்கத்துக் காஃபிர்களை 'இணை கற்பித்தோர்' என்று அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன? என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு.மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல என்பதும், அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல. இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது.வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்றும் கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக. (திருக் குர்ஆன் 10:31)வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன், செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ் தான் என்று அந்த மக்கத்துக் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்டால், 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 31:35)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.';சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்சமாட்டீர்களா?' என்று கேட்பீராக!'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று கேட்பீராக! (திருக் குர்ஆன் 23:84-89)இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.இவை யாவும் அல்லாஹ்வின் திரு மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ!அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே- தாயின் வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது 40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத் தொடங்கினார்கள்.ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?இருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர். அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினஅல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை! இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும்.இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே! ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல் தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது சரி தான்.ஆனால் அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும் போது- தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது கண்களை இறுக மூடிக் கொண்டு, கரடு முரடான பாதையில் தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற (தெளிவான) பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.நமது கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சிந்தனை செயல்பாடுகள்,சரியானவை தானா? என்பதை இறைமறை குர்ஆனின் அடிப்படையிலும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறு பரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெறலாம்.இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திரு மறை. (மற்றொன்று) எனது வழி முறை.(அறிப்பவர்:இப்னு அப்பாஸ்,நூல்:புகாரி) அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப் பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவும் சொல்கிறான்.அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (திருக் குர்ஆன் 47:24)இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பின பெறுவார்உண்டா? (திருக் குர்ஆன் 54:17)நமது கொள்கை கோட்பாடுகளை, வணக்க லழிபாடுகளை, அருள் மறை குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு ஷிர்;க் என்னும் இணை வைத்தல் எள்ளளவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் நாம் புரிந்த இறை வணக்கங்;கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும்.நம்மையும் அறியாமல் நமது இறை வணக்கத்தில், மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களில், ஷிர்க் என்னும் கொடிய பாவம் கடுகளவும் கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எல்லாமே பாழாகிப் போகும். மீள முடியாத நரக நெருப்பில் ஊழியூழி காலம் உழன்றுக் கொண்டிருக்க வேண்டியது தான். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)
நல்லவையும் தீயவையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டு விட்டன. இரண்டையும் பிரித்தறிய தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறது. மார்க்க விஷயத்தில் ஒரு செயல் நல்லதா- கெட்டதா என்பதை நம் விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது.இறை வணக்கத்திலிருந்து இல்லற வாழ்க்கை வரை ஆகுமானவற்றையும் ஆகாதவற்றையும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவாக விளக்கி விட்டார்கள். அதற்கு மேலும் மார்க்க விஷயத்தில் நமது சுய அபிப்பிராயத்திற்கு முடிவு செய்வது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கி விட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வார்கள், எனவே தீயவற்றைக் குறித்து நாம் அலசி ஆராயத் தேவையில்லை.ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப் படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே வழக்கத்தில் உள்ளவற்றில் தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. நல்ல பொருட்கள் என்று நம்பப் பட்டவைகளில் தான் போலிகள் உருவாகி விற்பனைக்கு வரும்.நல்லவர்களை வழி கெடுப்பதில் தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கரைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும்.இறைவனும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் 'நன்மை' என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை தான் நன்மை. அவை மட்டுமே நன்மைகளாகும்.அவற்றைத் தவிர, வேறு எவரேனும் தம் சுய விருப்பத்திற்கு 'நல்லவை' என்று பட்டியலிட்டவை எவையும் நல்லவையாகாது. பட்டியலிட்டவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரியே.நமது கொள்கைகளில், எண்ணங்களில், செயல்களில், சிந்தனைகளில், நமக்கே தெரியாமல் இணை வைத்தல் என்னும் ஷிர்க் எந்த வகையிலெல்லாம் ஊடுருவி இருக்கலாம் என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

">Link

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்