Sep 19, 2006

மாபெரும் பாவம் 2

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 2

அண்ணல் நபி (ஸல்) அவர்களை
அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்

நம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (திருக் குர்ஆன் 33:6)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார் உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம் அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதுவதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருப்பதாக நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் வந்து, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், முதலில் அல்லாஹ் நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித் தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத் தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.நம்மில் எவருமே, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ, கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல் அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப் பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.அன்த ஷம்சுன் அன்த பத்ருன் அன்த நூருன் ஃபவ்க நூரி நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி, ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான் (திருக் குர்ஆன் 24:35) என்னும் திரு மறை வசனத்தை நினைவிற் கொள்ள வேண்டாமா?வானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி (ஸல்) அவர்களை 'ஒளிக்குமேல் ஒளி' எனக் கூறுவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்திபாவங்களை மன்னிப்பவர் நீங்களே! என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள்? பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும் இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்' என்று சொல்வது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல், ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும், மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!மவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான கருத்துக்கள் ஷிர்க்கானவை. உதாரணத்திற்கு மட்டுமே ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி)இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்கள் விஷயத்தில் வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல் கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.

இறை நேசர்களை இறைவனுக்குச்
சமமாகக் கருதுவது ஷிர்க்

அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அடியொற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட தர்காக்களில், அடக்கப் பட்டுள்ளவர்கள் மட்டும் தான், 'இறை நேசர்கள்' என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த பண்பாளர்கள் எத்தனயோ? பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா? இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே! அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும், காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இறை நேசர்களைஅழைத்துப்
பிரார்த்திப்பது ஷிர்க்

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்(திருக் குர்ஆன் 7:194)அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது. (திருக் குர்ஆன் 7:197)அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக் குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
இந்த வசனங்கள் அனைத்தும், மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த வசனங்கள் இதோ!அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை? அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்? என்பது போல் விதண்டாவாதம் புரிவோரும்,இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார்கள்
என நம்புவது ஷிர்க்

அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (திருக் குர்ஆன் 6:17)அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! (திருக் குர்ஆன் 17:56)மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில் இருந்துக் கொண்டு 'குத்பிய்யத்' என்னும் கொடுமையை அரங்கேற்றுவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் குழந்தையைத்
தருவார்கள் என நம்புவது ஷிர்க்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். (திருக் குர்ஆன் 42:49)அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.(திருக் குர்ஆன் 42;:50)ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண் குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத் தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும் தம்பதிகள் நம்புகிறார்களே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வது ஷிர்க்

நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (திருக் குர்ஆன் 2:270)இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 3:35)நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும், மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
திருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும், இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு நேர்ச்சை செய்யும் பாவிகளே!அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம் கிடப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்
அறுத்துப் பலியிடுவது ஷிர்க்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை, உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன. (திருக் குர்ஆன் 5:3)அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ் தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது. 'நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கிறோம்' என்று வாதிடலாம்.இதோ! திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (திருக் குர்ஆன் 108:2)தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
நாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே! சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க் என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும் தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டால்?
அது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவருக்கு
ஸஜ்தாச் செய்வது ஷிர்க்

தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர்.அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக் குர்ஆன் 53:62)இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28)ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனது?அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
முஆத் (ரலி) அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றதுஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)


இறை நேசர்கள் இறந்த பின்பும்
உயிருடன் உள்ளனர் என நம்புவது ஷிர்க்

உலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார் (திருக் குர்ஆன் 43:61)அந்த ஈஸா (அலை) அவர்களும் கியாமத் நாள் சமீபம் பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரணம் அடைவார் என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து அறிகிறோம்.அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மரணித்து விட்டார்கள். அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அடக்கம் செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்.(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (திருக் குர்ஆன் 39:30,31)நபி (ஸல்) அவர்களே இறந்து விட்டார்கள் எனும் போது, இறை நேசர்கள் எனக் கருதப்பட்டோர் மரணிக்காமல் இன்றளவும் மண்ணறையில் உயிருடன் உள்ளனர் என்று நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (திருக் குர்ஆன் 3:2)மரணிக்காது உயிருடன் இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றி புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (திருக் குர்ஆன் 25:58)அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (திருக் குர்ஆன் 40:65)மரணமே இல்லாது என்றென்றும் உயிருடன் இருப்பவன், தான் மட்டுமே என்று அல்லாஹ் கூறும்போது 'மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது' என்று ராகம் போட்டுப் பாடுவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் உயிருடன் இருப்பதாக வாதிடுவோர் அதற்குச் சான்றாக கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூறுவர்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீhகள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் இந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 3:169)இறை வழியில் தங்கள் இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள் என்னும் உயிர்த்தியாகிகள்- அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர் எனவும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும்- நம்பிக்கை (ஈமான்) கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் இன்னும் விரிவாக அல்லாஹ் எடுத்தியம்புகிறான். ஆக, இறந்த பின்பும் உயிருடன் இருப்பதாக இறைவன் கூறுவது, இறை வழியில் போரிட்டுத் தம் இன்னுயிரை நீத்த 'ஷஹீத்' என்னும் உயிர்;த்தியாகிகளைப் பற்றித் தானே தவிர, தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டு, இறை நேசர்கள் என மக்கள் கருதிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்ல என்பதை, முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு ஊர்களிலும், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் ஆடல் பாடல் கச்சேரிகளால் உற்சவம் கொண்டாடி பக்தர்களை(?) உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன? இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்ன?அப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களே!ஏனெனில் அவர்கள் மரணித்து விட்டதால் தான் மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை, அவர்களின் வாரிசு தாரர்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இறை நேசர்களுக்கு இறந்த பின்பும்
ஆற்றல் இருப்பதாக நம்புவது ஷிர்க்

ஒரு மனிதர் உயிர் வாழும் போது, பல் வேறு ஆற்றல்களைப் பெற்றிருக்கலாம். அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் போன்ற பல் வேறு ஆற்றல்கனைப் பெற்ற அறிஞர்களாயினும், அவர்கள் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமே செயல் படுத்த முடியும்.உயிர் வாழ்ந்த போது இருந்த ஆற்றல்களே, இறந்த பின்பு இருக்க முடியாது என்கிற போது, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது, அறிவுக்கும், அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கும் எதிரானதல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந்து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும்? திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதா?அவ்லியாக்களுக் கெல்லாம் தலைவர் என்று கூறப்படுபவராகவும், இறை நேசர்களிலேயே மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் பலரால் கருதப் படுபவராகவும் உள்ளவரின் அடக்கத்தலம் அமையப் பெற்றுள்ள அந்த பக்தாத் நகரத்திலேயே அக்கிரமக்காரர்கள் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போது,
அண்டமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டி
கலக்கி விளையாட வல்லீர்
ஏழு உலகங்களையும் பம்பரம் போல் சுற்ற வைக்க ஆற்றல் பெற்றவரே! கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே! என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே! இது இறந்தவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த வில்லையா?

இறை நேசர்களை அழைத்தால் ஓடி வந்து
உதவுவார்கள் என நம்புவது ஷிர்க்

தங்களது முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களுக்கு சிலை வடித்து, அவற்றை வணங்கி வந்தவர்களும், அல்லாஹ்வையே இறைவனாகக் கருதினாலும், இந்த முன்னோர்கள் தங்களை அல்லாஹ்வின் பால் சமீபமாக்கி வைப்பார்கள் என்று நம்பி முன்னோர்களையும் வழிபாடு செய்தவர்களுமாகிய, மக்கத்துக் காஃபிர்கள் கூட சாதாரண நேரங்களில் தான், தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி முன்னோர்களின் சிலைகளுக்கு முன் மண்டியிட்டனர். ஆனால், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தனர். இதை நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வின் திரு மறையே அறிவிக்கிறது.
கடலில் பயணம் செய்யும் போது காற்றும் அலையும் அவர்களைச் சூழ்ந்து தாம் சுற்றி வளைக்கப் பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்தால், வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் நன்றியுடையோராக ஆவோம்.' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (திருக் குர்ஆன்10:22)ஆபத்திலிருந்து காப்பாற்றப் பட்ட பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள் என்று அடுத்த வசனம் கூறுகிறது.அவர்களை விடவும் மோசமாக, சாதாரண நேரங்களில் அல்லாஹ்வைத் தொழுது பிரார்த்திப்பவர்கள், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனரே! இது மக்கத்துக் காஃபிர்களின் செயலை விட மோசமான செயல் அல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

ஆபத்தான நேரங்களில் யா முஹ்யித்தீன்! என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம்?எத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவா? அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என நம்புவதும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று காத்திருப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ்வே செவியுறுபவன். அறிந்தவன். (திருக் குர்ஆன் 5:76)தானே செவியுறுபவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மனிதர்களாகிய நாமும் ஒருவர் அழைப்பதையும் பேசுவதையும் செவியுறுகின்றோமே என்று சிலர் கேட்கலாம்.செவியுறும் தன்மையில் மனிதர்களாகிய நமக்கும் அல்லாஹ்வுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பேர் நம்மை அழைத்தால், ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்து விட்டுத் தான் மற்றவரின் அழைப்புக்கு நம்மால் பதிலளிக்க முடியும். பலர் ஒரே சமயத்தில் அழைத்தாலோ, பேசினாலோ நம்மால் புரிந்துக் கொள்ளவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அப்படிப்பட்டதல்ல. ஒரே நேரத்தில் கோடானு கோடி பேர் அழைத்தாலும், அத்தனை பேரின் அழைப்பையும் ஏக காலத்தில் செவியுறவும், பதிலளிக்கவும் அல்லாஹ்வால் முடியும்;. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை.ஒரே நேரத்தில் பலரும் 'யா முஹ்யித்தீன்!' என்று அழைக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செவியுறுவார்கள் என்றால், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான செவியுறுதல் என்னும் தனித்தன்மை, அப்துல் காதிர் ஜீரானி (ரஹ்) அவர்களுக்கும் இருப்பதாக அல்லவா அர்த்தமாகிறது?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் மட்டுமே! இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பது?அவர்களின் உள்ளங்களிலும், செவியிலும், அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வையில் திரை உள்ளது. அவர்களுக்கு கடும் வேதனையுண்டு.(திருக் குர்ஆன் 2:7)

மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்குப் புரியும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர்களுடைய தாய் மொழியாகிய அரபியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியாது. அது போல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தாய் மொழியாகிய அரபியைத் தவிர, வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியும் என்பதாக அவர்களது வரலாற்றில் நம்மால் காண முடியவில்லை. அவர்கள் அறியாத மொழியில் அழைத்தாலும் அவர்களுக்குப் புரியும் என்பது அவர்கள் உயிர் வாழ்ந்த போதே சாத்தியமில்லை. அப்படியிருக்க அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும் என்று சொல்வது அறிவீனம்.
பிரசவ வேதனையில் துடிக்கும் போது, 'யா முஹ்யித்தீன்' என ஓலமிடும் தாய்க் குலமே! அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே! (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராக!அறியாமையால் சிலர் தவறான கொள்கையில் இருக்கக் கூடும். அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து விளங்குவதற்காக, தர்க்க ரீதியான சில காரணங்களை இது வரைத் தெளிவு படுத்தினோம்.ஆனால் அல்லாஹ்வின் வேத வசனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோருக்கு கீழ்க் காணும் சில வசனங்கள் மட்டுமே போதும். தெளிவான வழி காட்டுதல் கிடைத்து விடும்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீ;ங்கள் இணை கற்பித்ததை மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக் குர்ஆன் 35:14)
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன் 13:14)இவ்வளவு தெளிவாக அல்லாஹ் அறிவித்து விட்ட பின்னரும், கப்ருகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்கள், நமது அழைப்பை செவியுறுவார்கள், அழைப்புக்கு பதிலளிப்பார்கள், ஓடி வந்து உதவுவார்கள், நோய்களை நீக்குவார்கள், துன்பங்களைப் போக்குவார்கள், என்று நம்புவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கும் மறைவான
ஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்

மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே உள்ளன.அவனைத் தவிற யாரும் அறிய மாட்டார். (திருக் குர்ஆன் 6:59)வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 27:65)மறைவானவற்றை தன்னைத் தவிர யாரும் அறிய முடியாது, என்று கூறும் அல்லாஹ், தனது திருத் தூதர் அவர்கள் கூட அறியமாட்டார்கள் என்பதை, அவர்களையே கூறச் சொல்லி தனது தனிச் சிறப்பை உறுதிப் படுத்துகிறான். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக! (திருக் குர்ஆன் 6:50)
'மறைவான ஞானம்' என்பது சிலருக்குப் புரியாத வார்த்தையாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பதும், எங்கோ தொலை தூரத்தில் நடப்பதை இங்கிருந்துக் கொண்டே கண்களால் காணாமல், யாரும் அறிவிக்காமல், கூறவதும் தான் 'மறைவான ஞானம்'. இது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.கண்களால் காணாததையும், எதிர் காலத்தில் நடக்க இருப்பவை குறித்தும், ஏராளமான செய்திகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது உண்மை தான். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை, அப்போது வாழ்ந்த மக்களும், அதற்குப் பின் வரக் கூடிய சமுதாயமும் உறுதியாக நம்புவதற்காக, சில சமயங்களில் சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.இனி வரும் தலைமுறையினரும், அவர்களை உண்மையான இறைத் தூதர் தான் என்று நம்பும்படி, அவர்களின் எத்தனையோ முன்னறிவிப்புகள் இன்றளவும் மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இறைவனே அறிவித்துக் கொடுத்தவை.இறைவனே அறிவித்துக் கொடுத்த ஒரு சில, மிகவும் சொற்பமான விஷயங்களைத் தவிர, மற்றபடி மறைவான ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதற்கு, அவர்கள் வாழ்வில் எதிரிகளால் அவர்கள் அடைந்த இன்னல்களும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும், சில போர்க் களங்களில் சந்தித்த தோல்விகளும் சான்று பகர்கின்றன. மறைவான ஞானம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
எதிர் காலம் குறித்து குறிகாரன் சொல்வதை நம்புவதும், ராசி பலன் பார்த்து காரியங்கள் செய்வதும், மாந்திரீகத்தில் மனதைப் பரிகொடுப்பதும், பால் கிதாபு பார்த்து பரிகாரம் காண்பதும், மறைவான ஞானம் இந்த குடுகுடுப்பைக் காரனுக்கும், பால் கிதாபு பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிய பித்தலாட்டக் காரனுக்கும் இருப்பதாக நம்புவதாகாதா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

தாயத்து அணிவது ஷிர்க்

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதும், அல்லாஹ்வுக்குச் சமமாக மற்றவர்களைக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், தான் ஷிர்க் என்று நினைக்கிறோம்.சாதாரணமாவை என்று நாம் கருதும், சில சாதாரணமான சின்னஞ்சிறு செயல்கள் கூட ஷிர்க் என்னும் மன்னிக்க முடியாத மாபெரும் பாவத்தை ஏற்படுத்தி விடும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டார்.(ஆதாரம்:அஹ்மத்)'தாயத்து அணிந்துக் கொள்வது தவறில்லை' என்ற கொள்கையுடைய எந்த ஒரு முஸ்லிமும், இரண்டு இறைவன்கள் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் இந்த தாயத்துக்கும் உண்டு என்று நம்புவதோ இல்லை. அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் எவர் மனதிலும் இருப்பதில்லை.ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாயத்தை அணிந்துக் கொண்டவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.நோய் நொடிகள் ஏற்பட்டால், அல்லாஹ் சுகமளிப்பான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் சுகமளிக்கும் என்று நம்புவதும், துன்ப துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் காப்பாற்றும் என்று நம்புவதும்
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அப்படியானால் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்கிறோமே, மருத்துவர் நோயை நீக்குவார் என்று நம்புகிறோமே இது ஷிர்க் ஆகாதா? என்று சிலர் கேட்கக் கூடும்.நோய்க்கு மருத்துவம் செய்யாமல், கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்று வேறு மதங்களில் ஒரு சாராரின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை.நோயைத் தீர்ப்பவன் இறைவனே என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.அதே சமயம் வைத்தியமும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் அல்லாஹ் மருந்தில்லாமல் வைக்க வில்லை.(அறிவப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)
நமது கொள்கை கோட்பாடுகளில், வணக்க வழிபாடுகளில், சிந்தனை செயல்பாடுகளில், எள்ளளவும் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இல்லாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது வரை நாம் கொண்டிருந்த கொள்கைகளில், நமது செயல் முறைகளில், ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றை விட்டொழிக்க முன் வர வேண்டும்.காலங்காலமாக செய்துக் கொண்டிருந்தோம், நமது முன்னோர்கள் இப்படித் தான் செய்தார்கள், உலகில் பெரும் பாலானவர்கள் இப்படித் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர், என்பன போன்ற எந்த வாதமும் நாளை மறுமையில் பயனளிக்காது.காலங்காலமாக என்று நாம் கூறுவது, சில நூற்றாண்டுகளைத் தான். ஆனால் இணை வைத்தல் என்னும் கொள்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் ஊறித் திளைத்த ஸஹாபாக்கள், ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொண்ட போது, எல்லா விதமான ஷிர்க்கையும் வேரோடும், வேரடி மண்ணோடும், களைந் தெறிய வில்லையா?அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களாகிய ஹதீஸ்களும், நம் தாய் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு, வழி காட்டும் ஒளி விளக்குகளாக நம் முன்னே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.அறியாமை என்னும் இருளில் இருந்தோம், என்று அல்லாஹ்விடம் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆராய்ந்து பார்க்கும் அறிவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். நமக்கு வழங்கப்பட்ட அறிவு குறித்தும் நாளை மறுமையில் நாம் விசாரிக்கப் படுவோம்.இனியேனும் சிந்தித்து, நமது எண்ணங்களையும், செயல்களையும் சீர் திருத்திக் கொள்ள வில்லையென்றால், இறைவனின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.ஏனெனில் ஷிர்க் என்னும் பாவம் அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத மாபெரும் பாவமாகும்.இனியும் சரியான வழியை அறிந்துக் கொள்ளாமலும், அறிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளாமலும், இருந்தால் அதன் விளைவுகளை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ்வின் திரு மறை இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.
அவர்கள் வேதனையைப் பார்த்த போது 'அல்லாஹ்வை மட்டுமே நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறந்து விட்டோம்' என்றனர்.நமது வேதனையைப் பார்த்த போது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நஷ்டமடைந்தார்கள். (திருக் குர்ஆன் 40:84,85)
-----------------------------

">Link


1 comments:

வஹ்ஹாபி said...

இணையாக்குதல் குறித்த விளக்கமான பதிவுக்குப் பாராட்டுகள்.

இப்பகுதி தமிழ்மணத்தில் பட்டியலிடப் படவில்லை என்று எண்ணுகிறேன்.

விருப்ப மொழியில் குர்ஆன்