Sep 15, 2006

திருக்குர்ஆன்-சில தேன்துளிகள்

திருக் குர்ஆன்-சில தேன் துளிகள்

A.முஹம்மது இப்ராஹீம் பிகாம்

மதிப்புரை
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும், ஸலாமும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் உற்றார் உறவினர், உற்ற தோழர்கள் மற்றும் நன்னெறி நடந்த நல்லோர் அனைவர் மீதும் உலகம் உள்ளளவும் உண்டாகட்டும். பொதுவாக அறிஞர்கள் எழுதும் நூலுக்கு அவர்களை விடப் பேரறிஞர்கள் தான் மதிப்புரை எழுதுவது மரபு. அதுவே முறையும் கூட. விதி முறை எதுவானாலும் அதற்குச் சில விதி விலக்கு இருப்பதுபோல், இங்கே ஒரு பேரறிஞர் எழுதிய நூலுக்கு, ஒரு சாதாரணமானவன் மதிப்புரை எழுதப் பணிக்கப் பட்டுள்ளேன். இந்நூலாசிரியர் அவர்கள், தாம் தொகுத்து வைத்திருந்த, கருத்துக் கருவூலங்களை நூலாக வெளியிடும் மேலான பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்த போது அவர்களின் இதய சிம்மாசனத்தில் எமக்கொரு இடம் அளித்து இருக்க வைத்ததை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். எங்கள் ஊரின் 'நடமாடும் பல்கலைக் கழகம்' என்று பலராலும் வர்ணிக்கப்படும் பெருந்தகை எழுதிய 'திருக் குர்ஆன் சில தேன் துளிகள்' என்னும் இந் நந்நூல் அளவிற் சிறிதானாலும் திருக்குர்ஆன் பற்றிய கருத்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்வது மிகையாகாது. தேன் துளிகளைச் சுவைத்துப் பாருங்கள். தெவிட்டாத பேரின்பம் பெருவீர்கள். இந் நூலாசிரியர், இது போன்று இன்னும் பல நூல்கள் எழுதவும், இவர்களின் சீரிய முயற்சிகளை எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிக்கவும் பிரார்த்திக்கிறேன். அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்......... (திருமறை குர்ஆனின் முதல் வசனமும் இதுவே) ---------------------------------------- இன்றைக்கு சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதம் ஹீப்ரு மொழியில் அருளப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸபூர் வேதம் யூனானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இன்ஜீல் வேதம் சுரியானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமறை குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

குர்ஆன் என்னும் அரபிச் சொல்லுக்கு, ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது, எனப் பொருள்களுண்டு. வானவர் தலைவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் 'ஓதப்பட்டது'. உலகின் அதிகமான மக்களால் 'ஓதக் கூடியது'. மனித குல மேன்மைக்காக 'ஓத வேண்டியது'.
-----------------------------

திருக் குர்ஆன் மக்காவில் 13 ஆண்டுகளும், மதீனாவில் 10 ஆண்டுகளும், ஆக 23 ஆண்டுகளில், கொஞ்;சம் கொஞ்சமாக, காலத்திற்கும், சூழ் நிலைக்கும் ஏற்றவாறு 486 தடவைகளில் அருளப்பட்டது.
-------------------------------
திருக் குர்ஆன் வசனங்கள் ஒவ்வொரு முறை இறங்கும் போதும், அவற்றை எழுதிப் பாதுகாக்க ஏற்பாடு செய்;யப் பட்ட எழுத்தாளர்களில், அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி), ஆகிய 10 பேர் குறிப்பிடத் தக்கவர்கள் திருக் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டபோது, உடனுக்குடன் பேரீச்ச மரப் பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப் பட்;ட தோல்களிலும், கால் நடைகளின் அகலமான எலும்புகளிலும், எழுதி வைக்கப் பட்டன.
----------------------------
எழுதி வைக்கப் பட்டிருந்த திருக் குர்ஆன் வசனங்கள், அனைத்தையும் ஒன்று திரட்டி, முழுமையான மூலப் பிரதியை உருவாக்கிய பெருமை, உஸ்மான் (ரலி) அவர்களைச் சாரும். உஸ்மான் (ரலி) உருவாக்;கிய முழுமையான மூலப் பிரதிகளில் ஒன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகர அருங்காட்சி யகத்திலும், மற்றொன்று ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகர அருங்காட்சி யகத்திலும் இன்றளவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
உஸ்மான் (ரலி) அவர்கள் உருவாக்கிய இந்த மூலப் பிரதிகளின் அடிப்படையில் தான், இன்றளவும் உலகம் முழுவதும் திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடப் படுகின்றன.
--------------------------
உலகில் மிக அதிகமான அளவில், பல இலட்;சக் கணக்கானோர், மூல மொழியாகிய அரபி மொழி யிலேயே முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருக் கின்றனர். வேதங்களில் திருக் குர்ஆனுக்கு மட்டுமே இத் தனிச் சிறப்பு உண்டு.
-----------------------------
அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், இன்;று வரை ஒரு எழுத்தோ, புள்ளியோ, மாற்றப் படாமல், பாதுகாக்கப்பட்டு வரும் வேதம் திருக் குர்ஆன் மட்டுமே. ஏனெனில் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்;தை (உம் மீது) இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (திருக் குர்ஆன் 15;:9) ----------------------------
திரு மறை குர்ஆனில், இவ் வேதத்தின் பெயர் 'குர்ஆன்' என்று 15 இடங்களிலும், 'அல் குர்ஆன்' என்;று 50 இடங்களிலும், குறிப்பிடப் பட்டுள்ளது. இது போக இன்னும் பல் வேறு சிறப்புப் பெயர்களில் இவ் வேதம் அழைக்கப் படுகிறது. அவற்றின் விபரமும், பொருளும், இடம் பெற்றுள்ள வசனங்களும்-
1. அல் கிதாப் ¬-திரு வேதம்(2:)
2. அல் பயான் -தெளிவான விளக்கம்(3:138)
3. அல் புர்ஹான் -உறுதியான அத்தாட்சி(4:174)
4. அத் திக்ரு -ஞானம் நிறைந்தது, நினைவூட்டுவது(3:58)5. அல் ஃபுர்கான் -நன்மை தீமைகளை பிரித்தறிவிப்பது (2:185)6. அந் நூர் -பேரொளி (4:174)
7. அல் ஹக்கு -மெய்யானது(2:91)
8. அல் கரீம் -கண்ணியமானது(56:77)
9. அல் முபீன் -தெளிவானது(5:17)
10. அல் ஹகீம் -ஞானம் மிக்கது(36:2)
11. அல்அஜீஸ்-சங்கையானது, வல்லமையுடையது(41:41)
12. அல் ஹுதா -நேர்வழிகாட்டி(3:138)
13. அர் ரஹ்மத் -அருள்(6:157)
14. அஷ் ஷிஃபா -அருமருந்து(10:57)
15. அல் மவ்இளத் -நற்போதனை(3:138)
16. அல் ஹிக்மத் -ஞானம் நிறைந்தது(2:151)
17. அல் முஹைமின் -பாதுகாப்பது(5:48)
18. அல் கய்யிம் -உறுதியானது,நிலை பெற்றது(2:151)
19. அந் நிஃமத் -அருட் கொடை(93:11)
20. அர் ரூஹ் -ஆன்மா(42:52)
21. அத் தன்ஸீல் -இறக்கியருளப் பெற்றது(20:4)
22. அல் ஹுக்மு -சட்ட திட்டங்கள்(13:37)
23. அல் முபாரக் -நல்லாசிகள்(6:92)
24. அல்முஸத்திக்-முன்வேதங்களை மெய்ப்பிப்பது(6:92)
25. அல் பஷீர் -நன் மாராயங் கூறுவது(41:4)
26. அந் நதீர் -அச்சமூட்டி எச்சரிப்பது(41:4)
27. அல் முதஹ்ஹர் -பரிசுத்தமானது(80:14)
28. அல் முகர்ரமா -சங்கையானது(80:13)
29. அல் மஜீத் -கண்ணியம் மிக்கது(50:1)
30. அல் அரபிய்யு -அரபி மொழியிலுள்ளது(12:2)
31. அல் மர்ஃபூஆ -உயர்வானது(80:14)
32. அல் அஜப் -ஆச்சரியமானது(72:1)
33. அல் பஸாயிர் -அறிவொளி(7:203)
34. அத் திக்ரா -நல்லுபதேசம்(7:2)
35. ஹப்லுல்லாஹ் -அல்லாஹ்வின் கயிறு(3:103)
-------------------------------------
திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் 'லைலத்துல் கத்ர்' என்னும் புனித இரவில் தான் முதன் முதல் இறங்கத் தொடங்கியது. நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.(97:1)
-----------------------------------
திருக் குர்ஆனில் முதன் முதல் அருளப்பட்;ட வசனங்கள் 96 ஆம் அத்தியாயத்தின் முதல் 5 வசனங்களாகும்.முதல் வசனம் இப்படித் தொடங்குகிறது.'(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக' (96:1)
----------------------------
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது, அரபாத் பெரு வெளியில், துல் ஹஜ் 9 ஆம் நாள் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இறங்கியது. இத்துடன் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டது. அந்த இறுதி வசனம் இதோ!
....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்;கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். (5:3)
--------------------------------
திருக் குர்ஆனில் 103,108,110 ஆகிய மூன்று அத்தியாயங்கள் மூன்று வசனங்களை மட்டுமே கொண்டவை. அல் பகரா என்னும் இரண்டாவது அத்தியாயம் தான் மிகப் பெரியது. இவ் வத்தியாயத்தில் 286 வசனங்கள் உள்ளன.
--------------------------------
இரண்டாவது அத்தியாயத்தின் 282 ஆவது வசனம் தான் குர்ஆனிலேயே மிக நீண்ட வசனம் ஆகும். இந்த ஒரு வசனம் மட்டுமே ஒரு பக்கம் வரும். கடன் கொடுக்கல் வாங்கலின் போது எழுதி வைத்;துக் கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் அறிவுறுத்தப் படுகிறது.
------------------------------
அல் ஃபத்ஹு(வெற்றி) என்னும் 48 ஆவது அத்தியாயத்தின் இறுதி வசனம், 'முஹம்மத் ரசூலுல்லாஹ்' எனத் தொடங்குகிறது. இந்த வசனத்தில் அரபி மொழியின் 28 எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. திருக் குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666. முழுக் குர்ஆனும் 114 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் மக்காவில் அருளப்ப பட்டவை 86 அத்தியாயங்கள், மதீனாவில் அருளப்பட்டவை 28 அத்தியாயங்கள்.
-----------------------------------
திருக் குர்ஆனை மாதம் ஒரு முறை ஓதி முடிக்;க வசதியாக 30 சம பாகங்களாகவும், வாரம் ஒரு முறை ஓதி முடிக்க வசதியாக 7 மன்ஸில்களாகவும் மார்க்க அறிஞர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
----------------------------------
மதீனாவின் திருக் குர்ஆன் பதிப்பகத்தில் அச்சிடப்படும் அனைத்து வகை திருக் குர்ஆன் பதிப்புகளிலும், ஒவ்வொரு பக்கத்தின் இறுதி வரியில் வசனம் சிதைவு படாமல் மிகச் சரியாக நிறைவு பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
-------------------------------
திருக் குர்ஆனின் மூலப் பிரதிகளிலோ, அரபி மொழியிலோ, ஜபர், ஜேர், பேஷ் போன்ற உயிர் மெய்;க் குறியீடுகள் இருக்க வில்லை. அப்துல் மலிக் பின் மர்வான் உடைய ஆட்சியில், ஹஜ்ஜாஜ் பின் யூசூப் என்ற அதிகாரியின் மேற் பார்வையில் அரபி மொழியில் உயிர் மெய்க் குறியீடுகள் உருவாக்கப் பட்டன. உலக மக்கள் அனைவரும் திருக் குர்ஆனை பிழையின்றி எளிதாக வாசிக்க இந்த எழுத்துச் சீர்;த் திருத்தம் உதவியாக அமைந்தது.
-------------------------------
அரபி மொழியின் மிகச் சிறந்த இலக்கிய நடையில் அமைந்துள்ள இத் திருக் குர்ஆனை, இறை வனிடமிருந்து பெற்று இவ்வுலகுக்கு அறிவித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்;கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை. அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின் பற்றுங்கள். நேர் வழி பெறுவீர்கள். (7:158)
-----------------------------
திருக் குர்ஆனில் அல்லாஹ் என்னும் சொல் 2584 தடவை இடம் பெற்றுள்ளது. நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பெயர் 52 இடங்களிலும், நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயர் 5 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஜகாத் குறித்து 19 அத்தியாயங்களில், 30 இடங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது. அவற்றில் 28 இடங்களில் தொழுகையுடன் இணைத்தே சொல்லப் படுகிறது.
-------------------------
திருக் குர்ஆனில் கீழ்க் காணும் எதிர் மறையான சொற்கள் சம அளவில் இடம் பெற்றுள்ளன.
துன்யா(இம்மை) 115 ஆகிரத்(மறுமை) 115
மவ்த்(இறப்பு) 145 ஹயாத்(வாழ்வு) 145
நஃப்வு(பயன்) 50 ஃபஸாத்(இடர்) 50
ஹர்கு(வெப்பம்) 4 பர்த்(குளிர்) 4
ஸாலிஹாத்(நல்லவை)167 ஸய்யிஆத்(தீயவை) 167
குஃப்ர்(இறை மறுப்பு) 25 ஈமான்(இறை நம்பிக்கை25
ஷைத்தான் 88 மலாயிகா 88

----------------------------------
இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்றாலும், முஸ்லிம்களுக்கிடையே தங்கள் வணக்க வழிபாடு களின் செயல் முறைகளில் சில பிரிவுகள் இருப்பதை மறுப்பதற் கில்லை. அப்படிப்பட்ட பிரிவினர் எவருமே குர்ஆனுடைய விஷயத்தில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்;லை என்பது மிக முக்கியம்.
--------------------------
உலகில் 22 நாடுகளின் தேசிய மொழி அரபி எனினும்;, ஒவ்வொரு நாட்டினரின் பேச்சு வழக்கும், உச்சரிப்பும் வித்தியாசப்படும். ஆனாலும், உலகெங்கும் வாழும் அரபியர், மற்றும் அரபியர் அல்லாதோர் அனைவரும் அரபியில் குர்ஆனை ஓதும் முறையும் உச்சரிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
------------------------------------------
மனித சமுதாயத்தை நேர் வழிப் படுத்த ஏராளமான இறைத் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்தனர் என்றாலும் அவர்களில் 25 இறைத் தூதர்களிக் பெயர்கள் மட்டுமே திருக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. 1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்2. நூஹ் அலைஹிஸ்ஸலாம் 3. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்4. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்5. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்;6. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் 7. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் 8. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் 9. அல்யஸஃ அiஹிஸ்ஸலாம் 10 யூசூஃப் அலைஹிஸ்ஸலாம் 11. யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்12. தாவூத் அலைஹிஸ்ஸலாம் 13. சுலைமான் அலைஹிஸ்ஸலாம்14. மூஸா அலைஹிஸ்ஸலாம்15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்16 யஹ்யா அலைஹிஸ்ஸலாம்17. ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்18 யஃகூப் அலைஹிஸ்ஸலாம் 19. லூத் அலைஹிஸ்ஸலாம்20. ஹுத் அலைஹிஸ்ஸலாம்21. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்22. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்23. துல் கிப்ல்அலைஹிஸ்ஸலாம்24. ஈஸாஅலைஹிஸ்ஸலாம்25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய இறைத்) தூதர் உண்டு(10:47) என்று அறிவிக்கும் அல்லாஹ்வின் திருமறை, அனைத்து மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டதாகவும் அறிவிக்கிறது.
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். திருக்குர்ஆன்(14:4) அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகில உலகத்துக்கும் அருட் கொடையாக அனுப்பப் பட்டவர்கள்(21:107) என்று கூறும் அல்லாஹ்வின் திருமறை, இது உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட வேதம் எனவும் அறிவிக்கிறது. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ் வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்(திருக் குர்ஆன் 25:1)
---------------------
கணிசமான மக்களால் பேசப்படும், உலகின் பெரும்பாலான மொழிகளில் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மதீனா நகரில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகம், இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழியாக்கத்தைப் பிரசுரித்து ஆண்டு தோறும் புனித ஹஜ்ஜுக்கு வருகின்ற அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
--------------------------
இத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகத்தில், திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடுவது தவிற, ஒலி ஒளி நாடாக்கள்,மற்றும் குறுந்தகடுகள் (சிடி) ஆகிவற்றில் பதிவு செய்யும் பணியும் நடைபெறுகிறது. இவ்வளாகத்தில் பணி புரியும் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் பாலான ஊழியர்கள் ஹாஃபிஸ்கள் அதாவது முழுக் குர்ஆனையும் மனனம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பல் வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் திருக் குர்ஆன் பிரதிகளை பதிப்பிக்கும் இத் திருக்குர்ஆன் பதிப்பக வளாகம், கண் பார்வையற்றவர்கள் தங்;கள் விரல்களால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையிலும் திருக் குர்ஆன் பிரதிகளை வெளியிட்டுள்ளது. DAEWOO என்னும் கொரிய நிறுவனம் தயாரித்து இஸ்லாமிய நாடுகளில் விற்பனையாகும் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கியதும் முதலில் திரு மறை குர்ஆனின் முதல் அத்தியாயம் 'சூரத்துல் ஃபாத்திஹா' சின்னத் திரையில் சில நொடிகள் பளிச் செனத் தோன்றும். இத் தயாரிப்பு முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-------------------------------
திருக் குர்ஆனின் புகழ் பெற்ற ஆங்கில மொழி பெயர்ப்பு THE MEANING OF THE QURAN என்ற பெயரில் வெளிவந்தது. மொழி பெயர்த்தவர் 'மார்மடியூக் பிக்தால்' என்னும் இங்கிலாந்நு அறிஞர். இவர் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர் என்பதும், இவரது தந்தை 'சார்லஸ் ஜி. பிக்தால்' என்பவர் ஒரு புகழ் பெற்ற கிறிஸ்தவப் பாதிரியார் என்பதும் ஆச்சரியப் படவைக்கும் உண்மைகளாகும்.
----------------------
திருக் குர்ஆனுக்கு தமிழ் மொழியில் பல மொழி பெயர்ப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன என்றாலும், முதல் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு 'தர்ஜுமத்;துல் குர்ஆன்' என்ற பெயரில் வெளி வந்தது. மொழி பெயர்த்தவர் ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி என்னும் பெருமேதை. இவர்கள் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் தந்தையாவார்.
---------------------------
ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் 'தர்ஜுமத்துல் குர்ஆன்' என்னும் தமிழ் மொழி பெயர்ப்பில், திருமறை வசனங்களின் நேரடித் தமிழ் மொழி பெயர்ப்பும், அடைப்புக் குறிக்குள் அதற்கான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ள விளக்கத்தைச் சேர்த்துப் படித்தாலும், விட்டு விட்டு நேரடி மொழி பெயர்ப்பை மட்டும் படித்தாலும் வாக்கியங்களும், வார்த்தைகளும் சிதைவு படாமல் முழுமையாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் கவனமாக எழுத்துக்கள் உட்படச் சரியாகக் கையாளப் பட்டுள்ளன. இப்படி ஒரு சிறந்த மொழி நடையில் தமிழ் மொழியின் வரலாற்றில் வேறு எந்த மொழி பெயர்ப்பும் வெளி வந்ததில்லை எனக் கூறலாம்.
---------------------------
தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்த, திருக் குர்ஆனின் அனைத்து மொழி பெயர்ப்புகளும் மூல மொழியாகிய அரபியுடன் இணைத்தே வெளியிடப் பட்டுள்ளன. ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் மொழி பெயர்ப்பு ஒரு முறை தமிழ் மொழியில் மட்;டும் வெளியிடப் பட்டது. 'அரபி மொழியுடன் சேர்த்தே வெளியிடுவது தான் குர்ஆனை சங்கைப் படுத்தும்' என பல்வேறு அறிஞர்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, தமிழில் மட்டும் வெளி வந்த அந்தப் பதிப்பு, ஒரே பதிப்புடன் நிறுத்தப் பட்டது.
-----------------------------
தின மணி நாளிதழில், தினந்தோறும் திரு மறை குர்ஆனின் வேத வரிகளை முன் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு இறை வேத வரிகள் எல்;லா மக்களையும் சென்றடையும் ஒரு வித்தியாசமான மார்க்கச் சேவையைச் செய்தது, சென்னை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்.
---------------------------
திருக் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை, மிக மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு பரவலாக தமிழ் கூறு நல்லுலகில் பரவச் செய்த பெருமை ஜான் ட்ரஸ்ட் நிறுவனத்தைச் சேரும். தொடர்ந்து வருடந் தோறும் பல்லாயிரம் பிரதிகள் பதிப்பித்த அந்நிறுவனத்;தின் சாதனையே இதற்குச் சான்றாகும்.
--------------------------
தமிழில் வெளிவந்த திருக் குர்ஆனின் மொழி பெயர்ப்புக்கள் அனைத்துமே அரபி மொழி நடையின் படி வலமிருந்து இடமாகத் தான் பக்கங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். தற்காலத்தில் உள்ள திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் சில, தமிழ் மொழி நடையின் படி இடமிருந்து வலமாக பக்கங்கள் வரிசைப் பட்டுள்ளன.
--------------------------
தானும் ஒரு நபியெனத் தன்னைப் பிரகடனப் படுத்;திக் கொண்ட முஸைலமாவுக்கு எதிராக அபூபக்கர் (ரலி) அவர்ளின் ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு 'யமாமா' என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் திருக் குர்ஆனை மனனம் செய்திருந்த 70 நபித் தோழர்கள் கொல்லப் பட்டார்கள்.
----------------------------
திருக் குர்ஆனில் சட்ட திட்டங்கள் காலத்திற்கும், சூழ் நிலைக்கும் தக்கவாறு படிப்படியாக அருளப்பட்டன. உதாரணமாக மது விலக்குக் கொள்கை மூன்று கட்டங்களாக அமுல் படுத்தப் பட்டிருக்கிறது.முதற் கட்டம்: (நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது.....(2:219) இரண்டாம் கட்டம்:நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துக் கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்....(4:43)
இறுதிக் கட்டம்: ஈமான் கொண்டோரே! மது பானமும், சூதாட்டமும், கற் சிலைகளை வழி படுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அறுவறுக்கத் தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.(5:90)
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மது பானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி, அல்லாஹ்வின் நனைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)
---------------------------
இறை நிராகரிப்பாளர்களுக்கு (காஃபிர்களுக்கு) உதாரணமாக, நூஹ் நபியுடைய மனைவி, லூத் நபியுடயை மனைவி ஆகிய இரு பெண்களைக் குறிப்பிடும் அல் குர்ஆன்(66:10)
இறை நம்பிக்கையாளர்களுக்கு (மூமின்களுக்கு) முன்னுதாரணமாக ஃபிர்அவ்னுடைய மனைவியையும், இம்ரானின் புதல்வியாகிய மர்யமையும் (66:11,12) குறிப்பிடுகிறது.
-----------------------------
திருக் குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே நபித் தோழர் ஜைத் (ரலி) அவர்கள் மட்டுமே. வேறு எந்த நபித் தோழரின் பெயரும் குர்ஆனில் குறிப்பிடப் படவில்லை.
-------------------------------
தமிழில் 'தேருவருதே' என்பதையும், ஆங்கிலத்;தில் MALAYALAM என்று எழுதியும் இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே மாதிரி வரும். இத போல் திருக் குர்ஆனிலும் இரு சொற்றொடர்கள் இடம் பெற்றுள்ளன. குல்லுன் ஃபீ பலக்(36:40) ரப்பக்க ஃகப்பிர்(74:3) என்னும் இரு சொற்றொடர்களையும் அரபியில் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும்.
------------------------------
ஒரு போதும் நடை பெற முடியாத செயலுக்கு 'ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் இது நடக்காது' என்று தமிழில் ஒரு சொற் பிரயோகம் உண்டு. இது திருக் குர்ஆன் கூறும் உதாரணம். எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)
---------------------------
9 ஆவது மாதம்(செப்டம்பர்) 11 ஆம் நாள் அமெரிக்க மக்களின் மறக்க முடியாத நாள். ஆம் 2001 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் அமெரிக்காவின், 110 அடுக்கு மாடி உலக வர்த்தக மையக் கட்டடம் அடியோடு தரை மட்டமாகி தவிடு பொடியானது. 'செய்தது யார்?' என்பது இது வரை ஆதாரத்துடன் நிரூபிக்கப்ட வில்லை. பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இச் சம்பவம் அமெரிக்க மக்களின் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக இருந்துக் கொண்டே இருக்கும். 9 ஆவது மாதம், 11 ஆம் நாள், 110 அடுக்கு மாடிக் கட்டடம் இம் மூன்றையும் நினைவில் நிறுத்தி- திருக் குர்ஆனின் 9 ஆவது அத்தியாயம், 11 ஆம் பாகம், 110 ஆவது வசனத்தைப் புரட்டுங்கள். ஆச்சரியத்தில் உங்கள் கண்கள் அகல விரியும். அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது) அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும் வரை(அதாவது மரணிக்கும் வரை) அல்லாஹ் நன்கறிந்தவன். ஞானம் மிக்கவன் (9:110)
------------------------------
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்;தை ஆட்சி செய்த கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு எதிராக, இறைத் தூதர் நபி மூஸா அலைஹிஸ்ஸலம் அவர்கள் கிளர்த் தெழுந்தார்கள். இறுதியில் ஃபிர்அவனும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப் பட்டனர். இது குறித்து இறை மறை குர்ஆனில் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்(10:92) என்று அல்லாஹ் கூறுகிறான். சென்ற நூற்றாண்டில் அந்த உடல் கண்டெடுக்கப் பட்டு இது 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப் பட்டு இப்போது எகிப்து அருங்காட்சி யகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது ஒரு சான்று.
--------------------------------
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களைப் பின் பற்றியோரும் இறை ஆணைப்படி ஏறிக் கொண்ட கப்பல் மாபெரும் வெள்ளப் பிரளயத்துக்குப்பின் இறுதியில் ஜுதி மலையில் தரை ஒதுங்கியதாகக் குர்ஆன் கூறுகிறது(11:44) துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில் பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டன. மரக்கலம் மலை உச்சிக்கு போனது எப்படி? என்று தொல்லியல் நிபுனர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க, திரு மறை குர்ஆன் தெளிவான விடையை முன் வைக்கிறது. நிச்சயமாக நாம் (வருங் காலத்திற்கு இ(ம்மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத் தோம். (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:15) சம்பவம் நடை பெற்று பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்ட பின்னர், இப்போது மிகச் சமீபத்தில் தான் இவை கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இத்துனை காலம் இது எப்படி மனிதக் கண்களுக்கு புலப்படாமல் போனது? புராதனப் பொருட்கள் எவ்வளவு பழமையானவை? என்பதை மனிதன் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியும் அறிவைப் பெறுகின்றவரை இறைவன் இதனைப் பாதுகாத்து வைத்துள்ளான் என்பதை உணர முடிகிறது. 'விட்டு வைத்தோம்;' என்னும் இறைவேத வரிகள் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
----------------------------------

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்
வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்;திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)
------------------------------
ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போது, இதயம் சுருங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அன்றே சொன்னது அல் குர்ஆன். யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கிறான். (6:125) -----------------------------
நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காண வில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் (21:44) என்று திருக் குர்ஆன் குறிப்பிடுவதை, இன்றைய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தி வருகின்றனர். இன்றைக்கு பூம்புகார் எனப்படும் முன்னாள் காவிரிப் பூம்பட்டிணத்தின் பெரும் பகுதி, கடல் ஊடுருவி நிலப் பகுதி குறைந்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். இவ்விதம் பல் வேறு நாடுகளில், கடற்கரையோரங்களில் பூமி குறைந்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவின் தென் பகுதியுடன் முற் காலத்தில் இணைந்திருந்து, காலப் போக்கில் கடல் நீர் உட்புகுந்து இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கக் கூடும், என்று, இரு நாட்டு மக்களின் மொழியும், கலாச்சாரமும், உருவ ஒற்றுமையும் ஒரு போல் இருப்பதை ஆராய்ந்த புவியியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
---------------------------
இரண்டு கடல்கள் ஒன்று சேரும் இடங்களில் இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை, என்று கடல் ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அப்போதே திருக் குர்ஆன் அறிவித்து விட்டது. அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீற மாட்டா.(55:19,20)
----------------------------
தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி தனது கூட்டில் கொண்டு போய் சேமித்து வைக்கின்றன என்ற தான் பொதுவாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் தேனீக்கள் மலர்களிலிருந்து உறிஞ்சும் குளுக்கோஸ் தேனீக்களின் வயிற்றினுள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிவரும், கழிவு தான் தேன் என்று விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால் அப்போதே திருக் குர்ஆன் இதைத் தெளிவு படுத்திவிட்டது. ....அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகிறது. அதில் மக்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. (16:69) இரத்தம் தான் பாலாக மாறுவதாக நம்பப்பட்டு வந்த கருத்தை இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் மறுக்கிறது. உண்ணப்பட்ட உணவு குடலுக்குச் சென்று கூழாக அரைக்கப் பட்டு இரத்தம் உற்பத்தியாவதற்கு முன்பே பால் உற்பத்தியாவதை விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. விஞ்ஞானத்தின்;;;; முன்னோடியான மெஞ்ஞான வேதம் சுற்றி வளைக்காமல் நேரடியாகத் தெளிவாகவே சொல்கிறது. நிச்சயமாக உங்களுக்கு, கால் நடைகளிலும்(தக்க) படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம்.(16:66)
---------------------------------------



">Link

மரணத்தொடக்கம் 2

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும் 2
">Link
மண்ணறை வாழ்க்கை

மரணத்திற்குப் பின் உள்ள மண்ணறை வாழ்க்கை என்பது நமக்கு எந்த வகையிலும் அறிமுகம் இல்லாத ஒன்று. அனுபவித்தவர் எவரும் மீண்டு வந்து சொன்னதில்லை. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தமக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை அப்படியே நமக்குச் சொன்னார்கள்.அவரது மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 52:3,4)அந்த மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நாம் சுயமாக எதையும் கற்பனை செய்யமுடியாது. அது கற்பனைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கையைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியவை அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம்.அந்த மண்ணறை வாழ்க்கை குறித்து நாம் அறியும் செய்திகள் ஆச்சரியமானதாக இருக்கலாம். இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவை என்று ஆதாரப்பூர்வமாக அறியும் போது உண்மை விசுவாசிக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.கண்ணால் காண்பதை நம்புவது பெரிய விஷயமல்ல. காணாததை நம்புவது தான் பெரிய விஷயம். அப்படி ஐம்புலனுக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கை தான் மண்ணறை வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையும்.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டா? அப்படி ஒரு வாழ்க்கையின் அவசியம் தான் என்ன? கற்பனைக் கெட்டாத ஒரு கருப்புச் சிந்தனை தேவைதானா? இறைவனை ஏற்காத நாத்திகர்கள் மட்டுமின்றி, உண்மையான இறைவனை உணராத ஆத்திகர்களும் கூட இப்படிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.இவர்களை நோக்கி இறைவனின் திருமறை இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கின்றது.உங்களை வீணாகப் படைத்துள்ளோhம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? (திருக்குர்ஆன் 23:115)
உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை கோடானு கோடி மக்கள் தோன்றினார்கள். இனி உலகம் அழியும் நாள் வரை தோன்றுபவர்கள் எத்தனை கோடிகளோ! இவர்களில் ஏக இறைவனை ஏற்றவரும் உண்டு. ஏற்க மறுத்தவரும் உண்டு. பல்வேறு தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப் போரும் உண்டு. நண்மைகள் செய்து நானிலம் போற்ற நற்பெயர் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்தவரும் உண்டு. அநீதி இழைத்து, அநியாயங்கள் புரிந்து, கொள்ளை அடித்து, கொலைகள் செய்து கோரத் தாண்டவம் ஆடியவரும் உண்டு.இவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணிக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமே இப்படியே விட்டுவிடுவதா?வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா? (திருக்குர்ஆன் 75:36)இல்லை. இவர்களை இப்படியே வெறுமனே விட்டுவதில் அர்த்தமில்லை. இதில் நியாயமும் இல்லை. நீதிபதிகளுக்கெல்லாம் பெரிய நீதிபதியாகிய இறைவன், ஒவ்வொருவருக்கும் உரிய நீதியை நிச்சயம் வழங்குவான்.எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

மரணம் ஒரு முடிவல்ல!

தொடக்கம் தான்ஒரு மனிதன் மரணிப்பதோடு எல்லாம் முடிந்து விடும் என்றால் இவ்வுலகிவ் நல்லவர்கள் நல்வாழ்க்கை வாழ்ந்தற்கு என்ன பொருள்? தீயவர்கள் தம் மனம் போன போக்கில் வாழ்ந்ததற்குத் தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் போனது என்ன நியாயம்?குற்றங்கள் புரிந்தும் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகள், கண்டுபிடிக்கப்பட்டும் தண்டிக்கப் படாத குற்றவாளிகள், தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டும் செல்வத்தாலும் செல்வாக்கினாலும் தப்பித்து வெளியில் வந்த குற்றவாளிகள், ஆகிய இவர்களைத் தண்டிக்க அந்த வல்ல இறைவனால் மட்டுமே முடியும்.இவ்வுலகில் இவர்கள் தப்பித்து விடலாம். ஆனால் மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கையில் இவர்கள் தப்பிக்க முடியாது.ஒரு கொலை செய்தவனுக்கும், குண்டு வீசி பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டவனுக்கும் ஒரே விதமான தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்? மரண தண்டனை கூட ஒரு முறை தானே நிறவேற்ற முடியும். எனவே இவ்வுலகில் வழங்கப் படும் தண்டனைகள் ஒருபோதும் நியாயத் தீர்ப்பாகாது.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு. அதில் நியாயத்தீர்;ப்பு உண்டு என்பதை உணர்த்த அறிவுள்ள மனிதனுக்கு இதற்கு மேலும் ஆதாரம் தேவையில்லை.

மறுபடியும் எழுப்பப்படுவோம்

மரணித்து மண்ணறையில் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது எப்படி சாத்தியமாகும்? ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இது. இப்படி ஒரு வினாவை இறைவனின் திருமறை எழுப்பி அதற்கு தானே விடையும் அளிக்கிறது.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். (அவனை) நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்வன் யார்? என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்hன். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்.' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 36: 78,79)நாம் யார்? நமது தாயின் வயிற்றில் கருவாக உருவாவதற்கு முன் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? கண்ணுக்கே புலப்படாத உயிரணு எப்படிக் கருவாக உருவானது? உருவான கருவில் உயிரைப் புகுத்தியவன் யார்? மரபணுவுக்கு மகிமையைத் தந்தது யார்? நாம் பெற்றெடுத்த குழந்தை வளர்ந்து ஆளாகி அதுவும் குழந்தையைப் பெற்றடுக்கின்றதே! இந்த அற்புதங்கள் எவ்விதம் நிகழ்கின்றன?ஆம்! எல்லாம் வல்ல இறைவன் இந்த அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். எதுவுமாக இல்லாமலிருந்த நம்மை மனிதனாக உருவாக்கிய இறைவனுக்கு, நாம் மரணித்து மண்ணறையில் புதைக்கப் பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது இயலாத காரியமல்லவே!மனிதனின் இவ்வுலக வாழ்க்கை பிறப்பிலிருந்து துவங்குகிறது. இறப்பில் முடிகிறது. ஆனால் மறுவுலக வாழ்க்கை மனிதனின் இறப்பிலிருந்து தான் தொடங்குகிறது. முடிவே இல்லாத நீண்ட நெடும் நிரந்தர வாழ்க்கையின் முதற்கட்டம் மண்ணறையிலிருந்து தான் தொடங்குகிறது. மனிதன் இறந்தது முதல் மறுபடியும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பபடும் வரையுள்ள வாழ்க்கை தான் மண்ணறை வாழ்க்கை. இது ஒரு திரை மறைவு வாழ்க்கை. இதுவே பர்ஸக் உடைய வாழ்க்கை எனப்படும்.இறுதித் தீர்;ப்பு நாளில் அனைவரும் எழுப்பப்பட்டு அவரவர் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பொறுத்து நல்லவர்களாயின் சொர்க்கமும், தீயவர்களாயின் நரகமும் அளிக்கப்படும். அது நிரந்தர வாழ்க்கை. முடிவே இல்லாத வாழ்க்கை.மரணத்திற்குப் பின் உள்ள பர்ஸக் உடைய வாழ்க்கை என்பது மண்ணுக்கடியில் புதைக்கப் பட்டவர்களுக்கு மட்டும் தான் என்று கருதி விடக் கூடாது. கடலில் மூழ்கி இறந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்வர்கள், காட்டு மிருகங்களுக்கு இரையாகிப் போனவர்கள், நெருப்பில் எரிந்து கரியாகிப் போனவர்கள், அனைவருக்குமே இந்த கப்ருடைய வாழ்க்கை என்னும் பர்ஸக் உடைய வாழ்க்கை உண்டு.இவர்களுக்கு கப்ருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? கேள்விக் கணக்கு எப்படி இருக்கும்? விசாரணை எப்படி நடக்கும்? என்னும் கேள்விகளெல்லாம் நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டவை.மண்ணறை வாழ்க்கை மறுக்கமுடியாத உண்மை. அந்தத் திரை மறைவு வாழ்க்கையில் நல்லவர்கள் புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். தீயவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரை தொடரும்.மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் எந்த கப்ருக்கு அருகில் சென்றாலும் தமது தாடி நனையும் அளவுக்கு அழுவார்களாம். அவர்கள் கூறுகிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். 'கப்ருதான் மறுமையின் தங்குமிடங்களில் முதலாலதாகும். அங்கு ஒருவர் நிம்மதி அடைந்தால் மறுமையிலும் நிம்மதி அடையலாம். அங்கு ஒருவர் தோல்வி அடைந்தால் மறுமையிலும் தோல்விதான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று நற்சான்று வழங்ஙகப்பட்ட அந்த உஸ்மான் (ரலி) அவர்களே மண்ணறை வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்று நினைத்து அழுவார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள்

எத்தனை எத்தனை கப்ருகளுக்குப் போயிருக்கிறோம்? பெற்றோரை- உற்றார் உறவினரை- உடன்பிறந்தோரை நாமே முன்னின்று நல்லடக்கம் செய்திருக்கிறோம். நாமும் ஒரு நாள் இவ்விதமே புதைக்கப் படுவோம் என்பதை எப்போதாவது சிந்தித்தோமா? நமது கேள்வி கணக்கு விசாரனை எப்படி இருக்கும்? நமது மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? என்று நினைத்து கவலைப் பட்டது உண்டா? நமது கண்கள் அழுதிருக்கின்றனவா? நமது உள்ளம் உணர்ந்திருக்கின்றதா? அவரவர் பகுதிகளில் உள்ள கப்ருஸ்தான்களுக்கு அடிக்கடிச் செல்வதை இனியேனும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவ்விடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்கள் இறந்து போய் இந்த இடத்தில் புதைக்கப் பட்டதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் அன்பு செலுத்தியவர்கள், உங்கள் மீது அன்பு செலுத்தியவர்கள், உங்களை உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், நீங்கள் உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், உங்கள் வாழ்கைத் துணையாக வந்துசேர்ந்தவர்கள், சகோதரப் பாசம் பொழிந்து சகல இன்ப துன்பங்களிலும் பங்து கொண்டவர்கள், ஆசானாய் இருந்து வழிநடத்திச் சென்றவர்கள், ஆருயிர்;த் தோழராய் உங்கள் இதயத்தில் இடம் பிடித்தவர்கள், அனைவரும் இங்கே புதைக்கப் பட்டுள்ளனர். கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். மறுமையின் நினைவு உங்கள் மனத்திரையில் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும்.அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யச் செல்லும் போது, அங்கு அடக்கப் பட்டுள்ள அனைவருக்கும் ஸலாம் கூற வேண்டும். அடக்கப்பட்டுள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும்.நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கத்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி 'அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர், யஃபிருல்லாஹு லனா வலகும், அன்தும் ஸலஃபுனா வ நஹ்னு பில் அஸர்' எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி 973(இதன் பொருள்) அடக்கத்தலங்களில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். எங்களையும் உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக. நீங்கள் எங்களை முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்; கூடியவர்களாக உள்ளோம்.இவ்விதம் கப்ருகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 976தர்காக்கள் என்னும் அடக்கத்தலங்களுக்கு செல்லும் பெண்களே! நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.

அடக்கப்பட்ட பின் கப்ர் நெருக்கும்

எந்த மனிதரையும் கப்ரில் அடக்கிய பின், முதலில் அந்த மனிதரை கப்ர் நெருக்கும். அவர் கெட்டவராயினும் நல்லவராயினும் சரியே! கப்ருடைய இந்த முதல் நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியபது. நல்லவராயின் முதல் நெருக்குதலிலிருந்து கப்ர் தனது நெருக்கத்தைத் தளர்த்தும். தீயவராக இருப்பின் கப்ர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும்.கப்ருடைய இந்த நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியாது என்பதற்கு பின் வரும் நபி மொழியே சான்று. நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியும் என்றால் ஸஅது மீட்சி பெற்றிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத்வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களை கவலையடையச் செய்யக் கூடிய ஒருவர் மரணித்து விட்டார். அதனால் அல்லாஹ்வுடைய அர்ஷ் கூட நடுங்குகிறது என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவர்தான் ஸஅது (ரலி) அவர்கள்.இவ்வளவு மேன்மைப் பெற்ற அந்த ஸஅது (ரலி) அவர்களையே கப்ர் நெருக்காமல் விட்டதில்லை என்றால் மற்றவர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டும் காப்பானாக!' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! மண்ணறை வேதனை உள்ளது என்று கூறினார்கள்.மேலும் ஆயிஷா அவர்கள் கூறுகிறார்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்ததே இல்லை.அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி) ஆதாரம்: புகாரி 1372

மண்ணறை வேதனையும் மணமகனின் உறக்கமும்

மைய்யித் அடக்கம் செய்யப்பட்டவுடன் நீல நிறக் கண்களுடைய இரண்டு கருப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர், மற்றொருவர் நகீர். அவ்விருவரும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து) 'இந்த மனிதர் பற்றி நீர் என்ன கூறிக் கொண்டிருந்தீர்?' என்று கேட்பார்கள்.'இவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாகக் கூறுவார். அதற்கு அவ்விருவரும் 'இவ்வாறே நீர் கூறிவந்தீர் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பின்னர் அவரது அடக்கத் தலம் எழுபதுக்கு எழுபது முழமாக விரிவு படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்றப் படும். பிறகு அவரிடம் 'நீர் உறங்குவீராக' என்று கூறப்படும். அப்பேது அவர் 'நான் என் குடும்பத்தினரிடம் சென்று இதைக் கூறவேண்டும்' என்பார். அப்போது அவ்விருவரும் 'நெருக்கமான குடும்பத்தினர் தவிர மற்றவர் எழுப்பமுடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழுக்கும் வரை உறங்குவீராக!' என்று கூறுவர். அவன் முனாஃபிக்காக இருந்தால் (மேற்கண்ட அதே கேள்விக்கு விடையளிக்கும்போது) 'மக்கள் சொல்வதைச் செவியுற்று அதையே நானும் கூறினேன். (வேறெதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அதற்கு அவ்விருவரும் 'நீ அவ்வாறுதான் கூறி வந்தாய் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பூமியை நோக்கி 'இவரை நெருக்கு' என்று கூறப்படும். அது அவனை நெருக்கும். அதனால் அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 991ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப் பட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களது செறுப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்காரவைத்து 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்? என்று நபி (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்hதர்கள். அவன் மூமினாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான்.அவனிடம் (நீ கெட்டவனாக இருந்திருந்தால் உனக்கு கிடைக்கவிருந்த) 'நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும். என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளரான கதாதா(ரலி) குறிப்பிடுகிறார். அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால், 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப் படும்போது 'எனக் கொன்றும் தெரியாது மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான்.உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை, (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை, என்று கூறப்படும். மேலும் இரும்புச் சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி 1374உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்பும் வரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்றும் கூறப்படும்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி 1379

நபி (ஸல்) அவர்கள் கன்ட கனவு

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா? என்று கேட்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் 'இல்லை' என்றோம். அவர்கள் 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் இருவர் என்னிடம்வந்து என் கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுக் கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்;திருப்பவரின் கீழ் தாடையின் ஒரு புறம் குத்த, அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும், அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள், சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்புஎரிந்துக் கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிpகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாக இருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும், பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள்.அதில் ஆண்களும் பெண்களும் நிர்வானமாகக் கிடந்தார்கள்.நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுக் கொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப் பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க அவர் மீண்டும் பழயை இடத்துக்கே சென்றார். அப்போது 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள்.நான் இதுவரை அப்படி ஒரு அழகான வீட்டைப் பார்த்ததே இல்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும், இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் 'இரவு முழுதும் என்னை சுற்றிக் காண்பித்தீர்களே அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டேன்.அதற்கு அவ்விருவரும், ஆம்! முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட் நிலையில் நீர் பார்த்தீரே அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள். அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக் (அலை) அவர்கள்.நீர் நுழைந்த முதல் முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்;த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு இப்போது உமது தலையை உயர்த்தும் என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம் என்றதும், நான் 'எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்' என்றேன்.அதற்கு இருவரும் 'உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது அதை இன்னும் நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர் என்றனர்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஆதாரம்: புகாரி 1386 மேற்கண்ட நபி மொழியும், இன்னும் ஆதாரப் பூர்வமான பல்வேறு நபி மொழிகளும் மண்ணறை வேதனை குறித்து நமக்கு தௌ;ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

மண்ணறையில் நடைபெறும் விசாரனை, நல்லவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நிம்மதி, தீயவர்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை ஆகியவற்றில் எவ்வித சந்தேகமும் இல்லை.திடீர் மரணத்தை விட்டும் காப்பாற்றும்படி இறைவனிடம் இறைஞ்சுங்கள். சக்ராத் என்னும் மரண வேதனையை இலகுவாக்கித் தரும்படி அடிக்கடி பிரார்த்தியுங்கள். மரண வேளையில் கலிமாவை மொழியவும், ஷிர்க் என்னும் இணைவைத்தல், குஃப்ர் என்னும் இறை நிராகரிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்படியும் எந்நேரமும் இறைவனிடம் வேண்டுங்கள். மண்ணறை வேதனையை நினைத்து அஞ்சுங்கள். மறுமை என்னும் நிரந்தர வாழ்க்கையின் முதல் நுழைவாயில் மண்ணறை என்பதை மறந்து விடாதீர்கள். ஈமானுடனும் இனிய கலிமாவை மொழிந்த வண்ணமும், அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களுக்கு பாவமன்னிப்புத் தேடியவர்களாக, நமது இறுதி நேரம் அமையவும், மறுமையில் இன்ஷா அல்லாஹ் கிடைக்கவிருக்கும் சுவனபதியின் சுந்தரக் காட்சிகளை அனுதினமும் கண்டு ஆனந்தம் அடைந்தவர்களாக, மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் இறுதி நாள் வரை புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மை ஆக்கியருள இறைவனிடம் இறைஞ்சுவோமாக! அதற்கேற்ற வகையில் இம்மை வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக!

Sep 14, 2006

மரணத்தொடக்கம்1

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும் 1
">Link

பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி

உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் 'மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்' என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை. 'மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?' என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற் போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். ...தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34) நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78) மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்...(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். எவ்வித ஆபத்துக்களும் விபத்துக்களும் இல்லாமல் அல்லாஹ் கொண்டு வந்து சேர்ப்பான். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். 'இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ' என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்;து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237) இரவில் நன்றாகப் படுத்தவர் காலையில் எழுவதில்லை. உறக்கத்திலேயே சிலருக்கு உயிர் பிரிந்து விடுவதுண்டு. எனவே உறங்கச் செல்லுமுன், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி பிரார்த்தித்தவராக உறங்கச் செல்ல வேண்டும். எந்த நேரமும் மரணம் ஏற்படலாம். மரணம் ஏற்படும் அந்த நேரம் மகிழ்ச்சியான நேரமாகவோ துக்கமான நேரமாகவோ இருக்கலாம். பலருடன் சேர்ந்திருக்கும் நேரமாகவோ தனித்திருக்கும் நேரமாகவோ இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் குறித்த நேரத்தில் உயிரை எடுப்பார். கொஞ்சம் கூட முந்தவும் மாட்டார். பிந்தவும் மாட்டார்.

உயிரை எடுப்பவர் ஒருவர் அல்ல

உயிரை எடுப்பவர் ஒரு வானவர் தான் என்றும் அவருக்குப் பெயர் இஜ்ராயீல் என்றும் பலரும் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. நீண்ட நெடுங்காலமாக சொல்லப் பட்டு வருவதாலோ பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதாலோ ஒரு செய்தி சரியானதாக ஆகிவிடாது. உதாரணங்களைக் கூறி உலக விஷயங்களை வேண்டுமானால் நியாயப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் மார்க்க விஷயங்களுக்கு அல்லாஹ்வின் வேதத்திலும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் ஆதாரம் இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப் பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61) நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்' என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 16:32)ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்' என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!

உயிரை எடுக்கும் விதம்

நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி 'அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.' எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்திpல் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். அநீதி இழைத்தோர் மரண வேதனையில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். 'உங்கள் உயிர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள். (எனக்; கூறுவார்கள்.) (திருக் குர்ஆன் 6:93) இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது 'அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் 'அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக் குர்ஆன் 7:37)

ஷிர்க் என்னும் இணை வைத்தல்

மனிதர்கள் தாம் செய்யும் பாவங்களை உணர்ந்து திருந்தி பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். எவ்வளவு பாவங்கள் செய்திருந்த போதினும் சரியே! ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அது தான் ஷிர்க் என்னும் இணைவைத்தல்.தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)அல்லாஹ் அல்லாத மற்றவர்களை, அவர் எவ்வளவு பெரிய மகானாக ஏன் நபியாகவே இருந்தாலும் அழைத்துப் பிரார்த்திப்பதும் அவர்களிடம் தம் தேவைகளைக் கேட்பதும், ஆபத்தான நேரங்களில் அழைத்தால் ஓடிவந்து உதவுவார்கள் என்று நம்புவதும் கஷ்டங்களையும் சிரமங்களையும் தீர்த்து வைப்பார்கள் என்று கருதுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மைகளும் தகுதிகளும் மற்றவர்களுக்கும் உண்டு என்று எண்ணுவதும் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மகான்களுக்கும் உண்டு என்று நினைப்பதும் ஷிர்க் ஆகும். (இது போன்ற ஷிர்க் என்னும் இணை வைத்தலிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக)அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள், அப்படி அழைப்பது தவறல்ல என்று உலக உதாரணங்கனைளக் கூறி சுய வியாக்கியானம் கொடுத்து நியாயம் கற்பித்தவர்கள் அனைவரும் இந்த மரண நேரத்தில் உணர்வார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! இப்போது உணர்ந்து பயன் இல்லை. காலம் கடந்து விட்டது.

சக்ராத் என்னும் மரண வேதனை

மரணத்திற்குச் சற்று முன் ஏற்படும் சக்ராத் என்னும் மரண வேதனை அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. மரண வேதனையைப் பற்றித் திருமறை குர்ஆன் கூறுகிறது.மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. (திருக் குர்ஆன் 50:19)இந்த சக்ராத் வேதனையிலிருந்து யாருக்கேனும் விதி விலக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டுமானால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் சக்ராத் என்னும் மரண வேதனை இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக் கருகே தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று இருந்தது. அவர்கள் அப்பாத்திரத்தில் தமது கையை நுழைத்துத் தமது முகத்தில் தடவிக் கொண்டே இருந்தார்கள். 'இறைவா! மரணத்தின் கொடிய வேதனையிலிருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக' என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 900அந்த இறுதி நேரத்தில் அவர்கள் அனுபவித்த அந்த வேதனையைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், 'இப்படி ஒரு வேதனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுபவித்ததை நான் கண்டதே இல்லை.' என்று கூறுகிறார்கள்.அனைத்துப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப் பட்டவர் என்று அல்லாஹ்வே நற்சான்று வழங்கிய - அல்லாஹ்வின் பிரியத்திற்கும் நேசத்திற்கும் உரித்தான அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கே இந்த சக்ராத் வேதனை இருந்தது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? நபி (ஸல்) அவர்கள் கடும் வேதனையுடன் மரணித்ததை நான் பார்த்த பின் இலேசான சிரமத்துடன் யாரும் மரணிக்க வேண்டும் என்று நான் விரும்ப மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி 900)இந்த சக்ராத் என்னும் மரண வேதனையை இலேசாக்கித் தரும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
மனிதனுக்கு அவனுடைய வயது அறுபதாகின்றவரை அல்லாஹ் அவனுடைய ஆயுளைப் பிறபடுத்தி வைத்து (பாவமன்னிப்புத் தேட) சந்தர்ப்பத்தை வழங்குகின்றான்;;. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)மனிதனின் சராசரி வயது அறுபதாக இருப்பதால் நபி (ஸல்) பொதுவாக அறுபது வயது என்று கூறினார்கள். நாம் எந்த வயதினராக இருப்பினும் இப்போது இந்த நேரம் வரை பாவமன்னிப்புத் தேட நமக்கு அல்லாஹ் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அதிகமதிகம் பிழை பொறுக்கத் தேட வேண்டும். மரணத் தருவாயில் ஒருவர் இருப்பது தெரிய வந்தால் அருகில் இருப்பவர் அவருக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். உலகப் பேச்சுக்களை ஒதுக்கி வைத்து விட்டு இறை நினைவை ஏற்படுத்தும் ஈமானை அவர் இதயத்தில் பதிய வைக்க முயற்சிக்க வேண்டும்.உங்களில் மரணத்தை நெருங்கியவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ்வை எடுத்துச் சொல்லுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீத் குத்ரிலி) ஆதாரம்: மிர்மிதி 893ஈமானுடனும், இனிய கலிமாவை மொழிந்த வண்ணமும், நற்செயல்கள் செய்துக் கொண்டிருக்கும் நிலையிலும், நல்லதொரு மூமினாக முஸ்லிமாக நமது இறுதி நேரம் அமைய இறைவனை இறைஞ்சுவோமாக!

மரணத்தின் நினைவு

மரணத்தைப் பற்றிய நினைவு நம்மில் பலருக்கும் மிகவும் குறைவாகவே ஏற்படுகின்றது எனலாம். தமக்கும் ஒரு நாள் மரணம் வரும் என்பதைப் பலரும் வசதியாக மறந்து விடுவதுதான் வேடிக்கை.ஒவ்வொருவரும் தம் குடும்பத்தில் ஒருவர்- அதிலும் தமக்கு மிகவும் பிரியமான ஒருவர் மரணிக்கும் போது துக்கம் அடைகின்றனர். ஆனால் அந்த துக்கத்தின் தாக்கம் நாட்கள் செல்லச் செல்லக் குறைந்து பின்னர் மறைந்தும் போகின்றது. இனி இன்னொருவர் மரணிக்கும் போதுதான் மறுபடியும் மரணத்தைப் பற்றிய நினைவு வருகின்றது.அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்கிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம்' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அவ்வாறல்ல! ஒரு மூமினுக்கு இறைவனின் அருள், அவனது சொர்க்கம், அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப் பட்டால், அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான்' என்று விளக்கம் அளித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 987

ஒப்பாரி வைத்து அழக் கூடாது

குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால் ஏற்படும் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாதது தான். நம்மையும் அறியாமல் பொங்கி வரும் அழுகையைக் கட்டுப் படுத்துவது கடினமான காரியம் தான். அழுவதில் தவறில்லை. ஏனெனில் அழுகை மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்றாகும்.நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரலி) அவர்களின் குழந்தை ஒன்று மரணத் தருவாயில் இருந்தது. மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அக்குழந்மையைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'அல்லாஹ்வின் தூhரே! என்ன இது! (அழுகிறீர்கள்)' என ஸஅது (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். (ஆதாரம்: புகாரி 1284) எனவே மரணம் போன்ற துக்கமான நேரங்களில் அழுவதில் தவறில்லை. ஆனால் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதும், கன்னத்தில் அறைந்துக் கொள்வதும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதும், கூடாது.(துன்பத்தின் காரணமாகக்) கன்னத்தில் அறைந்துக் கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) ஆதாரம்: புகாரி 1297காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மரணத்தின் போது பெண்கள் அழுதுக் கொண்டிருந்த சமயம், உமர் (ரலி) அவர்கள் 'இப் பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள், தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாலோ அல்லத சப்தமிட்டு அழுதாலோ அவர்களைத் தடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி பாடம் 33)

மைய்யித்தை விரைவில் அடக்கம் செய்தல்

எவரேனும் இறந்து விட்டால் ஜனாஸாவை எவ்வளவு விரைவில் கொண்டு போய் அடக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்க வேண்டும். மிக நீண்ட நேரம் ஜனாஸாவைக் காக்க வைப்பது விரும்பத்தக்கதல்ல.ஜனாஸா (பெட்டியில்) வைக்கப் பட்டு அதை ஆண்கள் அவர்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் 'என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்' என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி(ரலி) ஆதாரம்: புகாரி 1314அது போல் ஜனாஸாவைச் சுமந்து செல்லும்போது வேகமாகக் கொண்டு செல்வது சிறந்தது என்று பின்வரும் நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.ஜனாஸாவை(ச் சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மைய்யித்) நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால் அதை நன்மையின் பால் விரைந்து கொண்டு செல்கிறீர்கள். அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களது தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1315

ஜனாஸாத் தொழுகை

யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யும் வரை கலந்துக் கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு, என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1325இவ்வளவு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் இந்த ஜனாஸாத் தொழுகை விஷயத்தில் நம்மில் பலரும் அலட்சியமாக இருப்பதைக் காணமுடிகின்றது.ஜனாஸாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது உடன் வருபவர்கள் ஜனாஸாத் தொழுகைக்காக தொழுமிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, பலரும் ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொள்வதைப் பரவலாகப் பல ஊர்களிலும் காண்கிறோம்.இறந்து போய் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள மைய்யித் அவர் தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருப்பினும் அவருக்காகப் பிரார்த்திப்பதும், அந்த ஜனாஸாத் தொழுகை என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையல்லவா? இனியும் ஒதுங்கி நிற்காதீர்கள்.ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் நூறுபேர் அளவுக்கு எட்டக் கூடிய முஸ்லிம்கள் தொழுகை நடத்தி அவருக்காகப் பரிந்துரை செய்தால், அவர்களின் பரிந்துரை ஏற்கப் படாமல் இருப்பதில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 950ஒதுங்கி நிற்பவர்களே! உணர்ந்துக் கொள்ளுங்கள்! நீங்களும் ஒரு நாள் இப்படி ஜனாஸாவாக இங்கே கொண்டு வரப்படுவீர்கள்.

கப்ரின் மீது கட்டடம் கட்டுவதும் கப்ரை பூசுவதும் கூடாது

சமுதாயத்தில் நல்லவராகவும் வணக்கசாலியாகவும் வாழ்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்து அந்த கப்ரின் மீது கட்டடம் கட்டுவதும் ஆண்டு தோறும் நினைவு நாள் கொண்டாடுவதும் பல ஊர்களிலும் காணப்படுகின்றது.பல்வேறு ஊர்களிலும் பவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நல்லடியார்கள் இறப்பெய்திய போது இப்படி உருவான கட்டடங்கள் தான் இன்று தர்காக்கள் என்னும் பெயரில் பட்டி தொட்டிகளிலெல்லாம் காட்சி தருகின்றன. பல்வேறு அநாச்சாரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் தோன்ற மூலக் காரணங்களாக அமைந்தன.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக்கிவிட்ட யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக!அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்நபிமார்களின் கப்ருகளையே வணக்கத் தலங்களாக்கி விட்டவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள் என்றால் நல்லடியார்கள் என நம்பப்பட்டவர்களின் கப்ருகளை புனிதத் தலங்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது எப்போதாவது நடைபெற்றாலும், சாதாரணமாணவர்கள் இறந்து அடக்கம் செய்யப் பட்டால் அவர்களின் கப்ருகளைப் பூசி மெழுகி வைப்பதும், பூமாலைகள் வைத்து அலங்கரிப்பதும் பரவலாகச் சில பகுதிகளில் காணப்படுகின்றது.கப்ருகள் பூசப்படுவதையும் அவற்றின் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி

சொர்க்கவாசியா? நரகவாசியா?

இறந்து போன எவரையும் அவர் சொர்க்கவாசி தான் என்றோ, நரகவாசி தான் என்றோ நம் சொந்த விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது. நமக்குத் தெரிந்தவரை ஒருவர் நல்லவராக வாழ்ந்து மரணித்திருந்தாலும் கூட, அவர் நிச்சயம் சொர்க்கவாசி தான் என்று உறுதியாகக் கூற நமக்கு அதிகாரம் இல்லை. 'இறைவா! இவரை சொர்க்கவாசியாக ஆக்குவாயாக!' என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.'நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உம்முல் அலா (ரலி) ஆதாரம்: புகாரி 1243அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு 'இவர்கள் சொர்க்கவாசிகள்' என்று கூறியுள்ளார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சுவனத்தின் சுபச்செய்தி வழங்கப்பட்ட அந்த புண்ணிய சீலர்களைத் தவிர மற்றெவரையும் சொர்க்கவாசிதான் என்று உறுதியாகக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஷஹீத் என்னும் வீர மரணம்

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து அதில் கொல்லப் பட்டவர் ஷஹீத் என்னும் உயிர்த்தியாகி ஆவார்.உயிர்;த்தியாகிகள் ஐவராவர். காலராவில் மரணித்தவர், வயிற்றோட்டத்தில் இறந்தவர், தண்ணீரில் மூழ்கி இறந்தவர், இடிபாடுகளில் (சிக்கி) இறந்தவர், அல்லாஹ்வின் பாதையில்(அறப்போரில்) உயிர்த்தியாகம் செய்தவர். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்;மிதி 983போரில் கொல்லப் பட்டவர் மட்டுமின்றி தனது குடும்பத்தினரை எதிரிகளிடமிருந்து காப்பதற்காகப் போரிட்டு அதில் கொல்லப் பட்டவரும், தனது செல்வத்தை, உடமைகளைக் காப்பதற்காகப் போரிட்டு அதில் கொல்லப் பட்டவரும், ஷஹீத் என்னும் உயிர்;த்தியாகிகள் ஆவர் என்று ஆதாரப் பூர்வமான நபி மொழிகள் நமக்கு அறிவிக்கின்றன.ஷஹீத் என்னும் வீர மரணம் எய்தியவர்கள் குறித்து இறைவனின் திருமறை கூறுகின்றது.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்ஙறனர். (திருக்குர்ஆன் 3:169) உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நபித் தோழர்கள் கேட்ட போது அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும், அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும் என்று இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 3500)

Sep 11, 2006

மூடப் பழக்கங்கள் 4

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
பாகம் 4

இறந்தவர் வீட்டில் எத்தனை பாத்திஹாக்கள்!

குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், மறுநாளிலிருந்து தொடங்கி விடும் பாத்திஹாக்களின் அணிவகுப்பு. 3, 5, 7, 10, 15, 20, இப்படியே 40 ஆம் நாள் தடபுடலாகப் பெரிய பாத்திஹா. பிறகு 6 மாதம், 1 வருடம். பின்னர் வருடந்தோறும்.பாத்திஹாக்கள் ஓதி ஓதியே, இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து கடனாளி ஆனவர் பலர். கையில் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியும், கடன் கிடைக்காவிட்டால் வட்டிக்கு வாங்கியும், பாத்திஹா ஓதும் முட்டாள்களை என்னவென்பது? இதனால் இம்மையிலும் நஷ்டம். மறுமையிலும் ஒரு பயனும் இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நமது அனுமதி இல்லாத எரு காரியத்தை எவரேனும் செய்தால், அது ரத்து செய்யப்படும்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம். : புகாரி)இந்த பாத்திஹாக்களின் மூலம் எத்தனையோ ஏழைகளுக்கு வயிறார உணவு கிடைக்கின்றதே, என்றும் இது நன்மை தானே என்றும் சிலர் கூறலாம், பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் புண்ணியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பாத்திஹா ஓதி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.பாத்திஹா ஓதி விருந்தளிப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த உறவினர்களைத் தான் அழைக்கின்றனரே தவிர, பசியால் வாடும் ஏழைகளை மனமுவந்து அழைப்பதில்லை. விருந்து சமயத்தில் வரும் ஒரு சில ஏழைகளுக்கு-வேண்டா வெறுப்பாக- அதுவும் மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. எனவே ஏழைக்கு உணவளிக்க பாத்திஹா ஓதுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.பெற்றோர்கள் இறந்து விட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் நினைவு நாள் கொண்டாடி பாத்திஹா ஓதுவதில் அர்த்தமில்லை. தினமும் அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.ஒவ்வொரு தொழுகையிலும், தமது பெற்றோர் மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றப் படவும், மறுமையில் நற்பேற்றை அடையவும், இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இஸ்லாம் கூறும் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தச் செலவும் இல்லை.

இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதுதல்

திரு மறை குர்ஆன் இறக்கப்பட்ட காரணங்களை இறைவனே திரு மறையின் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.இந்த வேதம் பயபக்தி உடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (2:2) இது அகிலத்தாருக் கெல்லாம் உபதேசமாகும்.(81:27) அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன் மாராயமாகவும் இருக்கின்றது.(46:12)ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்வதற்கு இறக்கப்பட்டதாகச் சிலர் ஒதுக்கி வைத்து விட்டனர்.திரு மறையின் ஓர் இடத்தில் கூட, இது இறந்தவர்களுக்கு ஓதுவதற்கு அருளப்பட்டதாகக் கூறப்படவில்;லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்யும்படிக் கூறவில்லை.மார்கத்தின் எந்த ஒரு செயலும், அல்லாஹ் திருமறையில் அறிவித்ததாகவோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ இருக்க வேண்டும். நாமாக நம் விருப்பப்படி எதையும் முடிவு செய்யக் கூடாது.குர்ஆன் ஓதுவது நன்மை தான். அதில் சந்தேகமேயில்லை.ஆனால் இறந்தவர்களுக்கு ஓத - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓத மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்றால், இல்லை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட ஏராளமானோர், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மரணித்துள்ளனர். அவர்களில் யாருக்கேனும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி ஹதியாச் செய்ததாக எந்த ஹதீஸிலும் காணப்பட வில்லை.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எந்த ஒரு நபித் தோழரும் அவர்களுக்காக குர்ஆன் ஓதியதாக ஆதாரம் இல்லை.நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது ரத்து செய்யப்படும். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி)

சுப்ஹான மவ்லிது

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர்.தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்?பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய் விடுவார்கள்.வசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது. ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது. என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும்.இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.ஆம் உண்மை தான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை. பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை. வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை. ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை.தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.-

முஹ்யித்தீன் மவ்லிது

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!கொஞ்சம் கூட உண்மை கலக்காமல்- முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளால் ஹிகாயத் என்னும் சம்பவங்களை உருவாக்கி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அப்பட்டமான ஷிர்க்கை எதுகை மோனையுடன் கவிதைகளாகப் புனைந்து, அதற்கு முஹ்யித்தீன் மவ்லிது என்று பெயர் சூட்டி - அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க கட்டப் பட்ட பள்ளிவாசல்களில் ஓதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணரவில்லை.அரபியில் இருப்பதால் உங்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. அதன் பொருளை உணர்ந்தால் துடிதுடித்துப் போவீர்கள். அந்த அளவுக்கு முஹ்யித்தீன் மவ்லிதின் படல்கள் முழுவதும், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதிக சிறப்புக்கு உரியவராகவும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தராகவும் வர்ணிக்கப் படுகிறார்கள்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத - ஷிர்க் என்னும் கொடும் பாவத்தை ஏற்படுத்தும் - இந்த முஹ்யித்தீன் மவ்லிது நன்மையைத் தருவதற்குப் பதிலாக நரகப் படு குழியில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எச்சிக்கை!நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்.(அல் குர்ஆன் 4: 48) -

புர்தாவின் பெயரால் புருடா

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே கஸீதத்துல் புர்தா என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர்;.எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவ ர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை யாரும் வரம்பு மீறிப் புகழவேண்டாம். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவனது தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி)என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால்- நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இக்கவிதையை புறக்கனிக்க வேண்டும்.இந்தப் புர்தாவை ஓதுவதால் கஷ்டங்கள் நீங்கும், நோய் நொடிகள் விலகும், நாட்டங்கள் நிறைவேறும், என்று கருதுவதும், இதற்காக வெள்ளிக் கிழமை இரவுகளிலும், விசேஷ நாட்களிலும், புனிதமாகக் கருதி இதை ஓதுவதும், மார்க்கத்திற்குப் புறம்பானது.மார்க்கத்தின் பெயரால் இது போன் மடமைகளை அரங்கேற்றி தாமும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுப்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் சடங்குகளாக்கி - புதிதாகப் புகுத்துபவர்கள்- புர்தாவின் பெயரால் புருடாக்கள் விட்டு பகாமர மக்களை ஏமாற்றியவர்கள், இனியாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அறியாமையால் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும்.

ஸலவாத்துன்னாரியா

நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, மவ்லிது, புர்தா, ஸலவாத்துன்னாரியா, என்று இந்தக் கூலிப் பட்டாளங்களின் கண்டு பிடிப்புகள் தொடருகின்றன.இந்த ஸலவாத்தின் கருத்துக்கள் முழுவதும் தவறானவை. அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் நாட்டங்கள் நிறைவேறுவதாகவும், கஷ்டங்கள் தீருவதாகவும், இந்த ஸலவாத்தில் காணப்படுகின்றது. இதற்கெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல் குர்ஆன் 33 : 56)என்னும் திருமறை வசனம் அருளப்பட்ட போது, நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் 'நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் என்று துவங்கும், அத்தஹிய்யாத்தில் ஓதுகின்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட நபித் தோழர்கள், ஸலவாத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தான் தெரிந்துக் கொண்டார்கள்.அப்படியிருக்க, யாரோ உருவாக்கிய, அதுவும் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரணான கருத்துக்களை உள்ளடக்கிய ஸலவாத்தை, புனிதம் என்று கருதுவதும், அதைக் கொண்டு நாட்டங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் தீரும் என்று நம்புவதும், மார்க்கத்திற்கே விரோதமானது என்பதை மறந்து விடக் கூடாது.

திக்ரு செய்வது எப்படி?

வெள்ளிக் கிழமை இரவுகளிலும், மற்றும் புனித நாட்களிலும், பள்ளிகளில் திக்ரு செய்யப் படுகின்றது. ராத்திபு என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த திக்ருகளில் காதிரியா, ஷாதுலியா, ஜலாலியா, என்று எத்தனை பாகுபாடுகள்!அல்hஹ்வின் பள்ளிகளில் ஒலி பெருக்கியை வைத்துக் கொண்டு, உரத்த சப்தத்துடன் கூச்சல் போடுவது திக்ரு செய்யும் முறையல்ல. எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அல்லாஹ்வே கூறுகிறான்.(நபியே) நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனின் (திரு நாமத்தை) திக்ரு செய்துக் கொண்டு இருப்பீராக. (அல் குர்ஆன் 7:205)நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம்.உடனே நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கோ இருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாக செவியேற்பவனும் அருகில் இருப்பவனுமாகிய அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்.' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆதாரம்: புகாரி)குர்ஆனின் அடிப்படையிலும் நபி மொழி அடிப்படையிலும் உரத்த சப்தமின்றி மெதுவாகத் தான் திக்ரு செய்ய வேண்டும்.இல்லல்லாஹ் என்றும் ஹூ ஹூ என்றும் சிலர் திக்ரு செய்கின்றனர். 'இல்லல்லாஹ்' என்றால் 'அல்லாஹ்வைத் தவிர' என்று பொருள். ஹூ ஹூ என்றால் அவன் அவன் என்று பொருள். இது போன்ற வாக்கியம் முழுமை பெறாத, அர்த்தமற்ற திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் உருவாக்கிய இது போன்ற அர்த்தமற்ற திக்ருகளை அடியோடு ஒதுக்கி விட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை, அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும். மார்க்க விஷயங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை என்பதை உணர வேண்டும்

சிறிய செயல்கள் ஆனால் பெரிய பாவங்கள்

சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் மூட நம்பிக்கைகளையும், மூடப் பழக்கங்களையும் மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். இவை போக ஊருக்கு ஊர், இன்னும் ஏராளமானவை இருக்கின்றன.பெண் குழந்தைகளுக்கு காது குத்த காணி விழா நடத்துவதும், கர்ப்பினிப் பெண்களுக்கு வளை காப்பு நடத்துவதும், வெள்ளி திங்கள் இரவுகளில் ஊதுபத்தி கொளுத்துவதும், சாம்பிராணிப் புகை போடுவதும், இரவு நேரங்களில் சில பொருட்களை அடுத்தவருக்குக் கொடுக்கக் கூடாது என்பதும், வீட்டைப் பெருக்கக் கூடாது என்பதும், கண் திருஷ்டிக்காகச் சுற்றிப் போடுவதும், ஆரத்தி எடுப்பதம், நாட்டங்கள் நிறைவேற 16 நோன்பு வைத்துப் பாத்திஹா ஓதுவதும், வீட்டுக்கு பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வந்தால் சுலைமான் நபி பாத்திஹா ஓதுவதும், குறிப்பிட்ட கிழமைகளில் எவரேனும் இறந்து விட்டால், கோழி வாங்கிக் கொடுப்பதும், இறந்தவர் வீட்டுக்கு ஆறுதல் கூற குறிப்பிட்ட கிழமைகளில் போகாமல் தவிர்ப்பதும், குர்ஆனைத் திறக்கும் போது கண்களில் ஒற்றிக் கொள்வதும், கை தவறி குர்ஆன் கீழே விழுந்து விட்டால் எடுத்து முத்தம் போடுவதும், எடைக்கு எடை உப்பு வாங்கிக் கொடுப்பதும், விதவப் பெண்கள் வெள்ளைத் துணி தான் உடுத்த வேண்டும் என்பதும், அவர்களை அபசகுனமாகக் கருதுவதும், காசு பணத்தை லட்சுமி என்று சொல்வதும், காலில் பட்டால் முத்தம் போடுவதும், பிறை நட்சத்திரத்தை இஸ்லாமிய சின்னமாகக் கருதுவதும், அம்மை நோய் ஏற்பட்டால் தாலாட்டுப் படுவதும், தலை பாத்திஹா ஓதுவதும், அம்மை நோய் கோபப்படும் என்று நம்புவதும், அப்பப்பா! எழுத எழுத இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தில் எங்கிருந்து வந்தன இத்தனை மூடப் பழக்கங்கள்? இவை அனைத்தும் அந்நிய கலாச்சாரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.இவை அனைத்தும் சிறிய செயல்கள் தான். ஆனால் பெரும் பாவத்தை ஏற்படுத்தும்.-

என்னருமைச் சகோதரா!என்ன பதில் சொல்கிறாய்?

இஸ்லாம் இறைவனின் மார்க்கம். இது எல்லோருக்கும் சொந்தம். சத்திய மார்க்கத்தின் பால் - அதன் உயர்ந்த கோட்பாடுகளாலும், உன்னதக் கொள்கைகளாலும், கவரப்பட்ட மக்கள் சமத்துவத்தைத் தேடி - சகோதரத்துவத்தை நாடி வந்துக் கொண்டிருக்கின்றனர்.ஊருக்கு ஊர் நடை பெறும் அழைப்புப் பணிகளால், ஈர்க்கப் பட்டு - ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள், திறந்த மனதுடன் கேள்விகள் கேட்டுத் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துக் கொள்வதை தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டு வியப்படைகிறோம். நல்லதொரு விடியலை நோக்கி பலரும் நகர்ந்து வருகின்றனர்.இந்த இனிய மார்க்கத்தை நாடி வரும் சகோதர சகோதரிகளை இரு கரம் நீட்டி வரவேற்கும் அதே வேளையில் அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? கேள்வி இது தான்.உண்மையான மார்க்கத்தின் பால் அழைப்பதாகச் சொல்கிறீர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? எல்லாச் செயல்களும் நடை முறைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. பெயர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். செயல்கள் எல்லாம் ஒன்று தான். ஏற்கனவே இருந்துக் கொண்டிருக்கும் வழியிலேயே இருந்து விடலாமே. புதிய வழிக்கு வரவேண்டிய அவசியம் என்ன? எந்தப் பழக்கங்களிலும் எந்த வித்தியாசமும் இல்லையே!நாங்கள் திதி திவசம் செய்கிறோம்.நீங்கள் பாத்திஹா ஓதுகிறீர்கள்.நாங்கள் தேர் இழுக்கிறோம்.நீங்கள் கூடு இழுக்கிறீர்கள்.நாங்கள் சோதிடம் பார்க்கிறோம்.நீங்கள் பால் கிதாபு பார்க்கிறீர்கள்.எங்களுக்கு ஊருக்கு ஊர் குல தெய்வங்கள்.உங்களுக்கு ஊருக்கு ஊர் தர்காக்கள்.கோயில்களில் கும்பாபிஷேகம்.தர்காக்களில் சந்தனாபிஷேகம்.எங்களுக்கு சாமியார்கள்.உங்களுக்கு ஷெய்குமார்கள்.இந்தக் கேள்விகளுக்கு என்னருமைச் சகோதரா என்ன பதில் சொல்கிறாய்.இவையெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை அல்ல. இஸ்லாத்திற்கும் இந்த மூடப் பழக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புனித இஸ்லாம் இது போன்ற அனைத்து மூடப் பழக்கங்களுக்கும் அப்பாற்பட்டது. இதில் இறைவனின் பெயரால் ஏமாற்றுதல் இல்லை. ஏய்த்துப் பிழைக்கும் இழி செயல்கள் இல்லை. என்று பதில் சொல்லத் தயாராகி விட்டாயா?இஸ்லாமிய மார்கத்தின் இணையற்ற தத்துவங்களை, ஒப்பற்ற ஒழுக்க நெறிகளை, வாழ்வின் வளமார் நடைமுறைகளை, சாந்தி வழியை, சமத்துவக் கொள்கையை, சகோதரத்துவ வாஞ்சையை, சத்தியக் கருத்துக்களை, நமது சொல்லால், செயலால், நடைமுறையால் வாழ்ந்துக் காட்டுவோம். இறைவன் காட்டிய வழியில், இறைத் தூதர் போதித்த நெறியில் நாமும் நடப்போம். பிறரையும் அழைப்போம்.

முடிவுரை

திருமறை குர்ஆனும், திரு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப் பூர்வமான பொன் மொழிப் பேழைகளாம், புகாரி முஸ்லிம் திர்மிதி போன்ற நூல்களும் தெளிவான தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு விட்ன.பொருள் தெரிந்து படித்தால் தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும். நம்மிடம் இருக்கின்ற பழக்க வழக்கங்களில் எவை எவை இஸ்லாத்தில் இல்லாதவை என்பதைச் சுலபமாக இனம் கண்டு விட்டொழிக்க முடியும்.மார்க்க விஷயங்களில் புதிது புதிதாக உருவாக்குபவைகளை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். அனைத்துப் புதியவைகளும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகிற்கே இட்டுச் செல்லும். என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். (ஆதாரம். அபூ தாவூத்- திர்மிதி) எனவே மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட எல்லா மூடப் பழக்கங்களை விட்டும், நூதன செயல்களை விட்டும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மார்க்க விஷயங்களை அறிந்துக் கொள்ள அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெறிமுறைகளையும், அடுத்த தலைமுறையினருக்கு அழகாக எடுத்துச் சொன்ன நபித் தோழர்கள் எவரும் மவ்லவி பட்டம் வாங்கியவர்களல்ல. அண்ணல் நபி (ஸல்) என்னும் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் காடம் பயின்றவர்கள்.அந்தப் பல்கலைக் கழகம் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அணு அணுவாக ஆராயப் பட்டு ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டு அருமையான நூல்களாக நம்மிடம் இருக்கின்றன.அனைத்தையும் படித்து அறிந்துக் கொள்ள நமக்கேது ஞானம்? நமக்கேது நேரம்? என்று இருந்து விடக் கூடாது. இருக்கின்ற அறிவை இன்னும் அதிகப் படுத்தும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாமும் இறங்க வேண்டும்.இருக்கின்ற நேரத்தில் எவ்வளவோ சாதனைகள் நிகழ்த்த முடியும். மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள - மாநபி வழியை அறிந்துக் கொள்ள - சரியான வழியில் நாமும் நடக்க - நம்மைச் சார்;ந்தோருக்கும் போதிக்க - சிறிது நேரத்தையேனும் செலவிட வேண்டும்.தூய்மையான இஸ்லாத்தில், இடைக் காலத்தில் புகுந்து விட்ட மடமைகளை, பித்அத்துகளை, அநாச்சாரங்களை, மூடப் பழக்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வாழ்வோம்.பிறகு நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) பிழை பொறுக்கத் தேடி தங்களை சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 16:119)திருக் குர்ஆன் காட்டிய திருவழியில்திரு நபி வாழ்ந்த பெரு வழியில்நபித் தோழர்கள் வாழ்ந்த நல்வழியில்அவ்லியாக்கள் வாழ்ந்த அறவழியில்இஸ்லாத்தை அதன் தூய வடிவில்பின்பற்றி வாழ்வோம். இனியேனும்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
">Link


மூடப் பழக்கங்கள் 3

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
பாகம் 3
முரீது வாங்க வேண்டுமா?

பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

மீலாது விழா

அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது. தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா? நம்மை விட பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?அண்ணல் நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும், எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல7;வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவை கொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட அண்ணல் நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும் சொல்லியிருப்பார்கள்.மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அமிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.

சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுதளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அலல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

எங்கே போனது மனித நேயம்?

மன நிலை சரியில்லாதவர்களையும், நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களையும், உரிய மருத்துவம் செய்யாமல் தர்காக்களில் கொண்டு போய் தங்கவைப்பதற்கும், இறுதியில் நல்லவர்கள் கூட பைத்தியங்கள் ஆக்கப் படுவதற்கும், மூட நம்பிக்கைகளே முக்கிய காரணம்.சிகிச்சை என்ற பெயரில் தர்காக்களில் நடக்கும் சித்திரவதைகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.ஏர்வாடி தர்காவில் மனநோய்க்காகச் சிகிச்சைக்கு(?) வந்து, தனியார் காப்பகம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப் பட்ட நிலையில் மன நோயாளிகள் தங்கியிருந் கூடாரம் நள்ளிரவில் தீப்பிடிக்க, கதறிக் கதறிக் கூக்குரலிட்டு, காப்பாற்ற யாருமின்றி, கடைசியில் கரிக் கட்டைகளாய் கருகிப் போனவர்களின் கதறல் சப்தமும், ஓலக் குரல்களும், இன்னுமா உங்கள் இதயங்களைப் பழியவில்லை? எங்கே போனது மனித நேயம்?தர்காக்கள் என்னும் கல்லறைகளில் - மீண்டும் எழ முடியாத நீண்ட நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தம இறை நேசர்கள், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பதாக எந்தப் பைத்தியங்கள் கூறின?உண்மையில், இப்படிச் சொன்ன பைத்தியங்கள் தான் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் படவேண்டும். அப்போது தான் மனநலம் குன்றியவர்களின் மரண வேதனை இந்த மனித மிருகங்களுக்குப் புரியும்.நீண்ட நாட்கள் மருத்துவம் செய்தும் நோய் குணம் அடையவில்லை என்றால், இன்னமும் என்ன நோய் என்பது சரியாகக் கண்டறியப் படவில்லை என்றும், உரிய மருத்துவம் செய்யப் படவில்லை என்று தான் பொருள்.'அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் மருந்தில்லாமல் அல்லாஹ் வைக்கவில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி)

வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?

அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும்.இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத் தான் தோன்றும்.முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம்.ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50: 16) என்று திருடறை குர்ஆன் பறை சாற்றுகின்றது.நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது 'நடந்தது என்ன' என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும் தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். எசய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்டியானால் நாம் செய்து விட்ட தவறான செயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவே இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5) என்று குர்ஆன் கூறுகின்றது. ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது.சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது.....எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)

கராமத்துகளும் - கட்டுக்கதைகளும்

இறைத் தூதர்கள் பலருக்கும், இறைவன் அளித்த அற்புதங்கள் அனைத்தும், இறைவனின் அனுமதியுடன் நடத்தப் பட்டதாக இறை மறை குர்ஆன் கூறுகிறது.உதாரணத்திற்கு ஒரு வசனம்.ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது.... இன்னும் நீர் களி மண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி, அதில் நீர் ஊதிய போது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும், சுகப் படுத்தியதையும், இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப் படுத்தியதையும், (நினைத்துப் பாரும்.).... (அல் குர்ஆன் 5 : 10)இந்த வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஒவ்வொரு அற்புதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும், மீண்டும் மீண்டும் என் உத்தரவைக் கொண்டு என்னும் வார்ர்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான் என்பதும், நபிமார்கள் கூட தம் விருப்பத்துக்கு எதையும் செய்ய வில்லை என்பதும், அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டே அனைத்து அற்புதங்களும் நிகழ்ந்தன என்பதும் புரியும்.ஆனால் அவ்லியாக்கள் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகள் பெரும்பாலும் அவ்லியாக்கள் அவரவர் விருப்பப்படி தாமே நிகழ்த்தியவையாகவும், மார்க்கத்திற்கு முரணானவையாகவும் இருக்கும். அவ்லியாக்களின் சரித்திரங்களை எழுதியவர்கள் அப்படித்தான் கதைகளை சித்தரிக்கின்றனர்.அவ்லியாக்களின் பெயரால் கூறப்படும் கதைகளைக் கவனித்தால்- இந்தக் கதைகளுக்கும் அந்த இறை நேசர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இந்தக் கதைகள் அனைத்தும் அந்த இறை நேசர்களைக் கேவலப் படுத்தும் கதைகள் தானே தவிர, இறை நேசர்கள் புகழை உயர்த்தும கதைகளல்ல என்பதும் புரியும்.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) தம் சீடர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்களாம். சீடர்கள் 'பசிக்கிறது' என்று கூற அங்கிருந்த ஒரு சேவலைப் பிடித்து அறுத்து அனைவரையும் சாப்பிடச் சொன்னார்களாம். சேவலுக்கு உரிமையாளர் வந்து 'எனது சேவல் எங்கே?' என்று கேட்க, தின்று விட்டுப் போட்ட சேவலின் எலும்புகளை ஒன்று கூட்டி கும் பி இத்னில்லாஹ் என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூற சேவல் உயிர் பெற்று எழுந்நததாம்.இது ஒரு பிரபல்யமான கதை. பல் வேறு இடங்களிலும் இந்தக் கதையின் நாயகர்கள் மாறுவார்கள். அல்லது பிராணிகள் மாறும்.கதை என்னவோ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.அடுத்தவர் பிராணியை அவரின் அனுமதியின்றி எந்த இறை நேசராவது அறுத்துச் சாப்பிடுவாரா? அறுத்துச் சாப்பிட்டது உண்மையென்றால் அவர் எப்படி அவ்லியாவாக இருக்க முடியும்? இந்த அளவுக் கெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. அடுத்தவர் பிராணியை அனுமதியின்றி அறுத்துச் சாப்பிடுவது ஹராம் ஆயிற்றே! ஹராமானதைச் சாப்பிட்டு விட்டு கும் பி இத்னில்லாஹ் என்று சொன்னால், அல்லாஹ் எப்படி எற்றுக் கொள்வான்? அடுத்தவர் பிராணியைத் திருடிச் சாப்பிட்டு விட்டுத் தனது அற்புதத்தை நிரூபிப்பதை விட, தனது மந்திரச் சக்தியால் ஒரு பிராணியையே வரவழைத்திருக்கலாமே!நாகூரில் அடக்கமாகி இருப்பதாகக் கூறப்படும் இறை நேசர், வெற்றிலையை மென்று ஒரு பெண்ணுக்குக் கொடுத்துக் குழந்தை பிறக்க வைத்தாராம்! இயற்கை நியதிக்கும், இறைவனின் ஏற்பாட்டுக்கும், முரணான இது போன்ற முட்டாள் தனத்தை எல்லாம் அற்புதம் என்று நம்புவது மிகப் பெரும் பாவம்.உலக வரலாற்றிலேயே அற்புதமாகக் குழந்தை பிறந்தது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் தான். ஈஸா நபி (அலை) அவர்கள் பிறந்த அற்புதத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.இதைத் தவிர, மற்ற அனைத்தும் கட்டுக் கதைகளே! இது போன்றக் கதைகளை நம்புவது இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். ஜாக்கிரதை!

குத்பிய்யத் ஒரு கொடும் பாவம்'

யார் தனிமையில் அமர்ந்து ஆயிரம் முறை என் பெயரைக் கூறி என்னை அழைக்கிறாரோ அவரது அழைப்பின் அவசரத்திற்கேற்ப ஓடி வந்து உதவி செய்வேன்' என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்களாம்.யா குத்பா என்னும் நச்சுக் கவிதையில் வரும் ஷிர்க்கான இந்த வார்த்தைகளை, ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்த ஒரு இறை நேசர் ஒரு போதும் கூறியிருக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்.இந்த நச்சுக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு சில கொடியவர்கள், 'குத்பிய்யத்' என்னும் பெயரில் இருட்டறையில் நின்று கொண்டு 'யா முஹ்யித்தீன்' என்று ஆயிரம் முறை ஓலமிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை இவர்கள் உணரவில்லை.எத்தனை பேர் எங்கிருந்து எந்நேரம் அழைத்தாலும் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இது அவனுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என்று கருதுவதும் - ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவதும், எவ்வளவு பயங்கரமான ஷிர்க் என்பது இன்னுமா புரியவில்லை? இந்த ஷிர்க்கை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.ஷிர்க்கின் பித்தம் தலைக்கேறிப் போனவர்களால் மட்டுமே அல்லாஹ்வையும் அப்துல் காதிர் ஜீலானியையும் சமமாகக் கருதமுடியும். இது போன் ஷிர்க்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் சிலர் அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக யா முஹ்யித்தீன் என்று அபயக் குரல் எழுப்புகின்றனர். இது மிகப் பெரிய பாவம் என்பதை என்பதை தாய்மார்கள் உணர வேண்டும்.உண்மையான அழைப்பு அவனுக்கே உரியதாகும். எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்.(அல் குர்ஆன் 13 : 14)
---------------------
கொடியை வணங்கும் கொடிய பழக்கம்
ஊருக்கு ஊர் கொடி மரங்கள் நட்டு பச்சைக் கொடியை அதில் பறக்க விட்டு. புனிதம் என்று கருதி பூமாலைப் போட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி, ஆண்டு தோறும் கொடியேற்று விழா நடத்துவது பல் வேறு ஊர்களிலும் பழக்கத்தில் உள்ளது.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் தான் பெரும்பாலும் இந்தக் கொடிகள் ஏற்றப் படுகின்றன. அப்துல் காதிர் ஜீலான் (ரஹ்) அவர்களுக்கும் இந்தக் கொடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற சாதாரண அறிவு கூடச் சமுதாய மக்களிடம் இல்லாமல் போனது எப்படி?கொடியை வணங்கும் இக் கொடிய பழக்கம், இஸ்லாமிய சமுதாயத்தில் இடம் பிடித்தது எப்படி?பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரால் கூட உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத கொடிகள் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறியது எப்படி?நாட்டுக்கு நாடு கொடிகள் உண்டு. கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுவது உண்டு. போர்க் களங்களிலும்;, போராட்டக் களங்களிலும் கொடிகள் உண்டு. அரசியல் கட்சிகளுக்குக் கொடிகள் உண்டு.அவ்லியாக்கள் பெயரால் கொடிகளை எந்தக் கொடியவர்கள் இஸலாமிய சமுதாயத்தில் ஏற்றி வைத்தார்கள்?இவர்கள் கொடி மரங்களில் கொடிகளை ஏற்ற வில்லை. ஏதுமறியா பாமர மக்களின் ஈமானைக் கழுவில் ஏற்றி விட்டார்கள். மார்க்கம் அறியாத மக்களின் பக்தியை மரத்தில் ஏற்றி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கூண்டில் ஏற்றி விட்டார்கள். இறையச்சத்திற்குப் பதிலாக இணை வைத்தல் என்னும் ஷிர்க்கை இதயத்தில் ஏற்றி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகும் சரி, எந்த நபித் தோழரும் இப்படிக் கொடியேற்றிக் குதூகலிக்க வில்லை.பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற இச்சம்பவம் ஒரு மரத்தடியில் நடை பெற்றது. நாளடைவில் அந்த மரத்தை மக்கள் புனிதமாகக் கருதலாயினர். ஹஜ்ரத் உமர் (ரலி) உடனே அந்த மரத்தை வெட்டி எறியும்படி உத்தரவிட்டார்கள்.மூட நம்பிக்கையின் வாயில்கள் எல்லா வகையிலும் மூடப்பட்ட ஒரு மார்க்கத்தில், சின்னஞ்சிறு விஷயத்தில் கூட ஷிர்க் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் சில கொடியவர்கள் இந்தக் கொடியேற்றப் பழக்கத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டனர்.புகழ் மிக்க இறை நேசர்கள் பெயரால் - ஊருக்கு ஊர் தர்காக்களை உருவாக்க முடியாமல் கொடி மரங்கள் வைத்துக் கொள்ளிக் கட்டைகளால் தம் அரிப்பைச் சொரிந்துக் கொள்ளும் கொடியவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.கொடி மரங்களுக்கு மகிமை உண்டென்று மனதால் கூட நம்புவதும், அவற்றைப் புனிதம் என்றுக் கருதி சுற்றி வருவதும், தொட்டு முத்தமிடுவதும். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நேர்ச்சை செய்வதும், காணிக்கை செலுத்துவதும், மார்கத்தில் கொடிய குற்றம் என்பதை இனியேனும் உணர வேண்டும்.இறை நேசர்கள் மீதுள்ள கண்ணியம் நமது இதயத்தில். கொடிய குற்றத்தை ஏற்படுத்தும் கொடிகள் இனி நமது காலடியில்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
">Link



விருப்ப மொழியில் குர்ஆன்