Nov 16, 2007

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 3

துல் ஹஜ் எட்டாம் நாள்-
ஹஜ்ஜின் முதல் நாள்
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர் இல்லங்களிலிருந்து புறப்பட்டு வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான் ஆரம்பம்.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்று வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும் தங்கியிருந்த ஹாஜிகள்- ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா வந்து சேருகின்றனர்.
'இப்ராத்' எனும் வகை ஹஜ் செய்ய, இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்' எல்லையில் குளித்து இஹ்ராம் அணிந்து நேரடியாக மினா வந்து சேருகின்றனர்
மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தான் தங்க வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர வேறு எதுவுமே இருக்காது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடற்து கொண்டிருந்தன. தனித்தனியாக கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்துக் கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதையொட்டி, கூடாரங்களில் சமையல் செய்வதை சவூதி அரசு முதலில் தடை செய்தது.அதற்குப் பகரமாக, அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார முறைப்படி உணவைத் தயார் செய்து - விநியோகிக்கும் பொறுப்பைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.
சில ஆண்டுகளுக்கு முன், துணிகளால் அமைக்கப்படும் கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு, சவூதி அரசு அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
மினாவில் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. தடையின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான கழிவறை வசதி, ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்களிலிருந்து ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும் கண்காணிக்கின்றனர். கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் தீயணைப்புக் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவ வசதி
மினாவில் ஹாஜிகளுக்கு, சகல விதமான அதி நவீன மருத்துவ வசதிகளுடன், மிகப் பிரம்மாண்டமான, அரசு மருத்துவ மனை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நூறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம் மருத்துவ மனையில், அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்குகிறது. உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எல்லா வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
பல் வேறு நாடுகளின் தூதரகங்களும், தத்தம் நாட்டினருக்காக மருத்துவ சேவை மையங்கள் அமைத்து சேவை புரிகின்றன. பல் வேறு தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார், நடமாடும் மருத்துவ ஊர்திகள், முதலுதவி வசதிகளுடனும், மருத்துவர்கள் மற்றும் ஆண் பெண் செவிலியர்களுடனும், எப்போதும் மினாவைச் சுற்றி வருகின்றன.ஒவ்வொரு வருடமும், இந்தியா பாகிஸ்தான், உட்பட பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் மருத்துவர்களும், உதவியாளர்களும், வரவழைக்கப் பட்டு மருத்துவப் பணியில் ஈடுபடு;த்தப் படுகின்றனர்.
சவூதி செம்பிறைச் சங்கத்தின் மருத்துவச் சேவைகள் மறக்க முடியாதவை. பல்வேறு இடங்களில் தற்காலிக சேவை மையங்கள் அமைத்து செம் பிறைச் சங்கம் ஹாஜிகளுக்கு இலவச மருத்துவச் சேவை செய்கின்றது.ஆபத்தான நிலையில் இருப்போரை- அருகில் உள்ள மக்காவின் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல செம் பிறைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும், பல நூற்றுக் கணக்கில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் எப்போதும் தயார் நிலயில் நிற்கின்றன.
சாரணர் படை
சவூதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை மாணவர்களின் பணி மகத்தானது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்பப் பணி செய்கின்றனர்.இயலாத மற்றும் வயது முதிர்ந்த ஹாஜிகளை அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்களை அவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளைக் கொண்டு - இருப்பிடத்தை அறிந்து - உரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.மினாவில் மட்டுமின்றி - ஹாஜிகள் அடுத்தடுத்தக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள் அனைத்திலும், சாரணர் படை மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகின்றனர்.
தொலைத் தொடர்பு வசதி
தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத் தலங்கள் அனைத்திலும், நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன தொலை பேசி மையங்கள்.
உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம் நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.அவரவர் நாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு - புனித ஹஜ்ஜை இனிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள - மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காவல் துறையினரின் கண்காணிப்பு
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஒன்று கூடும் புனித ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காவல் துறை எல்லா வகையானக் கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும் இருக்காது.நியாய உள்ளம் படைத்த எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் இதற்கு சாட்சி பகர்வர்.கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கொண்டவர்கள்-அதிலும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வந்த புண்ணிய சீலர்கள்- எவ்வளவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
காவல் துறையும், ராணுவமும், தீயணைப்புப் படையினரும், சாரணர் படையும், தரையில் தங்கள் கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்- அனைத்தையும் கண்காணித்தபடி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்- அத்தனை இலட்சம் ஹாஜிகளும், இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட மாளிகைகளில் வசித்தவர்கள்- சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே மினாவில் வந்து கூடாரங்களில் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர வாழ்க்கைப் பயணத்தில்- சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழ்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது போல் மினாவில் இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில் தங்கி ஹாஜிகள் இளைப் பாறுகின்றனரோ!
இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற வரவில்லை! பொன்னான பொழுதை வீணில் போக்க இங்கு வரவில்லை! காட்சிகளைக் கண்டு களிப்படைய வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர். இறைவனுக்காக இங்கு வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு வந்திருக்கின்றனர்.
குழுக்களாகவும், தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை தியானத்தில் கழிக்கின்றனர். இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான தொழுகைகளிலும், பிரார்த்தனையிலும் திக்ருகளை மொழிவதிலும் கழிக்கின்றனர்.
துல் ஹஜ் எட்டாம் நாள்-
ஹஜ்ஜின் முதல் நாளாகிய இன்றைய தினத்தின் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர்.இன்றைய தினத்தின் இரவுப் பொழுதும் இங்கேயே இறை தியானத்தில் கழிகின்றது. இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ- சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள் கூட - நடு நிசித் தொழுகையான தஹஜ்ஜஜுத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய, நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது சிறந்ததாகும்.
மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்த போது நான் நபி (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.
என்று ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)
நான் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்க காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று இப்னு மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலை பஜ்ருத் தொழுகையையும்- இங்கு மினாவிலேயே நிறை வேற்றி விட்டு - அடுத்தக் கடமையை நிறைவேற்ற அரபாத்தை நோக்கி ஹாஜிகள் புறப்படுகின்றனர்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்-
ஹஜ்ஜின் 2 ஆம் நாள்
இன்று தான் ஹஜ்.'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி
இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான். அந்தப் புனித நாள் இன்று தான்.
அரபாத் மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த ஒரு பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது. மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள் அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பெரும் பாலானவர்கள் மரங்களின் நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
கடும் கோடைக் காலங்களில்- ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக- அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப் பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த பாலைவனத் திடல் முழுவதையும் இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின் மனங்களையும் தான்.
புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும் வெப்பம் கூட ஒரு பொருட்டாகத் தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண- சகல ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை.
உணவு ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும், தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப் பட்டுள்ளன.எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளை- பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு 'ஃபீ ஸபீல்' (இறைவனின் பாதையில் இலவசம்) என்று கூவிக் கூவி அழைத்து வாரி வழங்குகின்றனர்.பழங்கள், பழச்சாறுகள், ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது. தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து- வல்ல இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக- ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும் அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப் படுகிறது.
மன்னர் பஹத்- திருக் குர்ஆன் வளாகத்தில் அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும் ஒலி- ஒளி நாடாக்கள்,ஹஜ் மற்றும் அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், 'இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்' சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள், இவை அனைத்துமே இலவசமாக வழங்கப் படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப் பயன் பெறுகின்றனர்.
லுஹரையும்அஸரையும் சேர்த்துத் தொழுதல்
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது, 'மஸ்ஜிதுன்னமிரா' என்னும் மாபெரும் பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின் உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும் ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில் இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அப்படித் தான் தொழுதார்கள்.
இப்னு சுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர் (ரலி) இடம், 'அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற நாடினால், அரபா நாளில் நடுப் பகலில் தொழுவீராக! என்றார். அப்போது, இப்னு உமர் (ரலி) 'ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும், அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்' என்றார்.நான் 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளர்களா?' என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி வழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக் கேட்டார்.
அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் (ரலி) ஆதாரம்: புகாரி (1662)
மஸ்ஜிதுன்னமிராவிலும்- அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக் கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து, லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக் கொள்கின்றனர். அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர், அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன் தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள் அனைத்தையும்- தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப் படுகின்றது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக் கண்டு களிக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப் பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்- அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரையாகும்.
அதோ! தூரத்தில் தெரிகிறதே! அது தான் 'ஜபலுர் ரஹ்மத்' என்னும் அருட்கொடை மலை. இம் மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தங்கியிருந்தார்கள்.அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி மலையின் மீது ஏறுகின்றனர். மலை முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள். ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால் மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத் பெருவெளியில் நின்று- இறைவனை வணங்க வேண்டும்.மாலைப் பொழுது நெருங்க நெருங்க, தல்பிய்யா முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது.
தனித் தனியாக, சிறு சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில் ஈடுபட முடியுமோ அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த வண்ணம், இந்தப் பொன் மாலைப் பொழுதில் ஹாஜிகள்- பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர். இதயம் திறந்து இறைவனிடம் மன்றாடுகின்றனர். இனியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும் கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத் பெருவெளியில் கோடாணு கோடிப் பேர்களுடன் கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல் நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில்- நிராயுத பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து அழுகிறார்கள்.
வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு, கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி சொல்லவும் வைக்கப்படும்- அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள்.
மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை நினைத்து அழுகிறார்கள்.
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்;.
அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார்.
ஆப்கானிய மொழி நமக்குப் புரியவில்லை.
கதறி ஒருவர் அழுகின்றார்.
கருப்பு நிறத்து ஹபஷி அவர்.
பக்கத்தில் ஒருவர் பிரார்த்திக்கிறார்.
பாகிஸ்தானிய ஹாஜி அவர்.
உருது மொழியில் கேட்கின்றார்.
அங்கே ஒருவர் அழுகின்றார்.
அரபி மொழியில் இறைஞ்சுகிறார்.
இங்கே ஒருவர் அழுகின்றார்.
இனிய தமிழில் இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள்.
எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள்.
தமக்காக இறைஞ்சுகிறார்கள்.
தம் பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள்.
உடன் பிறந்தவர்களுக்காக,
உற்றார், உறவினர்களுக்காக,
உலக முஸ்லிம்களுக்காக இறைஞ்சுகிறார்கள்.
பரந்து விரிந்த இந்த அரபாத் பெருவெளி முழுவதும்
ஏங்கிய நெஞ்சங்களும்,
ஏந்திய கரங்களும்,
அழுத கண்களும்,
பிரார்த்தித்த வாய்களும் தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப் பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன் கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அருட் கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி வழங்குகிறான். இப்புனித நன்னாளில், இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஹலாலான உணவுண்டு, ஹலாலான உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய பொருளில் செலவு செய்து வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும், நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும் என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்- தூய்மையானவர்களாக- பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக- குறைகள் மறைக்கப் பட்டவர்களாக- குற்றங்கள் நீக்கப் பட்டவர்களாக- இவர்களை இறைவன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம், சூரியன் உச்சியை விட்டு சாய்ந்ததிலிருந்து- மறையும் வரை- எவர் சிறிது நேரமேனும், இந்த அரபாத் பெருவெளியில் நிற்க வில்லையோ- அவருக்கு ஹஜ் இல்லை.ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே- இந்த நேரத்தில்- இந்தத் திடலில் நின்று பிரார்த்திப்பது தான். ஏனெனில், 'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி.
திரு மறை குர்ஆனின்- சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத் பெருவெளியில் தான் அருளப்பட்டது
.....இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்.
(திருக் குர்ஆன் 5:3)
அரபாத்தை விட்டுப் புறப்படுதல்
மஃரிபுடைய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில்- ஆதவன் தனது அரும் பணியை நிறைவு செய்து விட்டு- அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப் போகிறது. வாழ்வில் கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின் இறுதி நேரம் வரை ஹாஜிகள் பிரார்த்தனையில் ஈடு படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர். சூரியன் நன்றாக மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம் முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து புறப்பட வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்று- மஃரிபையும் இஷாவையும்- இஷாவுடைய நேரத்தில் முஸ்தலிபாவில் தொழவேண்டும். இது தான் நபி வழி.
இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஆதாரம்: புகாரி (1674)
இப்னு உமர் (ரலி) முஸ்தலிபாவில் (மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: திர்மிதி (813)
இதோ மாலைக் கதிரவன் மறைந்து விட்டான். புனித ஹாஜிகளும் அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட பாவமன்னிப்பை அடையப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும் புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! புனித ஹாஜிகளாக- புண்ணிய சீலர்களாக புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம் கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன் முஸ்தலிபாவை நோக்கி!வரிசை வரிசையாக வாகனங்கள்- அனைத்துமே முஸ்தலிபாவை நோக்கி!
திக்கெட்டும் கேட்கிறது தல்பிய்யா முழக்கம்.
மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். புனித ஹாஜிகள் முஸ்தலிபா வரும்போது இந்த இடத்தில் நின்று இறைவனை நினைவு கூறுகிறார்கள். ஏனெனில் இது இறைவனின் கட்டளையாகும்
.....அரபாத் பெரு வெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள். அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக் குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி- இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு வந்து-இந்த இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின் பிற்பகுதியில், எங்கு நோக்கினும் பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத் என்னும் நடுநிசித் தொழுகைக்கான பாங்கு. தனித்தனியாகவும், கூட்டமாகவும் நடுநிசித் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது. அதற்கு முன் மறுபடியும் பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல் பஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கு சப்தம்.களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன் எழுகின்றனர். பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை முடித்து விட்டு இனி அடுத்தடுத்தக் கடடைகளை நிறைவேற்ற அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன் நேரத்திலேயே தொழுது விட வேண்டும். இது தான் நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று (முஸ்தலிபாவில்) மஃரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதது. இன்னொன்று பஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவை விட்டு புறப்பட வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர் மினாவை நோக்கி!
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (819)
பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது தவறில்லை. அப்படியே முன் கூட்டியே மினா சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். 'சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்' எனவும் கூறியனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (817)
துல் ஹஜ் 10 ஆம் நாள்-
ஹஜ்ஜின் 3 ஆம் நாள்
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு, இன்று தான் ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள். ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத் தொழுகையை, முஸ்தலிபாவில் முடித்து விட்டு மினாவுக்குச் செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் அவர்களை- அல்லாஹ்வின் ஆணைப்படி அறுத்துப் பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், அவன் மீது கல் வீசி விரட்டினார்கள். அதன் நினைவாக- ஹஜ்ஜுக்கு வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும் கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில்
ஒன்றாகும்.இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல் நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று 'ஜம்ரத்துல் அகபா'வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த ஜம்ரத்துல் அகபாவுக்கு 'ஜம்ரத்துல் ஊலா' என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்தார்கள். அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து விலகிய பின் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (818)
ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல் எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்- செருப்புகளையும் வீசுகிறார்கள். இது தவறு. கல் எறியும் கடமைக்கு இவை முரணானதாகும்.
நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) ஆதாரம்: திர்மிதி (821)
கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில் தங்கியிருப்பதில் சிரமம் இல்லை. ஆனால், ஜம்ரா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது- கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட நெரிசலில் தவறிவிட வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து விட்டால்- குனிந்து எடுக்க முயலக் கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே தள்ளிவிடலாம்.
கூட்டத்தை சமாளிக்க- 'கல்லெறியும் இடம்' இப்போது, மக்கள் போவதற்கும், வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர்; பலமானத் தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர். பல் வேறு வருடங்களில்- கூட்ட நெரிசலில் இந்த ஜம்ராவில் தான் விபத்துக்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட ஏற்பட்டதுண்டு. இப்போது நெரிசலின்றி மக்கள் சென்று வர பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூட்டமாகச் சென்று- ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து திரும்புகின்றனர் ஹாஜிகள்.
கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக் கொண்டிருந்த தல்பிய்யாவை நிறுத்தி விடுகின்றனர். இதுவே நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகின்றவரை தல்பிய்யா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: பள்ல் பின் அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1685)
குர்பானி கொடுப்பது
இனி அடுத்த செயல், அறுத்து பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்,' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)
தனியொரு நபர் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அறுத்துள்ளோம் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (828)
ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் இடத்திற்கு வந்து குர்பானிக்காகப் பிராணிகளை வாங்கி அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (திருக் குர்ஆன் 22:37)
ஆண்டு தோறும்- வெளி நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப் படுகின்றன.இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பிராணிகளும், கால் நடை மருத்துவர்களால், முறையாகப் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.ஹாஜிகள் நேரடியாகச் சென்று, பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை கொடுத்து வாங்கி அவரவர் தம் கரங்களால் அறுக்கின்றனர். இயலாதவர்கள், அடுத்தவர்களை நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து- வங்கிகளில் கூப்பன்கள் விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்திவிட்டால், துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள் அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப் படுத்தப்பட்டு- வெளி நாடுகளில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அரசு கண்காணிப்பில், பல்வேறு இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன.புனிதத் தலங்கள் அனைத்திலும், சிறப்புக் கிளைகளை அமைத்து அல்ரஜ்ஹி வங்கி குர்பானி கூப்பன்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது. ஹாஜிகளுக்காக இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான டன் இறைச்சி- பதப்படுத்தப்பட்டு- இந்த முறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எத்தனையோ நாடுகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டு- அளப்பெறும் நன்மையை அடைந்த புனித ஹாஜிகள், தமது அடுத்த செயலாகிய- தலை முடியைக் களையத் தயாராகின்றனர்.
தலை முடி களைதல்
ஆண்கள் தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்ளவோ, கத்தரித்துக் கொள்ளவோ செய்யலாம், தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும், அதைக் கூறிய போது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1728)
தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த இஹ்ராம் உடைகளைக் களைந்து விட்டு- வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர்.இனி அடுத்தக் கடமை 'தவாபுஸ் ஸியாரா' செய்வதாகும்.
தவாபுஸ் ஸியாரா
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது.ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர்.
இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- புனிதக் கஃபாவை தவாப் செய்திருக்கலாம். அப்போதுள்ள கூட்ட நெரிசலே அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் அத்தனை இலட்சம் ஹாஜிகளும், தவாபுஸ்ஸியாராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து விடுகின்றனர்.
இன்றைய தினம், மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.கஃபா என்னும் இறையாலயத்தை- இன்றைய தினம் புனித ஹாஜிகள் சுற்றி வரும் காட்சியை- மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது- மூன்றாவது தளங்களில் நின்று பார்த்தால்- பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி! ஏறக் குறை இருபது இலட்சம் பேர் சுற்றுகிறார்கள். கடல் அலையைப் போல் - மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.
ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். புதிதாக நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத் தொடங்குகின்றனர்.இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல்- இன்று பகல் முழுவதும் நீடிக்கின்றது. இரவு முழுவதும் தொடர்கின்றது. உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்- கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல் சுற்றுகிறார்கள்.
இன்றைய தினம் காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக தவாபும் செய்கின்றனர்! இயலாமையும் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போக- இளமையும் வலிமையும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?இறைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு வந்தவர்களுக்கு, உற்சாகமும், உத்வேகமும் தாமாக வந்து விடுமோ!
இன்றைய தினத்தின் செயல்களை, தவறுதலாகவோ, அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும் குற்றமில்லை.
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!' என்றார். இன்னொருவர் எழுந்து 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு முன் பலியிட்டு விட்டேன்.' என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே, நபி (ஸல்) அவர்கள், 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) ஆதாரம்: புகாரி (1737)
துல் ஹஜ் 11 ஆம் நாள் -
ஹஜ்ஜின் 4 ஆம் நாள்
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள் மினாவில் தங்கியிருந்த கூடாரங்களுக்கு- மறுபடியும் வந்து சேருகின்றனர்.இன்று முதல், மூன்று தினங்கள், ஒவவொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு- மூன்று ஜம்ராவுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (தல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரி (பாடம் 134)
ஹாஜிகள் அவரவர் தம் கூடாரங்களிலிருந்து, ஜம்ராவுக்குச் சென்று கல்லெறிகிறார்கள். இன்று முதல், மூன்று தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று ஜம்ராக்களிலும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்று கைகளை உயர்;த்தி துஆச் செய்வார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப் பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரி (ரலி) ஆதாரம்: புகாரி (1753)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்துக் காட்டிய அதே முறையைப் பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில் கல் எறிகிறார்கள்.
முதல் நாள் இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில் வருவதால்- கூட்டம் சற்று குறைவாகத் தெரிகிறது.ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு மினாவில் அவரவர் கூடாரங்களில் சென்று ஹாஜிகள் ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற நேரமெல்லாம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழிக்கின்றனர்.
மினாவில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ் கமிட்டியினராலும்- தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு அந்தந்த நிறுவனத்தினராலும், தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு நாட்டினருக்காகவும், அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில் அந்தந்த நாட்டு தேசியக் கொடி அடையாளத்துக்காக பறக்கவிடப்பட்டுள்ளது.
உள் நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் வந்தவர்கள் கூடாரங்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர்.கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள், தங்குவதற்கென- நீண்ட பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் இலவசகமாகத் தங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலும் தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
துல் ஹஜ் 12 ஆம் நாள்
ஹஜ்ஜின் 5 ஆம் நாள்
முன் தினத்தைப் போலவே - இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டு மூன்று ஜம்ராக்களிலும், முறையே ஏழு கற்கள் வீதம் எறிகின்றனர்.
முதியவர்கள் மற்றும், இயலாதவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள், முதலில் தமக்காக எறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தம்மைப் பகரமாக நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும்.வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு கல்லாக எறிகின்றார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு ஜம்ராக்களிலும் நின்று துஆச் செய்து விட்டு மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி விடுகின்றனர்.
துல் ஹஜ் 13 ஆம் நாள்
ஹஜ்ஜின் 6 ஆம் நாள்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.(இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்! (திருக் குர்ஆன் 2:203)
11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய இரு தினங்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் புறப்படலாம். ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட வேண்டும். இன்று மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டுத் தான் புறப்படவேண்டும்.
இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும் கல்லெறிந்து பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி விட்டுத் தான் புறப்படுகின்றனர்.
இன்றைய தினத்துடன் புனித ஹஜ்ஜின் அனைத்து செயல்களும் நிறைவடைகின்றன.எந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற- இப்பூவுலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்- இப்புனித பூமிக்கு வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின் அனைத்து செயல்களும் இன்றோடு முடிவடைந்து விட்டன. அல்ஹம்து லில்லாஹ்

ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனத்தைத் தவிர வேறில்லை என்பது நபி அமாழி

புனிதப் பயணம் தொடரும் இன்ஷா அல்லாஹ்

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்